முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட்டகத்தி




மிக இயல்பாய் ஒரு திரைப்படம். காட்சி அமைப்பு, நடிகர்கள் தேர்வு, நடிப்பு, வசன உச்சரிப்பு என அத்தனையும் மிக இயல்பாய் இருக்கிறது. பதின்பருவத்தில் எல்லா இளைஞனும் இளைஞியும் கடந்து வரும் வாழ்க்கையை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரையும், அவர்களின் வாழ் சூழ்நிலையைப் பொருத்து, அவர்களுக்கான பதின்ம வயது காதல் அல்லது பாலுணர்ச்சி கடந்து செல்கிறது. இப்படத்தில், சென்னையின் விளிம்பில் பரவி இருக்கும் சிறு கிராமங்களில் ஒன்றைக் களமாகவும், அதன் இளம் பருவத்தினரை பாத்திரங்களாகவும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

படிப்பு, வேலை பொருட்டு தினமும் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் பதின்பருவத்தினர், அநேகமாக எல்லோரும் சந்தித்த காதல் நாட்கள் திரையில் விரிகின்றன. பேருந்துக் காதல் எல்லா நகரங்களிலும், கிராமங்களிலும் நடக்கிறது. இதை தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாது என்றுதான் நினைக்கிறேன். அப்படியான காதல் காட்சிகளும், விடலைத்தனங்களும் கொண்ட சம்பவங்களால் படத்தை நிறைத்திருக்கிறார் இயக்குனர். பல காட்சிகள் பார்வையாளர்களை தங்கள் பதின்ம பருவத்திற்கு அழைத்துச் செல்கின்றன. திரையரங்கு கொண்டாட்டத்தில் திளைக்கிறது. அப்படியான நாட்களை கடத்து வந்து விட்டோமே என்ற ஏக்கத்தை பெரும்பாலானோருக்கு அந்தக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் அப்படித் தோன்றியது என்பதிலிருந்து இதைச் சொல்லுகிறேன். கதை சொல்லத் தேவையான இடத்தை சம்பவங்களின் மூலம் நிறைத்திருப்பதும், கதை சொல்ல மிகக் குறைவான நேரத்தையே எடுத்துக் கொண்டிருப்பதும் ஒருவேளை குறைகளாகத் தோன்றினாலும், ஒரு சுவாரசியமான படத்தைப் பார்த்த நிறைவு கிடைக்கிறது.

கதாநாயகன் தினேஷ், கதாநாயகி நந்திதா, நாயகனின் குடும்பம் குறிப்பாக அவரின் அப்பா, நண்பர்கள், பெண்கள், அடியாட்கள் என படம் முழுவதும் வரும் கதாப்பாத்திரங்கள் நிறைவாக இருக்கிறார்கள். சரியான பாத்திரத் தேர்வு செய்யப்பட்டு, நல்ல நடிப்பும் வாங்கப்பட்டிருக்கிறது. கதாநாயகன் தினேஷை குறிப்பிட்டே ஆக வேண்டும். தன் பாத்திரத்தை உணர்ந்து மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிறைவான நடிகரைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. நாயகி நந்திதாவும் அழகாக இருக்கிறார். நடிப்பும் அழகு. இருவரையும் வாழ்த்தி வரவேற்போம்.

துவக்கக் காட்சியிலிருந்து படம் முழுவதும் இயக்குனர் காட்டி இருக்கும் நுணுக்கங்கள் அபாரம். கதைக்கு நேரடியாகத் தேவையற்ற பல ஷாட்டுகள் படத்திலிருக்கின்றன. அவை இல்லாமல் கூட அக்காட்சியை எடுக்க முடியும். அது நிறைவாக கூட இருக்கும். ஆனால் அத்தகைய ஷாட்டுகளை வைத்திருப்பதன் மூலம், கதை நிகழும் களத்தை, காலத்தை நிர்ணயிக்க மட்டுமல்லாமல் அதை ஒரு பதிவாகவே இயக்குனர் கையாண்டிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. காட்சியோடு சம்பந்தப்படாத அட்மாஸ்பியர் ஆட்களின் அசைவுகளையும், சிறு செயல்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார். இது அவரின் உழைப்பை, ஒரு சூழ்நிலையை அவர் அவதானிக்கும் விதத்தை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு வகையில் கதையின் நம்பகத் தன்மையை, இயல்பை அதிகரிக்கிறது என்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை, பின்னணியிசை என எல்லாம் நிறைவாகச் செய்யப்பட்டிருக்கிறது. மிக இயல்பான ஒளியமைப்பைச் செய்திருக்கிறார் பி.கே.வர்மா. நிறைவாக இருக்கிறது. இசையும் இதம். உறுத்தலற்று இயல்பாய் தேவையான அளவு இருக்கிறது.

இயக்குனர் பா.ரஞ்சித் கவனிக்கப்பட வேண்டியவர். மிக நேர்த்தியான ஒரு படத்தை அதன் இயல்போடு கொடுக்க முயன்றிருக்கிறார். அதை நிகழ்த்தியும் காட்டி இருக்கிறார். மிகக் கடினமான உழைப்பும், செய்நேர்த்தியும், தொழில் ஆளுமையும் கொண்ட இயக்குனராக இருக்கிறார். அநேகமாக இது அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதையாகவே இருக்க முடியும். படித்து, கேள்விப்பட்டு மட்டுமே எடுத்து விடக்கூடிய சாத்தியமில்லா வகையில் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. வாழ்ந்திருந்தால் மட்டுமே இது முடியும்.

இத்தகைய படங்கள் ஓடுவதன் மூலம்தான், தமிழ் சமூகம் தமக்கான திரைப்படங்கள் எடுப்பதை நோக்கி நகர முடியும் என நினைக்கிறேன். அண்மையில் திரு.பாலுமகேந்திரா இப்படிக் குறிப்பிட்டார். ‘நாம் வாழும் சமூகத்திலிருந்து எடுக்கப்பட்ட கதை அதாவது நம் கதை, தொழில் புலமை கொண்ட ஒரு படைப்பாளியால் எவ்வித சமரசங்களும் செய்துக் கொள்ளாமல் எடுக்கப்பட்டால், அது நல்ல படமாக இருக்க சாத்தியம் இருக்கிறது’. இதில் சாத்தியம் என்பதை அழுத்திச் சொன்னார். மேலும் இப்படி எடுக்கப்படுகின்ற எல்லா படங்களுமே நல்ல படங்களாக இருந்து விடும் என்பதில்லை, சாத்தியம் மட்டுமே இருக்கிறது என்றார். எனில், எது நல்ல படம்? அதற்கும் அவரே பதில் சொல்லுகிறார்.. அது அம்மாவின் உணவைப்போன்று இருக்க வேண்டும். அக்கறையோடு உடலைக் கெடுக்காத வகையில் சமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதேபோல சமூக அக்கறையோடும், தனி மனிதனுக்குள் உறங்கும் மிருகத்தை தூண்டாத வகையிலும் எடுக்கப்பட்ட படத்தை நல்ல படம் என அடையாளம் கொள்ளலாம் என்றார்.

நம் சமூகம் சார்ந்த கதைகளைத் திரைப்படங்களாக்கும் காலத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அடையாளத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது. விடலைக் காதலைப் பற்றி பேசும் படமானாலும் இது வரவேற்கப்பட வேண்டிய படம் என நான் கருதுகிறேன். சினிமாத்தனமான, வாழ்க்கையில் முயற்சித்துக்கூட பார்க்க முடியாத பல காதல்களை நம் திரைப்படங்கள் அரங்கேற்றியிருக்கின்றன. அவை வெற்றிப் படங்களாகக்கூட இருந்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், இப்படம் நம் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டக் காதலைச் சொல்லுகிறது. நம் சக மனிதர்களைப் பற்றி பேசுகிறது. ஒரு இளைஞனின் பதின்ம பருவத்துக் காதலையும், அதற்கான காட்சிகளைக் கொண்டிருப்பினும் ஒரு சமூகத்தை இப்படம் பதிவு செய்திருக்கிறது. சென்னையின் புறநகர் வாழ்க்கை, அதன் இயல்போடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பேருந்துக் கானா முதல் மரண கானா வரை அது விரவிக் கிடக்கிறது. காதல் கதையின் மூலமாகவாவது நம் சமூகத்தை பதிவு செய்யும் இந்த முயற்சி, மெது மெதுவாக ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி நம் திரைப்படங்களை நகர்த்தும் என நினைக்கிறேன். ஒருவேளை, இது ஒரு மசாலா படத்தின் வெற்றியால் முறியடிக்கப்படலாம். இருப்பினும் எதிர்காலத் திரைப்படங்களை நோக்கிய நற்சிந்தனையை இப்படம் கொடுக்கிறது.

நம் சமூகம் சார்ந்த கதையை அதன் களனோடும், செய்நேர்த்தியோடும் கொடுத்திருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்தை பெருத்த கரவோசையோடு நாம் வரவேற்கலாம்.

அட்டக்கத்தியானாலும் மிகுந்த கவனத்தோடு செய்யப்பட்டிருக்கிறது.




   

கருத்துகள்

  1. நண்பரே...
    இப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை.’ஞானவேல்’ என்ற தயாரிப்பாளர் இப்படத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால், ‘சகுனி’களிடம் சிக்கக்கூடாது என்று நினைத்து இப்படத்தை தவிற்க்க நினைத்தேன்.
    தங்கள் பதிவு படத்தை பற்றிய பார்வையை மாற்றி அமைத்து விட்டது.
    இன்றே பார்த்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. விரிவான விமர்சனம்...
    நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. இத்தகைய படங்கள் ஓடுவதன் மூலம்தான், தமிழ் சமூகம் தமக்கான திரைப்படங்கள் எடுப்பதை நோக்கி நகர முடியும் என நினைக்கிறேன்.
    நிச்சயம் நடக்கும்,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன