இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை. அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது?
நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு, இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே, அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும்? இலைத்தழை வேண்டுமானால், வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும், அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.
மேலும், பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது. மண்ணில் வாழும் புழுக்கள், நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன. இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது. அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார். அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு.
சிறு தானிய வகைகளில் நாட்டுச் சோளம், நாட்டு கம்பு, தினை, சாமை, குதிரைவாலி, பயிறு வகைகளில் உளுந்து, பாசி பயறு, தட்டைப் பயறு, கொண்டைக் கடலை, துவரை, கொத்தவரை, நரிப்பயறு, எண்ணெய் வித்துக்களில் எள், நிலக்கடலை, சூரியகாந்தி, சோயா பீன்ஸ், ஆமணக்கு, மசால் வகைளில் கொத்தமல்லி, கடுகு, சோம்பு, வெந்தயம், தழைச்சத்துக்கு சணப்பு, தக்கப்பூடு போன்றவற்றை அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு, அதனை விதைத்து ஒரு ஐம்பது நாட்கள் வளர்த்து, அப்படியே மண்ணோடு ஓட்டி விட்டு விடவேண்டும். இதன் மூலம் மண்ணிலிருந்து காணாமல் போன, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் பல்வேறு நுண்ணூட்டங்கள் மீண்டும் மண்ணிற்கு கிடைத்துவிடும் என்கிறார்.
நெற்பயிர் வளர்வதற்கு அடிப்படையாக தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, நுண்ணூட்டங்கள்(நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு, துத்தநாகம்) மற்றும் மண்புழு, பாக்டிரியா என்று பல்வேறு நுண்ணுயிரிகளின் துணை தேவைப்படுகிறது. அதனை மீட்டெடுக்க இந்த பல தானிய விதைப்பு பயன்படும் என்பதனால், நாங்கள் முதலில் செய்தது. அதைத்தான்.
ஐம்பது நாட்களுக்குப் பிறகு, அதனை மண்ணோடு ஓட்டி விட்டு, நிலத்தை வளப்படுத்தினோம். பிறகு இரசாயண உரங்களுக்கு பதிலாக பல்வேறு இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தினோம்.
ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், மீன் அமிலம், ஈ.எம் கரைசல், பத்திலைக்கரைசல், டிரைக்கோடர்மா வெரிடி, யூமிக் அமிலம், பாஸ்வோ பேக்டிரியா, அசோஸ்பைரில்லம்,சுடோமோனஸ் போன்ற பல்வேறு இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தினோம். அவற்றை பற்றி தொடர்ந்து பேசுவோம்.
(தொடரும்)
பின்குறிப்பு: நாங்கள் செய்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வீடியோ பதிவாக ஒரு யூடியூப் சேனலில், இன்ஸ்டாவில், முகநூலில் பதிவு செய்து வருகிறோம்.அதற்கான லிங்க்
YouTube: https://www.youtube.com/@AruvadaiFarm
Instagram: https://www.instagram.com/aruvadaifarm?igsh=NGY1NG9jOWExc3Ex&utm_source=qr
Facebook: https://www.facebook.com/profile.php?id=61566874415090&mibextid=LQQJ4d
#organicfarming #organics #இயற்கைவிவசாயம் #விவசாயம் #விஜய்ஆம்ஸ்ட்ராங் #vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக