முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடையாளம் அற்றவர்களாகி விடுவோம்..!


இப்படம் எடுப்பதனால் உலகம் மாறிவிடுமென்று நான் எப்போதும் சொன்னது இல்லை, அதற்காகவும் படம் எடுக்கவில்லை. ஷிண்டலர்'ஸ் லிஸ்ட் எடுத்தது கூட அப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவுகளைப் பற்றிய அவமானகரமான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கே. அப்படத்தை நான் எடுத்ததற்கு காரணம் அக்கதை சொல்லப்படவேண்டும் என்பதனால்தான். பிற்காலத்தில் என் மகன் என்ன நடந்தது என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். அதற்காகவேனும் இதை நான் பதிவுசெய்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன். - ஸ்டீபன் ஸ்பீல்பர்க் 




ஸ்டீபன் ஸ்பீல்பர்க் உலகப்புகழ்பெற்ற இயக்குனர். ஜாஸ், ஜுராசிக் பார்க், ஈ.டி, ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட் போன்ற பிரபலப்படங்களை எடுத்தவர். இதில் 'ஷிண்டல்ர்'ஸ் லிஸ்ட்' இரண்டாம் உலகப்போரின்போது இட்லரின் நாஜிக்கள் யூதர்களைப் படுகொலை செய்ததைப்பற்றி விவரிக்கும் படம். 1972-இல் ஜெர்மானிய நகரமான மூனிச்சில் நடந்த ஒலிப்பிக்கில் 'கறுப்பு செப்டம்பர் (BSO)' என்று அழைக்கப்பட்ட பாலஸ்தீனிய போராளிக்குழு, பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, இஸ்ரேலோடு பேரம் பேசினார்கள். பதினோரு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் மரணத்தில் முடிந்தது அந்தச் சம்பவம். உலகமே அதிர்ந்தது. அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேலிய அரசாங்கம் 1979 காலகட்டத்தில் தன்னுடைய உளவு நிறுவனமான 'மொஸாட்டை' பயன்படுத்தி 'கறுப்பு செப்டம்பர்' உறுப்பினர்களை தேடித்தேடிக் கொன்றது. இந்தப் பழிக்குப்பழி வாங்கிய ரகசியச் சம்பவத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது 2005-ஆம் ஆண்டு ஸ்டீபன் ஸ்பீல்பர்க் எடுத்த 'மூனிச்' திரைப்படம். இவ்விரண்டு படங்களிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது, இரண்டு படங்களும் 'யூதர்'களைப் பற்றியது. யூதர்களுக்கு மற்ற இனம் இழைத்த அநீதியும், அதற்கு அவர்களின் எதிர்வினையையும் விவரிக்கின்றன. இதனை ஸ்டீபன் ஸ்பீல்பர்க் படமாக ஏன் எடுக்கவேண்டும்?. காரணம் மிக எளிமையானது. மிக ஆதாரமானதும் கூட. ஏனெனில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ஒரு யூதர். அமெரிக்காவில் பிறந்தவர். அங்கேதான் தொழில் செய்பவர். ஆனாலும் தான் ஒரு யூதன் என்ற அடையாளத்தை எப்போதும் துறக்காதவர். வசூல் மன்னனாக இருந்தாலும், தன் இனத்திற்கு தான் செய்யவேண்டிய கடமையாக தன் இனத்தின் துயர வரலாற்றை படைப்பில் பதிவுசெய்கிறார்.



இவ்விரண்டு படங்களும் மிக முக்கியமானவை. ஏனெனில், இதில் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் செய்தி இருக்கிறது. அதாவது 'ஷிண்டலர்'ஸ் லிஸ்ட்' படத்தின் மூலம் யூத இனத்திற்கு உலகம் இழைத்த அநீதியை அவ்வினம் மறந்துவிடக்கூடாது என்பதும் 'மூனிச்'படம் மூலம் தன் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்கியே தீருவோம் என்பதையும் உலகத்திற்கும் சொல்லாமல் சொல்கிறார். இதை ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளியாகவோ அல்லது ஒரு இனத்தின் அங்கத்தினராகவோ அவர் செய்திருக்கலாம். செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.




'ஒலிவர் ஸ்டோன்' (Oliver Stone) என்ற புகழ்ப்பெற்ற
இயக்குனரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'பிளாட்டூன்', 'வால் ஸ்டீட்', 'JFK', 'ஹெவன் அண்ட் எர்த்', அலெக்ஸ்சாண்டர்' போன்ற படங்களை எடுத்தவர். இவர் வியட்நாம் போரைப்பற்றி மூன்று படங்களை எடுத்திருக்கிறார். 'பிளாட்டூன்' (Platoon), 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' (Born on the Fourth of July) மற்றும் 'ஹெவன் அண்ட் எர்த்' (Heaven & Earth). இம்மூன்று படங்களும் வியட்நாம் போரின் அவலத்தை வெவ்வேறு தளத்திலிருந்தும், மாறுபட்ட பார்வையிலும் சொல்லுபவை. 'பிளாட்டூன்' மற்றும் 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' படங்கள் ஒரு இராணுவ வீரனின் பார்வையில் சொல்லப்படுகின்றன. 'பார்ன் இன் ஃபோர்த் ஆஃப் ஜூலை' ஒரு அமெரிக்க இளைஞனின் வியட்நாம் போருக்குப் பின்னாலான அவல நிலையைச் சொல்லி, போரின் குரூரத்தையும் அமெரிக்காவின் போர் வெறியையும் சுட்டிக்காட்டுகிறது. 'ஹெவன் அண்ட் எர்த்' வியட்நாமிய கிராமத்தில் வாழ்ந்த 'Le Ly Hayslip' என்கிற பெண்ணின் போர் அனுபவங்களையும் அதனால் அவள் வாழ்க்கையடைந்த சீரழிவையும் சொல்லுகிறது.  






'ஒலிவர் ஸ்டோன்' அமெரிக்காவில் பிறந்தவர். யூதத் தந்தைக்கும் ஃபிரஞ்ச் தாய்க்கும் பிறந்தவர். அவருக்கு வியட்நாமைப்பற்றி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?. அல்லது அவருக்கு அதிலென்ன அக்கறை? காரணம் இருக்கிறது.







வட அமெரிக்க வியட்நாம் போர் நவம்பர் 1,1955-லிருந்து ஏப்ரல் 30,1975 வரை நடந்தது. 'ஒலிவர் ஸ்டோன்' 1967- 68 ஆண்டுகளில் ஒரு அமெரிக்கப் போர்வீரனாக வியட்நாம் போருக்கு அனுப்பப்பட்டார். அப்போர்க்கால அனுபவமும், அதன் பேரழிவுகளும்தான் பிற்காலத்தில் அவரை வியட்நாம் போரினைப் பற்றியப் படமெடுக்கத் தூண்டின. அப்போரில் வட அமெரிக்கா படுதோல்வியைச் சந்தித்து வெளியேறியது. இன்று வரை அதைப் பெரும் அவமானமாக வட அமெரிக்கா கருதுகிறது. ஒரு தேசமே அவமானமாகக் கருதும் போரினைப்பற்றி, அந்நாட்டு குடிமகனே படமெடுப்பதற்கு இவைதான் காரணங்களாக இருக்க முடியும். ஒன்று தைரியம். மற்றொன்று, மனிதம் மீதிருக்கும் அளவுகடந்த அன்பு. 

அந்த அழிவுப்போரில் கலந்துக்கொண்டவன் என்பதனாலையே அதைப்பற்றி படமெடுக்க துணிகிறான் இப்படைப்பாளி. அதைத் தன் தார்மீகக் கடமையாகவும் கருதுகிறான்.


இப்படி எண்ணிலடங்காப் படைப்பாளிகளைப் பற்றிக் குறிப்பிட முடியும். பல நாட்டுப் படைப்பாளிகள் தங்கள் நாட்டின் பிரச்சனைகளை தன் படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார்கள். அதை உலக கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். இங்கே இவ்விரண்டு இயக்குனர்கள் உதாரணமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். அவர்களிருவரும் வட அமெரிக்கர்கள் என்பதையும் கவனிக்கவேண்டும். பெரும் வணிகமயமான 'ஹாலிவுட்டைச்' சார்ந்தவர்கள். உங்களுக்குத் தெரியும் வட அமெரிக்காவின் போர் வெறியும் அதன் வியபார அரசியலும். உலகில் எங்கு போர் நடந்தாலும் அதில் அமெரிக்காவின் பங்கு எத்தகையது என்பது நாம் அறிந்ததே. அப்படி இருக்க, அதன் மடியில் உட்கார்ந்துக் கொண்டு மனிதம் பேசுவதும், அழிவைச் சுட்டிக் காட்டுவதும், தன்னை வெளிப்படுத்திக் கொள்வதும் ஒரு படைப்பாளியாய், மனிதனாய் முடியும் என்பதற்கு இவர்கள் உதாரணம்.

ஆனால் இங்கே நம் படைப்பாளிகள்? எத்தனை படைப்புகளில் நமது சமூகத்தை பிரதிபலித்திருக்கிறார்கள்? எத்தனை படைப்புகளில் மனிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்? படைப்புகளில் வேண்டாம், தங்களின் மதிப்பீடுகளிலாவது வெளிப்படுத்திருக்கிறார்களா? செயல்பாடுகளில்? ஒன்றும் சொல்லிக்கொள்ளும் விதமாக இல்லை. இங்கே நமக்குக் கருத்துகளே கிடையாது. அப்புறம் எங்கே செயல்பாடு, பதிவு எல்லாம்.?

அரை நூற்றாண்டு கால ஈழப்பிரச்சனையை கண்முன்னே கண்டும் அதை பதிவுசெய்யாதவர்கள் நாம். முப்பது ஆண்டுகால போராட்ட வரலாற்றையும் நம் திரைப்படங்களில் பதிவுசெய்யக்கூடிய தகுதியோ, தைரியமோ அற்றவர்கள் நம் திரைப்படத்துறையினர். ஈழம் வேண்டாம்.. இனம் வேண்டாம்.. மனிதம்? சமூகம்,ஏழ்மை,வாழ்க்கை என எதைப்பற்றியாவது குறிப்பிடும் படியாக நாம் திரைப்படம் எடுத்திருக்கிறோமா?

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டதுண்டு. அவரை சந்தித்த ஒரு வெளிநாட்டு அறிஞர் கேட்டாராம், 'உங்கள் நாட்டில் பிரச்சனைகளே இல்லை போலிருக்கிறது, உங்கள் திரைப்படங்கள் காதலைத்தான் எப்போதும் பேசுகின்றன' என்று. அதற்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தவித்ததாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். அவர் மட்டுமில்லை, அக்கேள்விக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் அநேகம் பேர் உண்டு இங்கே.

மத்திய கிழக்கில் ஒரு நாடு துண்டாடப்பட்டதற்கு ஒட்டுமொத்த இனமே இன்று வரை போராடி வருகிறது. நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இங்கே நம் இனம், நாம் பேசும் அதே மொழி பேசும் மக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுகிறார்கள் கண்ணுக் கெட்டிய தூரத்தில். காது கேட்கும் தூரத்தில். நாம் என்ன செய்துவிட்டோம்? அலறல் சத்தம் கேட்கும்போதெல்லாம் ஓடிவந்து எட்டிப்பார்த்திருக்கிறோம், குரல் கூட கொடுத்திருக்கிறோம். போதுமா தோழர்களே? மனிதனாக நம் கடமையை செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் திருப்திப்பட்டுக்கொள்ளலாம். படைப்பாளியாய்? நம் படைப்புகளில் அதை பதிவுசெய்ய வேண்டாமா? இந்த அவலத்தை உலகிற்குச் சொல்லவேண்டாமா? நம் மகன்கள் தெரிந்துக்கொள்ள அதைப் பதிவுசெய்வது நம் கடமை அல்லவா.

இங்கே சில படைப்பாளிகள் இருக்கிறார்கள். உணர்வோடும் தகுதியோடும். ஆனால் அவர்களால் தமிழ்ப்படங்களில் எதையும் சுதந்திரமாகப் பதிவுசெய்துவிட முடியாது. ஏனெனில் கோலிவுட் என்பது தமிழன் கையில் இல்லை. அது அயல் மாநிலத்தவரின் கைகளில் போய்ச்சேர்ந்து பல காலம் ஆகிறது. நடிகர்களிலிருந்து, தயாரிப்பாளரிலிருந்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் 'பைனான்சியர்' வரை எல்லாம் அயல் மாநிலத்தினர்தான். எடுப்பதுதான் தமிழ்ப் படம், அதிலெதிலும் தமிழ்ச் சமூகம் வந்துவிடாதபடி பார்த்துக்கொள்ள இங்கு ஒரு கூட்டமே உண்டு. ஒரு இயக்குனரின் படைப்புலகத்திற்குள் இங்கே யார் யாரோ நுழைய முடிகிறது. நடிகன், தயாரிப்பாளர் எல்லாம் தாண்டி வட்டிக்கு பணம் கொடுப்பவன் வரை.

பாவம், நம் தமிழ் படைப்பாளிகள். இலட்சியத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையே மாட்டிக்கொண்டு போராடும் போராட்டத்தில், தங்களையே தொலைத்து விட்டார்கள். தாங்கள் யார் என்ற அடையாளமே அவர்களுக்கு தேவையற்றுப் போய்விட்டது. தொலைத்தக் காலமும், தொலைத்த இளமையும், தொலைத்த வாழ்க்கையும் இங்கே ஏராளம் உண்டு.

இதில் எங்கே இனத்திற்காக போராடுவது என்பது உங்கள் பக்க நியாயம் என்பதனால்தான், எல்லாவற்றிக்கும் உங்களை வற்புறுத்தியே அழைத்துவர வேண்டியதாக இருக்கிறது. களத்திற்கு வேண்டாம், அடையாள அணிவகுப்பில் கூட பங்குபெறத் தயங்குகிறோம். எதிரி உன்னை பகைவன் என்று வாள் தூக்கிவிட்ட போதும் நீங்கள் யார் என்று உணராதது உங்களின் சாபக்கேடு.

தமிழர்களாக, படைப்பாளிகளாக நாம் மீட்டெடுக்க வேண்டியது, மிக நீண்ட பட்டியலாக நீளக்கூடியது. ஆயினும், நம் வாழ்வாதாரத் தேவைகளை வென்றெடுத்துவிட்டு மொழியையும் இனத்தையும் மீட்டெடுக்கலாம் என்று நினைத்தோமானால், நாம் அடையாளமற்றவர்களாகி விடுவோம். தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இனமீட்புக்கும் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். இரண்டும் ஒரு சேர சமகாலத்தில் நடைபெற வேண்டும். தவறினால் ஒரு அடையாளமற்ற நாடோடி சமூகத்தை உருவாக்குபவர்களில் நாம் முன்னோடிகளாகி விடுவோம்.

சமூகச்சுமையை நீங்கள் தூக்காதபோது, அது உங்கள் பிள்ளைகளின் முதுகில் ஏற்றப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள். பாதுகாப்பான தினசரி வாழ்க்கையினை தொலைக்க நீங்கள் தயங்கினால், உங்கள் பிள்ளைகள் தொலைக்க வேண்டிவரும். களத்திற்கு வரவேண்டியது நீங்களா உங்கள் பிள்ளைகளா என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள் தோழர்களே.

அதுவரை உண்மையை பேசத் தயங்கும் (தவறும்) நம் அறிவு ஜீவிகளின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்.


குறிப்பு: ’இந்தப் பதிவுக்கும் ராவணன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பது இக்கட்டுரைக்கு முன்பு வைத்த தலைப்பு. அதை இப்போது மாற்றி இருக்கிறேன். குறிப்பாக எந்த காரணமும் இல்லை. இக்கட்டுரை ராவணன் படம் வந்திருந்த சமயம் எழுதப்பட்டது. காலம் கடந்து இப்போது அது பொருளற்றிருப்பதாக உணர்ந்ததனால், மாற்றி இருக்கிறேன். அவ்வளவே.

கருத்துகள்

  1. நல்ல அருமையான கருத்துள்ள கட்டுரை.. அனைவரும் சிந்திக்கவேண்டியவை.

    பதிலளிநீக்கு
  2. மக்கள் ரசனை மேம்படனும்,அப்போது தான் புதுமை படைக்க முடியும்,இல்லையென்றால் கிளிஷேக்கள் தான் , இது போல புதிய முயற்சிகள் பதியப்படனும், அதற்கு உங்களால் ஆன பங்கை ஆற்றத்தயார் என புரிகிறது!இதற்கான வேலைகளை இனிதே துவங்குங்கள்.வெற்றி கிட்டும்.

    ======
    எல்லாவற்றுக்கும் மேலே ப்ரெசெண்டேஷன் என ஒன்று இருக்கு!ஒன்றும் இல்லாத குப்பைகளை ப்ரெசெண்டேஷன் செய்து வியாபாரமாக்கி அதையே உன்னதமான படைப்பு என்ற பிம்பத்தை உண்டாக்கிவிட்டனர்,
    கட்டக் போன்ற இயக்குனர்கள் நல்ல திறமை இருந்தும் அதை லாபி செய்யத்தெரியாததால் காப்பி அடிக்கும் சில அற்ப ஜந்துக்கள் ப்ரெசெண்டேஷன் செய்தே முன்னுக்கு வந்துவிடுகின்றனர்.
    உங்கள் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படத்திலேயே ஒரு வசனம் உண்டு
    Itzhak Stern: Let me understand. They put up all the money. I do all the work. What, if you don't mind my asking, would you do?

    Oskar Schindler: I'd make sure it's known the company's in business. I'd see that it had a certain panache. That's what I'm good at. Not the work, not the work... the presentation.

    நண்பரே உலகமே ப்ரெசெண்டேஷனில் தான் இயங்குகிறது,இதில் எங்கே திறமைக்கு மதிப்பு?

    பதிலளிநீக்கு
  3. இந்த மாதிரி கருத்துக்களை நிறைய பேர் பொதுவில் வைத்தாயிற்று.போய்ச் சேர வேண்டியவர்களுக்கு நாம் சொல்லா விட்டாலும் அவர்களுக்கென்றே மனதில் சில உறுத்தல் இருக்குமென்று நம்புகிறேன்.

    ஆனால் சட்ட சிக்கல்கள்,அதையும் மீறி சொல்லத்துணியும் துணிவு,பொருளாதார முதலீடு,அரசியல் தலையீடு மன அழுத்தங்கள் என நிறைய தடங்கல்கள் இருக்கும்.அரசியல் செல்வாக்கு,பணம் இருப்பவர்கள் எல்லோரையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

    ஆங்கிலப் படங்கள் பார்த்து மட்டுமே பொரும வேண்டியவர்களாய் இருக்குறோம்:(

    பதிலளிநீக்கு
  4. முகத்தில் அறைவது போல் சொல்லிவிட்டீர்...ஆனால் தூங்குவது போல் பாவனை செய்பவனை என்ன செய்யமுடியும்...நல்ல பதிவு...வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. ராஜ நடராஜன்:- //இந்த மாதிரி கருத்துக்களை நிறைய பேர் பொதுவில் வைத்தாயிற்று.போய்ச் சேர வேண்டியவர்களுக்கு நாம் சொல்லா விட்டாலும் அவர்களுக்கென்றே மனதில் சில உறுத்தல் இருக்குமென்று நம்புகிறேன்.//

    நாம் போராட வேண்டாம். குறைந்த பட்சம் நம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவாவது வேண்டும். அதுதான் சக நண்பனுக்கு தைரியத்தையும் முனைப்பையும் தரும். நன்றி சார்..

    பதிலளிநீக்கு
  6. |கீதப்ப்ரியன்|
    //நண்பரே உலகமே ப்ரெசெண்டேஷனில் தான்//
    நீங்கள் சொல்லுவது உண்மைதான். இந்த உலகமே வியாபரமாகிருக்கிறது. எதையும் விளம்பரப்படுத்தி விற்றுவிட முடிகிறது. எதற்கும் 'Brand Name' தேவைப்படுகிறது. பிரியாணிக்கு கூட 'தலப்பாகட்டு' என்ற நிலை இங்கே.

    இந்த நுணுக்கங்களை உலகம் காலம் காலமாக பிரயோகிக்கின்றன. கற்றுக்கொள்வதும் பயன்படுத்துவதும் நம் கடமைதான். நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  7. // (இந்தப் பதிவிற்கும் ராவணன் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.) //

    ஏன் ? சம்பந்தப்படுத்திக் கொண்டால்தான் என்ன? உண்மையும் அதுதானே? தழுவல் என்று கூறப்பட்டாலும், முகத்திலறையும் உண்மை! வாழ்த்துக்கள் ஆம்ஸ்ட்ராங்!

    பதிலளிநீக்கு
  8. Hello Vijay,
    I disagree with that guy's question to Sujatha. Tamil movies did not talk about Love; they meant for time pass --just like junk food, snaks--. Don't get angry for these, just enjoy what you are doing now.
    Mohan

    பதிலளிநீக்கு
  9. உங்கள் கோபத்தையும் வருத்தத்தையும் விருப்பத்தையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் விஜய்.

    மணிரத்தினம், பாலா போன்ற இயக்குனர்கள் தங்கள் முந்தையப் படங்களில் இலங்கைப் பிரச்சனையை சிறிதளவேனும் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். ஆனால் அதுகூடச் செய்யாத மற்றவர்களை என்ன சொல்ல?

    கலைஞர்கள், தினசரி அறிக்கைவிடும் அரசியல்வாதிகள் போல இருக்கவேண்டியதில்லை. நீங்கள் மேற்கோள் காட்டிய படங்கள் எல்லாமே ஒரு பிரச்சனை நடந்து முடிந்த பிறகு செய்யப்பட்ட பதிவுகளே. கலைஞர்கள் அப்படித்தான் இருக்க முடியும். இலங்கைப் பிரச்சனையை மிகத் தீவிரத்தோடும் உண்மையாகவும் பதிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்ப் படைப்பாளிகள் களத்தில் இறங்க வேண்டிய நேரம் இது. மற்றவர்களைக் குறை சொல்லாமல் அவரவர் பங்கை ஆற்றலாம்

    பதிலளிநீக்கு
  10. முகத்தில் அறையும் பதிவு ஸ்பில்பெர்க் ஐ நம்மவர்கள் copy அடித்து பாடல் காட்சியை எடுப்பார்கள் மறந்தும் நம் இனத்தின் பேரழிவை பதிவு செய்ய மாட்டார்கள் உணர்வுள்ள உங்கள் பதிவு உங்கள் மீது பெருமிதம் கொள்ள செய்கிறது இருக்கும் உங்களைப்போன்ற மனித நேயமிக்க படைப்பாளிகள் மீதுள்ள நம்பிக்கையோடு தான் ஏக்கத்துடன் தமிழ் சினிமா உலகை பார்த்துக்கொண்டிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
  11. //உண்மையை பேசத் தயங்கும்(தவறும்) நம் அறிவு ஜீவிகளின் படங்களைப் பார்த்துக்கொண்டிருப்போம்.//

    மன்னிக்கணும்,
    நம் ‘மேதாவிகளின்’ படங்களும் காதலை மட்டுமே சுற்றிச் சுற்றி வருகின்றன. வாழ்க்கையில் காதல் மட்டுமே இருப்பதுபோல் தான் அன்கத் தமிழ்ப்படங்கள் எடுக்கப்படுகின்றன. பார்வையாளர்களைக் குறை சொல்லியே ஒரே மாதிரி பட்ங்களை எடுத்துவருவது மாறி, வாழ்வின் பல கோணங்களை படமாக்க நம் இயக்குனர்கள் தயராக இல்லையே!

    பதிலளிநீக்கு
  12. நியாயமான கேள்விதான் ஆனால் உங்களால் முடியாதா?

    பதிலளிநீக்கு
  13. அற்புதமான பதிவு ...நன்றி நண்பரே ..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன