முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஃபேஸ்புக்கும் புரட்சியும்

அண்மைக் காலமாக உலகெங்கும் பல எழுச்சிப் போராட்டங்கள் நடக்கத் துவங்கி விட்டன. குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் தொடர்ந்து போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அடக்குமுறையிலிருந்தும், நீண்ட நாள் அரசாண்டவர்களிடமிருந்தும், மீண்டு வருவதற்கான எந்தனிப்புகள், சுதந்திரத்திற்கான வேட்கையாக அடையாளம் காணப்பட்டு, பல தேசங்களில் நடந்து வருகிறது.

இந்தத் திடீர் தொடர் புரட்சிக்கான உத்வேகம், எகிப்தில் நடந்த புரட்சிக்குப் பின் ஏற்பட்டது. ஜனவரி 25, 2011-இல் துவங்கிய எகிப்துப் புரட்சி பிப்ரவரி 11, 2011-இல், அதன் முப்பது ஆண்டு காலம் ஆட்சியாளரான 'ஹோசனி முபாரக்கை' (Hosni Mubarak) பதவியிலிருந்து துரத்தியடித்தது. வெறும் பதினெட்டே நாட்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்த அப்புரட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.



வரலாறு முழுவதும் நிறைந்து கிடக்கும் பல புரட்சிகளை, புரட்சிக்கான எந்தனிப்புகளை நாம் அறிவோம். அதில் வெற்றி பெற்றதும், முடக்கப்பட்டதுமான பல புரட்சிகள் 'நிகழ' எடுத்துக்கொண்ட காலங்கள் அதிகம். ஆண்டுகள் பலவாகியும் இன்னுயிர்கள் பல இழந்தும் கிடைக்கப்பட்ட, கிடைக்கப்படாத ‘சுதந்திரப்’ போராட்டங்கள் அவை. மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த வெற்றிகரமான புரட்சி 'எகிப்திய' புரட்சியாகத்தான் இருக்க முடியும். இது எப்படி சாத்தியமாயிற்று? பதினெட்டு நாட்களுக்குள் ஒரு புரட்சியை வெற்றி பெறச் செய்தது எது? முப்பது ஆண்டுகாலம் அரசாண்டவனை துரத்தி அடிக்கும் வலிமைக்கொடுத்தது எது?


இதற்கு மிக எளிமையான பதிலொன்று உண்டென்றால், அது 'மக்கள் சக்தி' என்பதாக மட்டும்தான் இருக்க முடியும். மக்கள் சக்தி ஒன்றிணைந்தபோதெல்லாம் பல மாற்றங்களை நிகழ்த்திக் காட்டி விட முடியும் என்பதற்கு வரலாற்றில் பல உதாரணங்கள் உண்டு. மக்கள் சக்தியை உலகிற்கு முதலில் அடையாளம் காட்டியது 'ருஷ்யப் புரட்சி'தான். அதிலிருந்த சாத்தியத்தைக் கண்டு கொண்டு உலகம் தொடர்ந்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. பல தேசங்கள் விடுதலை பெறவும், புதிய தேசங்கள் உயிர்த்தெழவும் காரணமான அதே மக்கள் சக்திதான் எகிப்துப் புரட்சிக்கும் காரணம் என்றாலும், இந்த எகிப்தியப் புரட்சி பின்பற்றக் கூடிய ஒரு முன்மாதிரியை கொண்டிருக்கிறது. வருங்காலம் தவிர்க்க முடியாத/கூடாத அந்த முன்மாதிரி என்ன என்பதை பார்ப்பதற்கு முன்பாக உங்களிடம் இரண்டு கேள்விகள்.

1. ஒரு பாவப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு அதிகபட்ச இழப்பீடாக எது இருந்துவிட முடியும்?

2. ஒரு இளைஞனின் சிறு சிந்தனை (Idea) ஒன்று புரட்சிக்கு அடித்தளமாக முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கான விடையை இக்கட்டுரையின் போக்கில் நீங்கள் கண்டெடுத்துவிட முடியும்.

'கலித் மொகமத் சயித்' (Khaled Mohamed Saeed) என்னும் அந்த இருபத்தியெட்டு வயது இளைஞனை எகிப்திய காவல்துறையைச் சார்ந்த இரண்டு காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்று அடித்தே கொன்றுவிடுகிறார்கள். ‘அவன் திருட்டுக்கும், ஆயுத கடத்தலுக்கும் தேடப்பட்டவன்" என்பது காவல்துறை சொன்ன காரணம். ஆனால், உண்மையில் அவன் செய்த குற்றம், போதைக் கடத்தலோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைப் பற்றிய காணொளியைப் (விடியோ) பரப்ப முயன்றது.

அவனைக் கைது செய்தபோதே, அவன் தலையை சுவற்றில் முட்டியும் உதைத்தும் தரையோடு தரையாக இழுத்தும் சென்றார்கள் என்பதற்கு கண்ணால் பார்த்த சாட்சிகள் பல உண்டு. அவனது உடலைப் பிணவறையில் சென்று பார்த்த அவனது சகோதரன், தன் தொலைபேசியின் மூலமாக, அடித்து உடைக்கப்பட்டிருந்த அம்முகத்தைப் புகைப்படம் எடுத்தான். பின்பு அதை இணையத்தில் வெளியிட்டான். கலித் மொகமத் சயித்தின் அந்தச் சிதைந்த முகம் பலரை அதிர்ச்சியடையச் செய்தது.


'கலித் மொகமத் சயித்'

சிதைந்த முகம்

துபாயிலிருக்கும் கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்த 'வேயில் கோனிம்' (Wael Ghonim) என்னும் விற்பனை மேலாளர் ஒருவர் அப்புகைப்படத்தை அடையாளமாகக் கொண்டு 'ஃபேஸ்புக்கில்' (Facebook) 'நாங்கள் எல்லாரும் கலித் சயித்'("We are all Khaled Said") என்னும் பக்கத்தைத் துவங்கினார். இந்த இணையப் பக்கம் பலரை ஒன்றிணைத்தது. லட்சக்கணக்கானவர்கள் இப்பக்கத்தோடு தங்களை இணைத்துக்கொண்டார்கள். பலர் அந்த உடைந்த முகத்தை அடையாளப் புகைப்படமாக தங்களின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு வைத்துக் கொண்டார்கள். இதன் ஊடாக மக்களிடையே ஒரு எழுச்சி உண்டானது, மக்கள் இணையத்தின் மூலமாக தங்களின் எண்ணத்தைப் பகிர்ந்துக் கொண்டார்கள், அவ்வெண்ண ஓட்டங்கள் செழுமையடைந்து, அவர்களை வீதியில் இறங்கிப் போராடத் தூண்டியது.

இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் என்பது, அதை இழைத்தவனுக்குத் தண்டனை என்பதிலிருந்து துவங்கினாலும் அந்த அநீதி மீண்டும் நிகழாவண்ணம் சூழ்நிலையை மாற்றுவதுதான் கொடுமை இழைக்கப்பட்டவனுக்கான சரியான இழப்பீடாக இருக்க முடியும். இதன் அடிப்படையில் கொடூரக் கொலைக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள் அதன் ஆதாரமான அரசையே மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வந்தார்கள். இதன் வெளிப்பாடாக ஊரெங்கும் கலவரம், போராட்டம், ஊர்வலம் என மக்கள் திரண்டார்கள்.



(முபாரக் பதவி விலக வேண்டும் என்பதற்கு ஏழ்மை, ஊழல், தன் மகனை அடுத்த அதிபராக்குவது போன்ற பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், மக்கள் ஒன்று கூடி போராடுவதற்கு இச்சம்பவமே துவக்கமானது)

ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியுப் போன்ற இணையத்தளங்களை, தங்களின் பரப்புரைக்கான ஊடகங்களாகக் கொண்டு மக்கள் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டார்கள். இதனால் எகிப்தில் இணையச் சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டது, என்றாலும் மக்கள் உணர்ச்சிப்பூர்வமாக ஒன்றிணைந்து புரட்சியை வெற்றி நோக்கி நகர்த்தினர்.

ஒரு இளைஞனின் மரணம் அத்தேசத்தின் ஆன்மாவைச் சுட்டது. அதன் வெளிப்பாடாக அத்தேசம் தன்னை மீட்டெடுத்துக் கொண்டது. இதை விட அவ்விளைஞனின் மரணத்திற்கு என்ன இழப்பீடு பெற்றுவிட முடியும்..!? மரணத்திற்கு இழப்பீடு விடுதலை என்றால் மரணிப்பதற்கு பல உயிர்கள் உண்டு இவ்வுலகில்.

இப்படி ஒரு இளைஞனின் மரணம் தேசத்தை, விடுதலையை நோக்கி நகர்த்திய காரணங்களில் முதன்மையானது, ஒரு இளைஞனின் எண்ணத்தில் உதித்த ஒரு சிறு சிந்தனைதான். அவ்விளைஞனுக்கும் எகிப்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சொல்லப்போனால் அவன் அரேபிய தேசங்களுக்கு முற்றிலும் எதிரான ஒரு நாட்டைச் சார்ந்தவன். அவனது சிந்தனையின் விளைவால் உருவான ஒரு கண்டுபிடிப்பே இன்று அரேபிய தேசங்கள் எங்கும் புரட்சியை நோக்கி நடைபோட செய்திருக்கின்றன.


'மார்க் சக்கர்பர்க்'

அவ்விளைஞனின் பெயர் 'மார்க் சக்கர்பர்க்' (Mark Zuckerberg). வட அமெரிக்காவைச் சார்ந்தவன். 'ஹார்வட்' (Harvard) பல்கலைக் கழகத்தின் மாணவன். அவன் சிந்தனையில் உதித்த அந்த யோசனை, நண்பர்களை ஒன்றிணைப்பது. அதாவது நாம் நண்பர்களாக ஒன்றிணைவதின் மூலம் நம்முடைய நண்பர்களின் நண்பர்களையும் நண்பர்களாக்க முடியும் அல்லவா!? நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே என்ற அடிப்படையில் ஒரு நட்பு வலைப்பின்னலை உருவாக்குவது எளிதுதானே.. இதை இணையத்தின் மூலம் சாத்தியமாக்குவது எளிது என்பதனால், அவன் செய்தது எல்லாம் ஒரு சிறிய மென்பொருளை எழுதி அதை இணையத்தில் பதிவேற்றியதுதான். அந்த நண்பர்களுக்கான வலைப்பின்னல் வளர்ந்து இன்று அறுபது கோடி (600 மில்லியன்) நபர்களை இணைத்திருக்கிறது. அவ்விளைஞனை உலகின் இளம் வயது கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.

அவனோடு சண்டை போட்டுப் பிரிந்த காதலியைப் பழிவாங்கத் தோன்றிய ஒரு யோசனைதான் இதற்கெல்லாம் அடித்தளம். பிரிந்துபோன காதலியை வெறுப்பேற்றும் விதமாக, அவளது புகைப்படம் மற்றும் பல பெண்களின் படத்தைச் சேகரித்து, அதைக்கொண்டு இரண்டு பெண்களின் புகைப்படத்தை அருகருகேக் கொடுத்து ‘இந்த இரண்டு பெண்களில் யார் அழகானவர்கள்?’ என்று பார்வையாளர்களைத் தேர்ந்தெடுக்க வைப்பது, என்பதாக இருந்தது அவனது முதல் நோக்கம். இதன் மூலம் தன் முன்னாள் காதலியை வேறொரு அழகான பெண்ணுடன் ஒப்பிட்டு இவள் அழகற்றவள் என்று ஊர் வாயால் சொல்லச் செய்து, அவளை நோகச் செய்து திருப்திப்பட்டுக் கொள்வதே அவனது நோக்கம். அந்த இணையப் பக்கத்திற்கு அவன் வைத்தப் பெயர் 'ஃபேஸ்மேஷ்' (Facemash) என்பதாகும்.

நான்கு மணி நேரத்திற்குள்ளாக 450 பார்வையாளர்களையும் 22,000 புகைப்படப் பார்த்தலையும் நிகழ்த்தியது அத்தளம். இதன் காரணமாக ஹார்வர்ட்  பல்கலைக்கழகத்தின் இணையச்சேவை சிக்கலுக்குள்ளானது. 'மார்க் சக்கர்பர்க்' விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கல்லூரியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டான். பின்பு, தண்டனை இரத்து செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவனும் அவனுடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து யோசித்த யோசனை, ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு வலைப்பின்னலை உருவாக்குவது என்பது.

இதிலிருந்து தனித்து, இன்னும் கொஞ்சம் விரிவாக்கி நண்பர்களை இணைக்கும் முயற்சியில் ‘மார்க்’ இறங்கினான். அம்முயற்சிக்கு 'தி ஃபேஸ்புக்' (The Facebook) என்று பெயரிட்டான். ஜனவரி 2004-இல் இத்தளத்தை அவன் வெளியிட்டான். இதுவும் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கான சேவையாக மட்டும்தான் இருந்தது. பின்பு சில நண்பர்களோடு சேர்ந்து இன்னும் மேம்படுத்தி மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் (Stanford, Columbia, மற்றும் Yale) அதன் சேவையை விரிவாக்கினான்.

இத்தளத்தைத் துவங்கிய சில நாட்களிலேயே அவனுடைய மூன்று நண்பர்கள் தங்களின் யோசனையை இவன் திருடி விட்டதாக வழக்கிட்டார்கள், என்றாலும் இந்த 'தி ஃபேஸ்புக்' மேலும் மேலும் வளர்ந்து 2005ஆம் ஆண்டு பல கூட்டு நிறுவன ஊழியர்களுக்குமான சேவையாக மாற்றப்பட்டது. இதில் 'ஆப்பிள்' மற்றும் 'மைக்ரோ சாப்ட்' நிறுவனமும் அடங்கும். பிறகு 'தி ஃபேஸ்புக்' என்பதலிருந்து 'தி' நீக்கப்பட்டு இப்போது அத்தளம் 'ஃபேஸ்புக்' என்று அழைக்கப்படுகிறது. செப்டம்பர் 26, 2006-க்கு பிறகு 'இமெயில்' விலாசம் கொண்ட '13 வயதைக்' கடந்தவர்கள் அனைவருக்கும் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்க அனுமதி அளிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம் 'ஃபேஸ்புக்'-இன் 1.6% பங்கை 240 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. இதனால் 'ஃபேஸ்புக்'-இன் வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து நவம்பர் 2010-இல் 41 பில்லியன் டாலராக உயர்ந்தது. வட அமெரிக்காவின் மிகப்பெரிய இணைய நிறுவனங்களில் மூன்றாவது இடத்தை 'ஃபேஸ்புக்' பிடித்தது. முதல் இரண்டு - 'கூகுள்' மற்றும் 'அமெசான்'.

உலகின் பல நாடுகளில் இயங்கும் 'சமூக வலைத்தளங்களில்' முதன்மையானதாக 'ஃபேஸ்புக்' இருக்கிறது. சைனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்த்தான், பாக்கிஸ்தான், சிரியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்ய காரணங்களில், இஸ்லாமிற்கு எதிராக ஃபேஸ்புக்கில் செயல்பாடுகள் நடைபெறுகிறது என்பதும் ஒன்று. 'ஃபேஸ் புக்' ஒவ்வொரு நாளும் 20,000 உறுப்பினர்களை நீக்குகிறது. அவர்களின் சட்ட திட்டத்திற்கு எதிராக இருப்பது மற்றும் வயது கட்டுபாடுகள் மீறப்படுவது போன்ற காரணங்களினால்.

'ஃபேஸ்புக்' அரசியல் செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறது. 2008 வட அமெரிக்க தேர்தலின் போது இரண்டு கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களின் 'Debates' (Republican and Democratic debates)-களின் போது மாணவர்களின் கருத்துகளைக் கேட்டறிய இத்தளம் பயன்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் உறுப்பினர்கள் இதில் கலந்துக்கொண்டனர். கருத்துக் கணிப்புக்கு 'ஃபேஸ்புக்' ஒரு முக்கியத் தளமாக இன்று பயன்படுகிறது. மாணவர்களின் அரசியல் ஈடுபாடும், இளைஞர்களை தங்கள் பிரநிதிகளாகத் தேர்ந்தெடுப்பது மற்றும் இளைஞர்கள் வாக்களிப்பதும் இதனால் அதிகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

'மார்க் சக்கர்பர்க்'

பிப்ரவரி 2008-இல் கொலம்பியாவில் ஃபேஸ்புக்கின் ‘One Million Voices Against FARC’ என்னும் குழு, லட்சக்கணக்கானவர்களை ஒருங்கிணைத்து கொலம்பிய இராணுவ குழுவிற்கு (FARC) எதிராக ஊர்வலம் நடத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 2010-இல் வடகொரியாவின் அரசாங்க இணையத்தளமான 'Uriminzokkiri' ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறது. Facebook as "ignoring the difference between correlation and causation" என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.

இருபது வருடங்கள் பிரிந்திருந்த தன் மகளை ஃபேஸ்புக்கின் வழியாக ஒரு தந்தை கண்டெடுத்திருக்கிறார். நாற்பத்தியெட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு மகளும் தந்தையும் இணைந்திருக்கிறார்கள். 102 வயதான ஒரு இங்கிலாந்துப் பாட்டிக்கு ஃபேஸ்புக்கின் வழியாக 4,962 நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவள் இறந்தபோது பெரும்பான்மையோர்கள் இரங்கல் கூட்டத்திற்கு வந்தார்கள். இதனால் பிரபலம் அடைந்த அவளது இரங்கல் செய்தி பல ஊடகங்களில் தலைப்பானது. 69% வட அமெரிக்கர்கள், 67% மத்திய கிழக்கு ஆப்பிரிக்கர்கள், 58% தென்னமெரிக்கர்கள், 57% ஐரோப்பியர்கள் மற்றும் 17% ஆசியர்கள் இதன் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப் பல வழிகளில் மாற்றங்களை நோக்கி நகரும் இந்த 'ஃபேஸ்புக்' தளத்தின் வடிவமைப்பாளர் மற்றும் அதன் ஆரம்ப காலங்களைப்பற்றி 'தி சோசியல் நெட்வொர்க்'(The Social Network) என்னும் படம் விவரிக்கிறது. இதன் நிறுவனர் 'மார்க் சக்கர்பர்க்'-இன் மீது அவரது நண்பர்கள் தொடுத்த வழக்குகளின் விவரிப்பாக நகரும் இப்படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.


படம் பார்க்கப் பார்க்க நம்முள் ஏற்படும் மாற்றங்களை, உற்சாகத்தை, பிரமிப்பை இங்கே வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சொல்ல முடியாத ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் இப்படம் ஏற்படுத்துகிறது.

இளைஞர்கள் வருங்காலத் தூண்கள் என்ற சொல்லாடல், பெரும்பாலும் உண்மையாக்கப்படுகிறது. இளைஞர்கள் முதியவர்களாக வேண்டியதில்லை, இளைஞர்களாக இருக்கும்போதே வருங்காலத்தை நிர்மாணிக்கக் கூடியவர்களாக முடியும் என்ற பேருண்மையையும், மனதில் தோன்றும் சிந்தனையானது இப்பூமியெங்கும் நிறைந்து கிடக்கும் மனிதர்களுக்கானதாகயிருப்பின் வருங்காலம் வளமாகும் என்பதும் இப்படம் சொல்லும் செய்தி.



புரட்சிக்கான ஆயுதங்களில் ஒன்றாக இச்சமூக வலைத்தளங்கள் இன்று இடம்பிடித்திருக்கின்றன. இதை உணர்த்தும் எகிப்திய புரட்சி, மாற்றூடகம் ஒன்றை வருகாலத்திற்கான ஒரு புதிய பாதையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது.

நம் நாட்டில் இந்த தேர்தலில் 75%-80% வாக்குபதிவுகள் நிகழ்ந்ததுக்கும் கூட, ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிளாக் (Blog) எழுதுதல் போன்ற இணைய சாத்தியங்கள், ஒரு காரணம் எனத் தோன்றுகிறது. இதில் இளைஞர்கள் எழுதவும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும், விவாதிக்கவும், சண்டைபோடவும் முடிகிறது, அதன் வெளிப்பாடாக செயல்படவும் தூண்டுகிறது என நான் நம்புகிறேன்.



கருத்துகள்

  1. வழக்கம்போல சிறப்பானதொரு கட்டுரை விஜய் சார். சோசியல் நெட்வொர்க் திரைப்படம் நல்லதொரு ஆக்கம். நீங்கள் சொன்னதுபோலவே கலவையான உணர்வுகளைக் கொடுத்த படைப்பு அது. ஃபேஸ்புக் பற்றிய அதன் வீச்சுக்களைப் பற்றிய முக்கியமாக ஆரோக்யமான பாதையில் பன்படக்கூடிய அதன் செயல்பாடுகளை விவரித்த விதத்திலும் மிக முக்கியமான கட்டுரையாக இதைப்பார்க்கிறேன்.

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுக்கு வலு சேர்க்கும் வகையில், இளைஞர்கள் பெருவாரியாக வாக்களித்த செய்திகள் ஊடகங்களில் வருகிறது.பதிவுலகமே கலைஞருக்கு எதிராக இருந்தது.மே 13... நிரூபிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி உலக சினிமா ரசிகன்

    பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை ;The Social Network-2010 இல் பதிவு செய்யப்பட்டவை எந்தளவுக்கு உண்மையாக இருக்கும். எத்தனை விதம் பதிவு செய்து இருப்பாங்க ....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன