முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘முகம் மாறும் தமிழ் திரைப்படங்கள்’



‘முகம் மாறும் தமிழ்த் திரைப்படங்கள்’ என்பதே தற்போது பேச்சாகயிருக்கிறது. சிற்றிதழ்களிலிருந்து பெரும் வணிக இதழ்கள் வரை தமிழ் சினிமாவின் அண்மைக்கால மாறுதல்களைப் பற்றி பேசுகின்றன. கதை, களன், உள்ளடக்கம், அழகியல், படைப்பாளுமை எல்லாம் மாற்றம் கண்டிருக்கின்றன என்றும், அவை எதிர்காலம் நோக்கிய நற்பார்வையை ஏற்படுத்துகின்றன என்றும் மகிழ்ந்து செய்தி வெளியிடுகின்றன. உண்மைதான், அண்மைக்காலமாய் தமிழ் சினிமா கவனிக்கத்தக்க மாறுதல்களை நோக்கி நடைபோடுகிறது. நல்ல, சிறந்த, நேர்த்தியான சில படங்கள் வெளியாகியிருக்கின்றன.

‘வழக்கு எண் 18/9’, ‘அட்டகத்தி’, ‘மதுபானக்கடை’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனத் தொடரும் அதன் பட்டியல், தமிழ்த் திரையின் ஆரோக்கியமான முகத்தை வெளிக்காட்டுகின்றன. அதே நேரம் ‘ஏழாம் அறிவு’, ‘பில்லா-2’, ‘சகுனி’, ‘தாண்டவம்’, ‘மாற்றான்’ போன்ற பெரிய படங்கள் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. எளிய உள்ளடக்கமும், பொருட்செலவைக் குறைத்தும் எடுக்கப்பட்ட சிறிய, புதிய முகங்களால் உருவாக்கப்பட்டப் படங்கள் நிறைவான வசூலைக் கொடுப்பதும் அதிகப் பொருட்செலவில் பெரிய நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்ட மெகா படங்கள் அடிவாங்கியதையும் கவனிக்க வேண்டும். இது காலம் காலமாய் தமிழ் திரையுலகம்  உணர்த்தும் ஒரு செய்தியைத்தான் மீண்டும் நிரூபிக்கிறது. அது, ஒரு நல்ல நிறைவான திரைப்படம் என்பது நட்சத்திரங்களால் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதும் எளிய நேர்த்தியான ஒரு படைப்பு, அது எத்தகைய சிறிய முதலீடானாலும் அதன் செய்நேர்த்தியின் மேன்மையில் தகுந்த கவனிப்பையும், வெற்றியையும் அடையும் என்பதையும்தான். இதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்களை நாம் அறிவோம்.

சிறிய படங்கள் ஆரோக்கியமான ஒரு பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதற்குப் பல காரணங்களிருந்தாலும் முக்கிய காரணமாய் இன்றைய ‘டிஜிட்டல்’ தொழில் நுட்பம் இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஒரு திரைப்படம் உருவாக காரணமாகிருக்கும் எல்லா துறையிலும் டிஜிட்டல் நுழைந்துவிட்டது. இசையில் ‘கீ போர்டு’, ‘சிந்ததைசர்’, ‘மல்டி டிராக்’ போன்றவையும் படத்தொகுப்பில் ‘AVID’, ‘FCP’ போன்றவையும் வந்து சேர்ந்து பல காலம் ஆகிவிட்டது. அதேபோல படம்பிடிக்கத் தேவையான கேமரா, திரையிடத் தேவையான ‘புரஜக்டர்’ போன்றவற்றிலும் இன்று டிஜிட்டல் அதன் ஆதார தேவையை எட்டி விட்டதை சில வருடங்களாக நாம் அறிந்திருக்கிறோம். ‘Red One’, ‘Alexa’, ‘Canon EOS 5D/7D’ என்றும் ‘QUBE', ‘RDX’, ‘UFO’, ‘dts’, ‘dolby’, ‘Surround Sound, ‘dolby atmos’, ‘aura 3D’ என்றும் நாம் அறிந்து வைத்திருப்பவை அனைத்தும் டிஜிட்டலின் வளர்ச்சியைத்தான் குறிக்கின்றன.

ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமராக்களின் மீது பல அவநம்பிக்கைகள் இருந்தன. அது தரமானதா? செலவை குறைக்க கூடியதா? படச்சுருளுக்கு மாற்றாக அவை இருக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அத்தகைய கேள்விகளை உள்வாங்கிக் கொண்டு டிஜிட்டல் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. எனினும் அத்தகைய கேள்வியிலிருக்கும், அவநம்பிக்கையை டிஜிட்டல் முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டது என்று சொல்லுவதற்கில்லை. ஆயினும் டிஜிட்டல் தொழில்நுட்பம் நம்பத் தகுந்த இடத்தை அடைந்து விட்டது என்பதற்கு ஆதாரம் நாம் மேலே குறிப்பிட்டப் படங்கள் தான். ஆமாம். வழக்கு எண், அட்டகத்தி, மதுபானக்கடை, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற சிறியப் படங்கள் மட்டுமல்ல தாண்டவம், பில்லா-2, மாற்றான், துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற பெரிய படங்களும் டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்திதான் எடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்தாத படங்களே இல்லை எனலாம். முழுமையாக இல்லாவிட்டாலும் தேவைக்கருதி பல காட்சிகள் டிஜிட்டல் கேமராக்களால் எடுக்கப்படுகின்றன.

டிஜிட்டலின் இந்த வளர்ச்சி பல புதிய பாதைகளைத் திறந்து விட்டிருக்கிறது. நொடிக்கு இரண்டாயிரம் ஃபிரேம்கள் எடுப்பது, குறைந்த வெளிச்சத்தில் படம் பிடிப்பது, இடமில்லா சிறிய இடங்களிலும் கேமராவை வைக்க முடிவது (குளிர்ச்சாதனப்பெட்டி, மிதிவண்டி கைப்பிடியில், வாகனச் சக்கரங்களின் இடுக்கில்), உடம்போடு கேமராவை இணைத்துவிடுவது என பல சாத்தியங்களை அது கொடுத்திருப்பதைப் போலவே பொருட் செலவையும் அது குறைத்திருக்கிறது. டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி பெரிய படங்களையும் பல கோடிகள் செலவழித்து எடுக்கலாம், சிறிய படங்களையும் எடுக்கலாம். நாம் இங்கே கவனிக்க வேண்டியது சிறிய படங்களில் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தினால் தரம் இருக்குமா? அது ஒரு நேர்த்தியான படமாக உருவாகுமா? என்பதைத்தான்.

இக்கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாது எனினும் ஒற்றை வார்த்தையில் பதிலாக சொல்ல வேண்டுமானால்,  ‘இருக்கும்’ என்றுதான் சொல்ல வேண்டும். நேர்த்தியாக, நேர்மையாக, தகுதி வாய்ந்த கலைஞர்களால், தொழில்நுட்பாளர்களால் உருவாக்கப்படும் டிஜிட்டல் திரைப்படம் தரமானதாக, நேர்த்தியானதாக இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பம், திரைப்பட உருவாக்கத்திலிருக்கும் பல படி நிலைகளை குறைக்கிறது. உதாரணமாக.. படச்சுருளைப் (Film) பயன்படுத்தி படம் பிடிக்கும்போது, படம்பிடிக்கப்பட்ட படச்சுருள்,  லேபிற்கு (Lab) அனுப்பப்பட்டு, டெவலப் செய்யப்பட வேண்டும். பின்பு அவற்றை பிரதி (Print) எடுத்து அல்லது டெலிசினி செய்துதான் பார்க்க முடியும். அதாவது இன்று பதிவு செய்யப்பட்ட காட்சியைப்பார்க்க குறைந்தது ஒருநாள் அவகாசமாவது தேவைப்படும். ஆனால் டிஜிட்டலில் எடுத்த காட்சியை, அடுத்த கணத்திலேயே பார்க்க முடியும். மேலும் அதற்குத் தேவையான செலவுகளையும் குறைக்க முடியும். இவ்வகையில் டிஜிட்டல் என்பது பயனுள்ளதாகிருக்கிறது. மேலும் படத்தொகுப்பு, வண்ணம் நிர்ணயித்தல், பிரதி எடுத்தல் என எல்லா நிலைகளிலும் டிஜிட்டல் அடைந்திருக்கும் முன்னேற்றமும் வளர்ச்சியும், அதன் வாயிலாகக் கிடைக்க கூடிய சாத்தியத்தையும், வசதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை நாம் தடுத்துவிட முடியாது/ கூடாது. 1987-இல் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆவிட் தொழில்நுட்பத்தை’ (Avid Technology)1994-இல் மகாநதி படத்தின் மூலம் கமல் இங்கே அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் பலர் இதை எதிர்த்திருக்கிறார்கள். கேலி செய்திருக்கிறார்கள். பின்பு எல்லோரும் ஆவிட்டுக்கு மாற வேண்டியது அவசியமாயிற்று. 2005-இல் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தின் மூலம் ‘டிஜிட்டல் சினிமாவை’ கமல் முயற்சிக்கத் துவங்கினார். அப்போது டிஜிட்டல் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கவில்லை. DV தொழில்நுட்பத்தைத்தான் அப்போது பயன்படுத்தினார். உலகம் டிஜிட்டல் யுகமாக மாறிக்கொண்டிருப்பதை கமல் கவனித்ததின் விளைவே அது. கதை இல்லாமல், அரைத்த மாவையே அரைத்து, அரசியல் பேசி, பன்ச் டயலாக் பேசி, ரசிகனை முட்டாள்களாகவே வைத்திருக்கும் சக நடிகர்களின் நிலையைப் போலில்லை கமலின் நிலை. இம்மாற்றங்களை வளர்ச்சியின் முகமாகவே பயன்படுத்த நினைக்கிறார். அவ்வகையில் இப்போதும் ‘DTH’ தொழில்நுட்பத்தின் சாத்தியங்களில் ஒன்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர நினைக்கிறார். அதற்கு அவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம். ஆயினும் தமிழ் திரையுலம் இன்னும் சில ஆண்டுகளில் இதே டி.டி.எச் தொழில்நுட்பத்தில் தன் படங்களை வெளியிட, ஆள் ஆளுக்கு அடித்துக் கொள்ளப் போகிறார்கள். பார்த்துக் கொண்டே இருங்கள்.

டிஜிட்டல் சினிமா கொடுக்கும் சாத்தியத்தில் பல படங்கள் உருவாகும். பல தொழில்நுட்பாளர்கள் பலன் அடைவார்கள்.  ஒரே படத்தில்  காதல், செண்டிமெண்ட், அரசியல், நையாண்டி, சமூகம், உறவு, சோகம், குத்தாட்டம் என்று கலந்துகட்டி, எல்லாம் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் நிறைவான படங்களை எடுக்க முடியும். A,B,C தரவரிசை ரசிகர்கள் என்னும் பிரிவு காணாமல் போகப்போகிறது. குறைந்த செலவில் தரமான படங்கள் உருவாகும் அதே நேரம். தரமற்ற பலப்படங்களும் உருவாகும் சாத்தியமிருக்கிறது. எப்போதும், எப்புதிய வளர்ச்சியையும் தவறாகவே பயன்படுத்தும் பழக்கம் நமக்கிருக்கிறது. அவ்வகையில் டிஜிட்டல் சினிமாவை தங்களின் தேவைக்கு, ஆசைக்கு, அரிப்புக்கு பயன்படுத்தும் கூட்டம் ஒன்று உருவாகிறது. இவர்கள் சினிமாவின் தரத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், தரமான கலைஞர்களுக்கான வாய்ப்பையும் தடுத்து விடுகிறார்கள். பல காலமாக திரைதுறையில் பயின்று அனுபவ அறிவு பெற்ற பல கலைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளற்று தவிப்பதைப் பார்க்க முடிகிறது. புதிய தொழில்நுட்பங்களை, முந்தைய தலைமுறை அறிமுகப்படுத்திக் கொள்ளுவதற்கு முன்பாக இளம் தலைமுறை கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி விடுகிறது. அதனால் புதியவர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்து கிடக்கிறது.

எந்த தொழில்நுட்பமாகட்டும், அனுபவ அறிவு என்பது அவசியம் என்பதை நாம் அறிவோம். அதேப்போலத்தான் இங்கே திரைத்துறைக்கும் தேவைப்படுகிறது. இளைய தலைமுறை தாம் அறிந்து வைத்திருக்கும் தொழில்நுட்ப அறிவை மட்டும் நம்பி களத்தில் இறங்குகிறது. சில சமயம் அது சரியாக வருகிறது, பெரும்பாலும் தவறான முடிவையே அவை அடைந்திருக்கின்றன என்பதை முன் நிகழ்வுகள் காட்டுகின்றன. திரைப்படம் என்பது வெறும் தொழில்நுட்பமல்ல. படைப்பாக்கம், கற்பனை, சமூக அக்கறை, அரசியல், அழகியல், இலக்கியம், உணர்வுகள், மனிதம் என மானுடத்தின் பல மேண்மைகளை உள்ளடக்கியது. ஒரு திரைக்கலைஞன் மற்ற எல்லா கலைசார் கலைஞர்களைப்போலவே மேன்மையுடைவனாக, பக்குவப்பட்டவனாக, அறிவார்ந்தவனாக, ஆன்றோனாக, அனுபவச்சாலியாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த கலைஞனே ஒரு படைப்பை படைக்கத் தகுதி வாய்ந்தவனாகிறான். மற்றவர்கள் திரைப்படம் எடுக்கலாம், அது படைப்பாகாது.

தான் இயங்கும் துறையை ஒரு படியேனும் முன்னோக்கி நகர்த்திய கலைஞனைத்தான் காலம் நினைவில் கொள்ளும். அதற்கு தொழில்நுட்பங்கள் துணையாகயிருந்திருப்பதைக் காலம் சுட்டிக் காட்டுகிறது. சிறந்த கலைஞர்களுக்கு தொழில்நுட்பங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களுக்கு அத்தகைய கலைஞர்கள் பக்க பலமாகயிருக்க வேண்டும். ஒரு தொழில்நுட்பாலனும், ஒரு கலைஞனும் இணைந்து நடை போட வேண்டும். கலைஞர்கள், தொழில்நுட்பாளர்கள் இருவரும் தங்களின் தகுதி கொடுக்கும் கர்வத்தில் தனித்து இயங்க முயல்வது பொருளற்ற, பயனற்ற முடிவையே தரும். படைப்பாக்கமும் தொழில்நுட்பமும் ஒன்றின் ஊடாக ஒன்றை மேம்படுத்திக் கொள்ளும். அதை அறிந்து இயங்குவது நன்மை பயக்கும்.

கருத்துகள்

  1. அற்புதமான கட்டுரை.
    ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன