இந்த இக்கட்டான நேரத்தில்…
நாளை யார் இருப்போம்… இருக்க மாட்டோம்..!? தெரியவில்லை.
பூமி என்னமோ, பல நூற்றாண்டுகளாக உருண்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம்தாம், இடையில் 60, 70 வருடங்கள் வந்து விட்டுப்போகிறோம். கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்த, வாழும் இந்த பூமியில்… நம்மை அறிந்தவர்கள், நாம் அறிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?
பொறுமையாக கணக்கெடுத்துப்பார்த்தால், 300, 400 பேர்கூட தாண்டமாட்டார்கள். பள்ளியில் 100 பேர், கல்லூரிகாலத்தில் 100 பேர், பணியில் 100, 120 பேர், உறவினர் 50,60 பேர்… அவ்வளவுதானே..!?
அதில் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் 50 பேர் இருக்குமா? இதில் மாதத்தில் ஒருமுறையேனும் பேசும் நபர்கள்? 10 அல்லது 20.
நம்முடைய நல்லது, கெட்டதில் பங்கெடுப்பவர்கள் எனப்பார்த்தால், அதிகபட்சம் 50 பேர் தாண்டினாலே, நாம் அதிஷ்டசாலிகள் தான்.
அவ்வளவுதாம்பா நாம் இந்த பூமியில் சம்பாதித்த உறவுகள். மீதமெல்லாம்… நாம் வாழ்ந்த காலத்தில் உடன் பயணித்தவர்கள்.
இதில் யாரிடமாவது பகைக்கொள்ள முடியுமா? வன்மம் கொண்டிருக்க வேண்டுமா? பொறாமைப்பட தோணுமா? உறவு, நட்பு, பணியில் முரண்பாடு வரலாம்… எதிர்கருத்து இருக்கலாம், எதிரியாக இருக்க முடியுமா? அவசியமா? அது எத்தனை அபத்தம்…!?
எனில், நாம் அறிந்த, நம்மை அறிந்த நபர்களோடு நம்முடைய உறவு எப்படி இருக்க வேண்டும்..!?
அன்பும், நட்பும் கூடவே நன்றியும் சேர்ந்து இருக்க வேண்டும் அல்லவா..!?
நன்றி எதற்கு?
நம்மோடு பிறந்ததற்கும், நம்மை உறவாக, நட்பாக ஏற்றுக்கொண்டதற்கும், நாம் வாழும் காலத்தில் வந்து இணைந்ததற்கும்.
பல நூற்றாண்டுகளாக நீண்டு கிடக்கும் மனித வரலாற்றோடு பொருத்திப்பாருங்கள், நான் சொல்லுவது புரியும்.
எத்தனை தனித்துவமான உறவு இது?
நன்றி நண்பர்களே… நன்றி உறவுகளே…!
😍🙏
#நடந்ததும்_கடந்ததும்
#வாழ்ந்தது_இனிது
#vijayarmstrong
கருத்துகள்
கருத்துரையிடுக