முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விண்ணைத் தாண்டி வருவாயா- நேர்த்தியான படைப்பு


"விண்ணை தாண்டி வருவாயா"வில் உயர்ந்த ரசனையையும், உண்மையான காதலையும், சிறந்த தொழில் நுட்பத்தையும், தகுதி வாய்ந்த கலைஞர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.

இந்த படத்தின் கதையைப்பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. ஏனெனில்.. காதலித்த அனைவருமே அதைத் தாண்டித்தான் வந்து இருப்பார்கள். யதார்த்தமான கதை, நம் வாழ்க்கையிலையே நடந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் கொண்ட காட்சியமைப்புகள், நாமே பேசின, கேட்ட, பழகின
வசனங்கள், நாம் அனுபவித்த உணர்வுகள் என படம் முழுக்க விரவி கிடக்கிறது.

தமிழில் நாம் நிறைய காதல் படங்களைப் பார்த்திருக்கிறோம். நெகிழவைத்தவை, அழவைத்தவை என அதில் சில படங்களுண்டு. அந்த படங்களெல்லாமே சினிமா என்ற எல்லைக்குள்ளிருந்தே செயல்பட்டு இருக்கின்றன. இங்கே தான் இந்த படம் வித்தியாசப்படுகிறது. சினிமாவின்
எல்லா கட்டுப்பாடுகிலிருந்தும் உங்களை விடுவித்து முழுமையான காதலை, வாழ்க்கையை உணரவைக்கிறது.

தொழில்நுட்பம் என்று பார்த்தால்.. உயர்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தொழில்நுட்ப விதிகளுக்குள் கட்டுப்படாமல் தன் தேவை, ரசனை, படைப்பு என சுதந்திரமாக எல்லைகளைக் கடந்து உருவாகிருக்கிறது.

இனிமையான பாடல்களும், நுட்பமான பின்னணி இசையும், எதார்த்தமான ஒளியமைப்பு மற்றும் அழகியலோடு கூடிய ஒளிப்பதிவும், ரசனையான ஆடைவடிவமைப்பு, வண்ண மயமான கலையமைப்பு, மனதை மயக்கும் வெளிப்புறத்தளம் என படம் முழுவதையும் மிக உயர்ந்த ரசனையில் உருவாக்கிருக்கிறார்.

சிம்பு, திரிஷா இருவருக்குமே இது மிக முக்கியமானப் படம். அவர்களின் வாழ்நாளில் இதுவரை கிடைக்காத கதாபாத்திரம். இருவருமே மிக நிறைவாக, சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

திரைப்படமென்பது.. ஒரு கதை, அதை சொல்லுவதற்கான கதாப்பாத்திரங்கள் என்ற முறையில் சொல்லுவது ஒருவிதம். சில கதாபாத்திரங்கள்,  அவர்களுடைய கதை என சொல்லுவது இன்னொரு முறை. இந்த படம் இரண்டாவது முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

சிம்பு(கார்த்திக்), அவருடைய அப்பா, அம்மா, தங்கை..

திரிஷா(ஜெசி), அவருடைய அப்பா, அம்மா, அண்ணன்..

கணேஷ் (ஒளிப்பதிவாளர்)எனும் சிம்புவின் நண்பர் ..

சிம்புவுக்கு வேலைத்தரும் இயக்குனராக கே.எஸ்.ரவிக்குமார்..

இவ்வளவுதான் இந்த படத்தின் கதாப்பாத்திரங்கள். இவர்களில் சிம்பு, திரிஷா, நண்பர் என மூன்று கதாபாத்திரங்களை முக்கியமாகக் கொண்டு இக்கதை நகருகிறது. நண்பர் கதாபாத்திரமும் மிக நன்றாக கையாளப்பட்டிருக்கிறது, மற்ற படமாகிருந்தால் நண்பரின் கதாப்பாத்திரத்திற்கு பிரபல
நகைச்சுவை நடிகர் யாரையாவது போட்டிருப்பார்கள், ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிமுக நடிகரைப் பயன்படுத்திருக்கிறார். அந்த நடிகரும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். இதுவும் கூட படத்தின் இயல்புத் தன்மையை அதிகமாக்கியிருக்கிறது.

இயக்குனர் எந்த காட்சியையும் கற்பனையில் மட்டும் உருவாக்கியிருக்க முடியாது, எல்லா காட்சிகளின் சாரமும் இயக்குனரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் உண்டு. அல்லது தவறவிட்ட கணத்தை, வாழ்க்கையை பின்நாளில் யோசித்த போது இப்படிப் பேசி இருக்கலாமோ, நடந்திருக்கலாமோ என்ற அவரின் தவிப்பை பூர்த்தி செய்யக்கூடிய, வாழ்க்கையின் நிறைவை நோக்கி நகரக்கூடிய பார்வையாகத்தான் இருக்கிறது.

படமாக்கிய விதத்தையும் குறிப்பிடவேண்டும். வழக்கமான முறையில் "shot division" செய்யாமல், நீளமான, மிக நீளமான shots ஆக காட்சிப்படுத்திருக்கிறார். அதை அவர்கள் "Compose" செய்தவிதமும், "Movements"-உம், ஒளியமைப்பும் இந்த படத்தைப் பார்வையாளனின் கண்முன் நிகழ்வதாக எண்ணவைக்கிறது.

பொதுவாக எல்லாத் துறைகளிலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பிறகு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பம், படைப்பு உருவாகும் என்பார்கள். அப்படி சினிமாவிலும் உண்டு. முந்தைய காலங்களில் அதற்கான உதாரணங்கள் உண்டு. அவ்வரிசையில் இப்படம் ஒரு
புதுவகையான நிகழ்தளத்தில், யதார்த்தமான, ரசனையான, உண்மையான படைப்பாக்கத்தில் அடுத்த தலைமுறைப் படைப்பாக இருக்கிறது.

வீட்டுக்கு வந்த பின்பும், எண்ணி நெகிழ்ந்து போகக்கூடிய பல காட்சிகள் இப்படத்தில் உண்டு. இப்படி ஒரு படத்தைத் தந்ததிற்கு கவுதம் வாசுதேவ் மேனனுக்கு பாராட்டு சொல்வதோடு, நன்றியையும் சொல்லிக்கொள்கிறேன்.



கருத்துகள்

  1. விஜய் சார்,

    ரொம்பவும் இயல்பான மென்மையான விமர்சனம்.

    மனோ

    பதிலளிநீக்கு
  2. இந்த படத்தின் கதை என்பது கௌதமுக்கு நடந்து விஷயம் கொஞ்சம் மாற்றி எடுத்து இருக்கலாம் அல்லமு நிஜமாலுமே அவர் காதலி அவரை விட்டு அமேரிக்காவில் செட்டில் ஆகி இருக்கலாம்.. அதனால்தான் எல்லா படத்திலும் மெரிக்கா வந்து விடுகின்றது என்று எழுதி இருந்தேன்...

    பண்ணை வீட்டில் சிம்பு திரிஷா கட்டி பிடிப்பு காட்சியில் அண்டர் எக்ஸ்போஸ் போல் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. ஒரு படம் திரையரங்கிற்கு வெளியிலும், வீட்டிலும், வீதியிலும் பேசப்படும்போதே அதன் இயக்குனர் ரசிகதளத்தில் வெற்றி பெற்று விடுகிறார். அந்த வகையில் கெளதம் மேனன் - விண்ணைத் தாண்டி வருவாயா-யில் பெற்றிருப்பது பெரும் வெற்றி.

    ஆனால் தொழில்நுட்பம் - இன்னபிற விஷயங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு பல நாட்களாக கதையின் நம்பகத்தன்மை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறது மனம். இந்தத்தலைமுறை காதல் பற்றி இவ்வளவு குழப்பங்களோடு இருக்கிறதா என்ற கேள்வி கேட்கிறது அது. அறிவார்ந்த காதல் விளையாட்டு வண்ண காகிதம் சுற்றப்பட்ட சாக்லேட்டாக சராசரி ரசிகனின் முன் நீட்டப் பட்டதா என்ற கேள்விக்கு அந்த மனதிடம் பதிலில்லை. காதல் மலையின் இருட்பாறைகளில் இருந்து நுட்பமாக செதுக்கப்பட்ட காமச்சிற்பத்தின் பேரழகில் மயங்கிய மனங்களின் வெற்றியா இது என்பது இன்னொரு கேள்வி.

    ம்ம்ம்...கதையைப் பற்றி பேச, கேட்க நிறைய இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டி, இது அழகான படம்தான் நண்பரே!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...