முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்


ஆயிரம் வார்த்தைகள் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள். அப்படி பல புகைப்படங்கள், தான் சொல்ல வந்தக் கருத்தை முழுமையாக உலகத்தாருக்குக் கொண்டு சேர்த்திருக்கின்றன. அவ்வகையில் புகழ் பெற்ற சில புகைப்படங்களையும், அதன் முன்/பின் விவரங்களையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகப்புகழ் பெற்றப் பல படங்களிலிருந்து சிலவற்றை மட்டுமே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளேன். அவை கடந்த கால நினைவுகள் மட்டுமல்ல, நிகழ்காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. இப்புகைப்படங்கள் மானுடர்களுக்கான செய்திகளைத் தாங்கிக் கொண்டுள்ளன.


மனசாட்சியை உலுக்கியப் புகைப்படம்:

Kevin Carter’s most famous photo Source: The Unsolicited Opinion

1994-ஆம் ஆண்டுக்கான 'புலிட்சார் விருது' (Pulitzer Prize) பெற்ற இப்படம் 1993 ஆம் வருடம் சூடானில் எடுக்கப்பட்டது. சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக் கணக்கானவர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருந்தது. ஐ.நா சபையின் மூலம் உணவு பொருட்கள் நாடு முழுவதும் பரவலாக வழங்கப்பட்டன. அப்படியான ஒரு உணவு முகாமை நோக்கித் தவழ்ந்து சென்ற ஒரு பெண் குழந்தையையும், அவளைத் தன் உணவாக்கிக் கொள்ள காத்திருக்கும் பருந்தையும் புகைப்படமாக எடுத்தவர் 'கெவின் கார்டர்' (Kevin Carter) என்னும் புகைப்படக்காரர்.

குழந்தை எப்போது இறக்கும், நாம் எப்போது அதை உணவாக்கிக் கொள்ளலாம் என்று பருந்து காத்திருக்கும் இப்படம் வெளியான போது உலகத்தை வெகுவாக பாதித்தது. சூடானின் அப்போதைய நிலைமையை இப்படம் முழுமையாக உலகத்தாருக்கு விளக்கியது. அந்தக் குழந்தை என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. அதைப் புகைப்படமாக எடுத்த கார்டருக்கும் கூட தெரியவில்லை.

இப்படத்தை இப்போது பார்த்தால் கூட நம் மனம் பதைபதைக்கும். இது சொல்லும் செய்தி இன்று கூட நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஈவு இரக்கமற்ற இவ்வாழ்வின் குரூர முகத்தை நாம் கண்டு கொள்ள முடியும். இப்படம் சொல்லும் செய்திகள் பல இருக்கின்றன.

இப்படத்தோடு சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகளில் ஒன்று இப்படத்தின் களமான சூடானைப்பற்றியது மற்றொன்று இப்படத்தின் புகைப்படக்காரர் கெவின் கார்டரைப் பற்றியது. இரண்டுமே நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டியவை.

..............................................................................................................

தெற்கு சூடான்:

வட ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் பல நூற்றாண்டுகளாகவே அந்நிய தேசத்தவரால் அடிமைப்படுத்தப்பட்டு ஆளப்பட்டிருக்கிறது. உலகின் பெரிய நதியான 'நைல் நதி' இந்நாட்டின் ஊடாக பாய்கிறது. இதன் பொருட்டே பல தேசங்கள் இந்நாட்டை வசப்படுத்த முயன்றிருக்கின்றன. அதில் நமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பிரித்தானியர்களும் அடங்குவர். வழக்கம் போல அந்நாட்டையும் பிரித்தானியர்கள் காலனியாக்கி ஆண்டு வந்திருக்கின்றனர். வடக்கு, தெற்கு என இரண்டு பகுதியாக இந்நாடு பிரிந்துகிடக்கிறது. 'சூட்' என்னும் சதுப்பு நிலம் இந்நாட்டை இரண்டாக பிரிக்கிறது. பல நூற்றாண்டு காலம் எகிப்தியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் வடக்குப் பகுதி சூடான், இஸ்லாம் மற்றும் அரேபிய மதத்தை தழுவிய நாடாக இருக்கிறது. தெற்கு சூடான் கிருத்துவத்தையும் பல உள்ளூர் மதங்களையும் அடிப்படையாகக் கொண்டது.

பதினேழாம் நூற்றாண்டு வரை பெரியதாக எந்த உள்ளூர் பிரச்சனையும் வரவில்லை. அதன் பிறகுதான் அதன் ஆட்சியாளர்கள் தெற்கு சூடான் மற்றும் அதன் உட்புற நிலங்களின் வளங்களை சுரண்ட முயன்று இருக்கின்றனர். பிரித்தானியர்கள் எகிப்தியர்களோடு* சேர்ந்து ஆட்சி செய்தபோது வடக்கு மற்றும் தெற்கு சூடான் பகுதிகளை தனித்தனி நிர்வாகமாகத்தான் நிர்வகித்து இருந்திருக்கின்றனர்.

(*பிரித்தானிய காலனி, எகிப்திய அதிகாரிகள் என்ற ஒரு கூட்டு முறை. காரணம் நைல் நதி மீதான கட்டுப்பாடு - அது ஒரு தனிக் கதை)

வடக்குப் பகுதியில் அரேபியர்களின் ஆளுமையும் தெற்கு பகுதியில் கத்தோலிக்க கிருத்துவர்களின் ஆளுமையும் இருந்திருக்கின்றது. இரண்டு பகுதிக்கும் எப்போதும் ஒரு பிணக்கம் இருந்திருக்கின்றது. 1946-ஆம் ஆண்டுவாக்கில் வடக்கு சூடானியர்களுக்கு அதிகாரம் கிடைத்தபோது இரண்டு பகுதிகளையும் இணைக்க முயன்றிருக்கிறார்கள். தெற்கு பகுதிகளிலும் அரேபிய மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது. தெற்குப்பகுதியின் அதிகாரமும் வடக்கு சூடானியர்கள் எடுத்துக்கொண்டார்கள். இது தெற்கு சூடான் பகுதியில் கொதிப்பை ஏற்படுத்தியது. அது தொடர்ந்து வளரவும் செய்தது. பிறகு 1953-இல் பிரித்தானியர்கள் சூடானுக்கு விடுதலை தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு 1956-இல் சுதந்திர சூடான் அரசு அமைந்தது. அதில் வடக்கு சூடானியர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தது. தெற்கு சூடானியர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது.

இதனால் தெற்கு சூடானில் பல போராட்டங்கள் நடந்தன. 1955-இல் துவங்கிய முதல் சூடானிய உள்நாட்டு போர் 1972-வரை நடந்தது. தெற்குப் பகுதிக்கு சுயாட்சியும் கூடுதல் அதிகாரம் வேண்டி நடந்த இப்போர் சரியான தீர்வை எட்டாமல் சமரசங்களால் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பதினேழு ஆண்டு காலப்போரில் ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

 பிறகு 1983-இல் இரண்டாம் சூடானிய உள்நாட்டு போர் துவங்கியது. இதில் இருபது லட்சம் மக்கள் வறுமை, பட்டினி மற்றும் பல தொற்று நோய்களால் கொல்லப்பட்டனர். நாடெங்கும் வறுமை தலை விரித்தாடியது. பட்டினிச் சாவுகளைத் தடுக்க அந்நாட்டு அரசால் முடியவில்லை. நாற்பது லட்சம் தெற்கு சூடானியர்கள் இடம் பெயர்க்கப்பட்டார்கள். இதில் பல தடவை இடம் பெயர்ந்தவர்கள் அதிகம். இரண்டாம் உலகப்போருக்கு பின் அதிக மக்களைக் காவு வாங்கியது இப்போர் தான். பிறகு அமைதி ஒப்பந்தங்கள் மூலம் 2005-இல் இப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

2005 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி 2011-இல் தெற்கு சூடானில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 98.83 விழுக்காடு வாக்குகளைத் தனி நாடாக பிரிவதற்கு பெற்று 9.7.2011 அன்று தெற்கு சூடான் விடுதலைப் பெற்ற தனி நாடாக மலர்ந்தது. ஆப்பிரிக்கக் கண்டத்தின் 54 ஆவது நாடாகவும், ஐ.நா மன்றத்தில் 193-ஆவது நாடாகவும் தெற்கு சூடான் இருக்கிறது.

தெற்கு சூடானில், இரண்டாம் சூடானிய உள்நாட்டுப் போர்(1983–2005) நடந்தக் காலகட்டத்தில்தான் நாம் மேலே பார்த்தப்படம் எடுக்கப்பட்டது. விடுதலைக்கானப் போரில் பல இன்னல்களைச் சந்தித்தும், பல லட்சம் மக்களை இழந்தும் அவர்களின் விடுதலைத் தாகம் தொடர்ந்தது. அதன் விளைவாக இன்று அத்தேசம் விடுதலை பெற்ற நாடாக உருவாகியிருக்கிறது.

by Kevin Carter Source: Miko Photo

..............................................................................................

'கெவின் கார்டர்':

தென்னாப்பிரிக்காவில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். விளையாட்டுத்துறைப் புகைப்படக்காரனாக தன் வேலையைத் துவங்கியவர். பின்பு 1993-இல் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரையும் அதன் பட்டினிச்சாவுகளையும் புகைப்படம் எடுக்க சூடானுக்கு போனார். ஐ.நா திட்டத்தின் மூலம் உணவு கொண்டுசென்ற ஒரு விமானத்தில் கார்டர் சென்றிருக்கிறார்.

கெவின் கார்டர்
அவ்விமானம் தெற்குச் சூடானியப் பகுதியில் ஒரு கிராமத்தில் உணவுப் பொருட்களைக் கொடுப்பதற்காக தரை இறங்கி இருக்கிறது. உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து முண்டி அடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கின்றார்கள். கார்டர் அதை புகைப்படம் எடுக்கத் துவங்கி இருக்கிறார். பெற்றோர்கள் உணவு பெறுவதில் மும்மரமாக இருந்ததால், கவனிப்பாரின்றி தனித்து விடப்பட்ட ஒரு பெண் குழந்தை உணவிற்காக அவ்வுணவு முகாமை நோக்கி தவழ்ந்து வந்திருக்கின்றாள். அவளுக்கு உணவு முகாமிற்கும் ஒரு கிலோமீட்டர் தூரம். பட்டினியில் வாடிய அப்பிஞ்சுக் குழந்தை போராடி தவழ்ந்து வருவதைப் பார்த்த கார்டர் புகைப்படம் எடுக்கத் தயாராகி இருக்கிறார். அந்நேரம் ஒரு பருந்து அவள் அருகே வந்து அமர்ந்திருக்கிறது.

அதன் நோக்கம், அந்த குழந்தையை உண்பது. இதைப்பார்த்த கார்டர் சிறிது நேரம் காத்திருக்கின்றார். அப்பருந்து என்னதான் செய்யப்போகிறது என்பது போல. இப்படி அவர் காத்திருந்தது 20 நிமிடத்திற்கும் மேலாக. பின்பு பருந்து பறந்து போய் விடாத அளவிற்கு மெதுவாக அக்குழந்தைக்கு அருகில் போய் படமெடுத்திருக்கிறார். அதன் பின் அப்பருந்தைத் துரத்திவிட்டு தன் விமானத்திற்கு சென்று விட்டாராம். அக்குழந்தைப் பற்றி அவர் யோசிக்கவில்லை.

இப்படம் மார்ச் 26, 1993-இல் 'நியூ யார்க்' பத்திரிக்கையில் வெளிவந்தது. அது வெளிவந்த நாளிலிருந்து பல நூறு மக்கள் அக்குழந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார்கள். ஆனால் பத்திரிக்கைக்கு அக்குழந்தையின் நிலைப் பற்றி தெரியவில்லை. அவள் உணவு முகாமை அடைந்தாளா அல்லது அவள் பெற்றோர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது இன்று வரை யாரும் அறியாத ஒன்றுதான்.

'அவளுடைய இன்னலை, சரியான ஒரு கோணத்தில் புகைப்படம் எடுக்கத் தன் கேமராவைக் கையாண்டுக்கொண்டிருந்த அப்புகைப்படக்காரரும் ஒரு கொடூர மிருகம்தான், அக்காட்சியின் மற்றொரு பருந்து அவர்' என்று இப்படத்தைப் பற்றி 'St. Petersburg Times' பத்திரிக்கை எழுதியது.

புலிட்சார் விருதைப் பெற்றாலும், இப்புகைப்படத்தால் புகழடைந்தது போலவே பல கண்டனங்களைப் பெற்றார் கார்டர். இதன் விளைவாகக் குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். மன உளைச்சல்கள் அதிகரித்தன.

கெவின் கார்டர் 1960-1994

1994, ஜூலை 27ஆம் தேதி கார்டர், தான் சிறுவயதில் விளையாடிய, வளர்ந்த ஒரு நதிக்கரைக்குப் (Braamfontein Spruit river) போனார். அங்கே தன் காரை நிறுத்தி விட்டு, ஒரு ரப்பர் குழாயின் ஒரு முனையை காரின் புகை வெளியேற்றியில் (exhaust pipe) இணைத்து, மறுமுனையை தன் காருக்குள் கொண்டுச் சென்றார். பின்பு, காரின் பக்கக் கண்ணாடிகளை மூடிவிட்டு காரை இயக்கத்தில் வைத்தவர், காருக்கு உள்ளாக அமர்ந்து தன் 'Walkman'-ஐ காதில் மாட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். காரிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைட் வாயு காருக்குள் நிரம்ப துவங்கியது. பிறகு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது 'கார்பன் மோனாக்சைடின்' விஷத்தன்மையால் இறந்திருக்கிறார் என்பது தெரியவந்தது.

At the start of his career, Carter took this first-ever photo of a necklacing victim burning Source: Miko Photo

அக்குழந்தை சம்பந்தமான கண்டனங்களால் மனசாட்சி உலுக்கப்பட்ட அவர், குற்றவுணர்ச்சியின் மிகுதியில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார். அவர் தன்னை மாய்த்துக்கொண்ட போது அவருக்கு வயது 33. புலிச்சார் விருது பெற்று இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. தன் தற்கொலைக் கடிதத்தில் அவர் இப்படி எழுதி வைத்திருந்தார்.

"I am depressed ... without phone ... money for rent ... money for child support ... money for debts ... money!!! ... I am haunted by the vivid memories of killings and corpses and anger and pain ... of starving or wounded children, of trigger-happy madmen, often police, of killer executioners ... "


மேலும் அவரின் நாட்குறிப்பேட்டில் இப்படி எழுதி இருந்தாராம்.


"Dear God, I promise I will never waste my food no matter how bad it can taste and how full I may pray that He will protect this little boy, guide and deliver him away from his misery, I pray that we will be more sensitive towards the world around us and not be blinded be our own selfish nature and interests"

இம்மனிதனின் மரணம் சொல்லும் செய்தி நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாத ஒன்று. பிறிதொரு நாளில் இத்தகைய குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆட்படாமலிருக்க வேண்டுமானால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் ஒரே வழி.




கருத்துகள்

  1. நண்பரே!
    தாங்கள் எழுதிய பதிவுகளில் மிக முக்கியமான ஒன்று.கனத்த இதயத்துடன் நன்றி சொல்கிறேன்.என் போன்ற பாமரர்களுக்காக கார்ட்டரின் கடிதத்தை தமிழாக்கம் செய்து பின்னிணைக்கவும்.

    பதிலளிநீக்கு
  2. அந்தப்புகைப்படத்தை எடுத்தவர் அந்த குற்ற உணர்ச்சியின் காரணமாகவே இறந்தார் என்பதுமட்டுமே அறிந்திருந்தேன். இன்றுதான் விரிவாகத் தெரிந்துகொண்டேன்! நன்றி பாஸ்!

    //பிறிதொரு நாளில் இத்தகைய குற்ற உணர்ச்சிக்கு நாம் ஆட்படாமலிருக்க வேண்டுமானால் இன்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்வதுதான் ஒரே வழி//
    உண்மை!

    புகைப் படங்கள் பற்றி இன்னும் சொல்லுங்க காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  3. சூடான் குறித்த வரலாற்றுப் பின்னணியெல்லாம் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. மிக முக்கியமான ஒரு பகிர்வு இது.!

    பதிலளிநீக்கு
  4. நன்றி உலக சினிமா ரசிகன் அவர்களே..

    கடிதங்களை தமிழில் மொழி மாற்றம் செய்யும் போது அதன் அழுத்தம் குறைந்து விடுகிறது. அதுவுமில்லாமல் கோர்வையாக சாரம் மாறாமல் மொழி மாற்றம் செய்ய என்னால் முடியவில்லை.மன்னிக்கவும். அதனால்தான் அதை அப்படியே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்.(நண்பர்கள் யாராவது முடிந்தால் அக்கடிதங்களை தமிழில் மாற்றித் தரவும்)

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஆதி..

    /சூடான் குறித்த வரலாற்றுப் பின்னணியெல்லாம் தங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை./ - வரலாறுகளை குறிப்பாக போராட்ட வரலாறுகளை படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு எனக்கு. அதுவுமில்லாமல் இணையம் இருக்கும்போது தகவலுக்கா பஞ்சம்.!!

    பதிலளிநீக்கு
  6. விஜய்,

    இப்புகைப்படம் குறித்த தகவல் எங்கேனும் கிடைக்குமா என பலதடவை தேடியிருக்கிறேன். தற்போது நீங்கள் பதிவிட்டிருப்பது கண்டு நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.

    இது போன்ற தொடர்ந்த பதிவுகள் வரவேற்புக்குரியதே.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விசயம்.இப்படம்,கார்டர் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நீங்கள் சொன்ன விதம் நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்க.நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சார் மிக அருமையாக இருக்கிறது கட்டுரைகள் தொடர்ந்து எழுதுங்கள் என் கண்கள் கலங்குகிறது அந்த புலிட்சர் விருது பெற்ற கெவின் கார்டர் இறந்தது துரதிருஷ்டவசமானது :'( வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் Feed முழுவதுமாக கொடுத்தால் இன்னும் நிறைய பேரை சென்றடையும் உங்கள் கட்டுரைகள் நண்பரே நன்றி வணக்க்ம்

    பதிலளிநீக்கு
  9. நன்றி வடிவேலன்..

    //உங்கள் Feed முழுவதுமாக கொடுத்தால் // அதுதான் எப்படி என்றுத் தெரியவில்லை. அதைக் கொஞ்சம் விளக்குங்களேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //அந்த காட்சியின் மற்றொரு பருந்து அவர்'//

    காட்சிப்படுத்தலை கருத்தில் கொண்ட அவர் மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டாரா..?!அவருடைய குற்றஉணர்வு அவரின் முடிவுக்கு கா"ரணமாகி" உள்ளது.அது போன்ற புகைப்படக்கலைஞர்களைக் குறித்த கட்டுரைகளையும்,புகைப்படங்கள் குறித்த கட்டுரைகளையும் உங்கள் தளத்தில் மேலும் எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான பதிவு. ஏற்கனவே பார்த்த புகைப்படம். சிறிதளவு விவரமே தெரியும். வரலாற்று பின்னணியுடன் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. இதைப்போல நிறைய பதிவுகள் போடவும்.

    பதிலளிநீக்கு
  12. manathai urukiya oru seithi , migavum nanri

    பதிலளிநீக்கு
  13. மாந்தநேயத்தை அழித்து சுரண்டிக்கொழுக்கும்
    முதலாளித்துவம் வீணாக்கும் பொருள்களே
    இந்த எளிவர்களுக்கு போதுமானது!

    பதிலளிநீக்கு
  14. மாந்தநேயத்தை அழித்து சுரண்டிக்கொழுக்கும்
    இவ்வுலகின் முதலாளித்துவம் வீணாக்கும் பொருள்களே
    இந்த எளிவர்களுக்கு போதுமானது!

    பதிலளிநீக்கு
  15. Ya i
    search lot about carter but i just now read abt the last min of Carter. thats prove he is not only a good photographer he more than a human

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன