முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'Kodak' என்னும் சகாப்தம் அதன் முடிவை நோக்கி..


ஜனவரி 19, 2012 அன்று கொடாக் (Kodak) நிறுவனம் ஒரு அதிர்ச்சியை உலகத்தாருக்குக் கொடுத்தது. அந்நிறுவனம் 950 மில்லியன் டாலர், வங்கிப் பாதுகாப்பு கேட்டு கொடுத்த (bankruptcy protection) நோட்டிஸ் தான் அந்த அதிர்ச்சி. அது கொடாக் நிறுவனத்திற்கு மட்டுமான துயரம் இல்லை. உலகத்தின் பெருவாரியான புகைப்படக்காரர்களின் துயரமும் கூட.

1880-இல் துவங்கப்பட்ட கொடாக் நிறுவனம், நூற்றாண்டு கடந்தும் பல புகைப்படக்காரர்களின் விருப்பத்திற்குரியதாக இருந்திருக்கிறது. சொல்லப்போனால் பல புகைப்படக்காரர்களை உருவாக்கியதே அதுதான் எனலாம். புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியதே கொடாக் தான். அது கண்டுபிடித்த படச்சுருள் தான் புகைப்படம் பிடித்தலை உலகத்தாரிடையே பரப்பியது, அதிகரித்தது.

முதல் படச்சுருள் , முதல் கேமரா, முதல் டிஜிட்டல் கேமரா என அது கண்டுபிடித்த பல 'முதல்'கள் உலகெங்கும் பிரபலம். புகைப்படம் பிடித்தலை எல்லாருக்குமானதாக மாற்றிக் காட்டியது அதன் பெரும் சாதனை .


ஒரு வகையில் எல்லாருடைய வாழ்க்கையிலும் கொடாக் சம்பந்தப்பட்டிருக்கிறது. சிறுவயதிலிருந்து நாம் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அவை கொடாக் படச்சுருளைப் பயன்படுத்தி (பெரும்பாலும்) எடுக்கப்பட்டவைகளாகத்தான் இருக்கும். புகைப்படம் என்பதை சாமானியனுக்கும் உரியதாக மாற்றிக் காட்டியது கொடாக் தான்.

'Eastman Kodak Company' என்னும் கொடாக் நிறுவனம் 1880-இல் 'ஜார்ஜ் ஈஸ்ட்மேன்' (George Eastman) என்பவரால் நிறுவப்பட்டது. வடஅமெரிக்காவின் நியுயார்க் நகரை தலைமை இடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டது. பல ஆயிரம் ஊழியர்களையும் பல கோடிப் பயனாளர்களையும் கொண்டது.

1885-இல் 'roll of Eastman’s photo plates'-ஐ கண்டுபிடித்ததிலிருந்து பல நிலைகளை கடந்து 1889-இல் மக்கள் பயன்பாட்டிற்கான படச்சுருளை அந்நிறுவனம் தயாரிக்கத் துவங்கியது. அப்படச்சுருள் தான் திரைப்படம் என்னும் கலை உருவாக காரணமாக இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


எடிசனும் (Thomas Edison) அவரின் 'Kinetoscope' என்னும் கருவியும், கொடாக்கின் படச்சுருளும் சேர்ந்து திரைப்படம் என்னும் கலையை/துறையை உருவாக்கியது என்பது தனிக் கதை .

'kodak' நிறுவனத்தின் முதல் கேமரா 1888-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 'நீங்கள் பொத்தானை அழுத்துங்கள், மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என்ற விளம்பர வாசகத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இக்கேமராவில் 'paper film' படச்சுருள் இணைக்கப்பட்டிருந்தது. அதைப்பயன்படுத்தி நூறு புகைப்படங்களை எடுக்கலாம். புகைப்படம் எடுத்தவுடன் கேமராவையே கொடாக் நிறுவனத்திற்கு அனுப்ப வேண்டும். அங்கே அவர்கள் கேமராவில் இருக்கும் படச்சுருளை எடுத்து டெவலப் செய்தும், மாற்று படச்சுளை கேமராவில் இணைத்தும் கொடுப்பார்கள். இக்கேமராவே 'amateur photography'-இன் துவக்கமாக இருந்தது.


1897- 'box' கொடாக் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. மடித்து வைக்க கூடிய சிறிய கேமரா அது. 1900-இல் 'Brownie' என்னும் விலை குறைந்த கேமராவை கொடாக் அறிமுகப்படுத்தியது. இக்கேமராவின் விலை ஒரு டாலருக்கும் குறைவாக இருந்ததும் பயன்படுத்த மிக எளிமையாக இருந்ததும், இக்கேமராவை பிரபலமாக்கியது, பெரும் வெற்றியும் அடைந்தது.

 'Brownie'



அங்கே துவங்கிய கொடாக்கின் வெற்றிப் பயணம், உலகின் மூலை முடுக்கு எல்லாம் போய்ச் சேர்ந்தது. உலகம் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளியது. கொடாக் பெரும் பணம் பார்த்தது.

1935-இல் 'Kodachrome' என்னும் வண்ணப் படச்சுருளை கொடாக் நிறுவனம் கண்டுபிடித்து புழக்கத்திற்கு கொண்டுவந்தது. வண்ணமயமான உலகத்தை சிறைபிடிக்கும் ஒரு தொழில்நுட்பத்தை கண்டு உலகம் அதிசயத்தது. கொடாக் எல்லோருடைய இதயங்களிலும் இடம் பிடித்தது. இதுவும் பெரும் வெற்றியை அடையவே, அப்படச்சுருள் 8mm, 16mm, 35mm, 120, 116, 828 என எல்லா format-லும் அறிமுகப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து 74 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த 'கொடாக் குரோம்' படச்சுருள் 2009-இல் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.


'The Afghan Girl' என்னும் ஒரு ஆப்கானிய அகதிப் பெண்ணை 'National Geographic Magazine' -க்காக 'Steve McCurry' 1985-இல் படம் எடுத்தப்போது,  'Kodachrome' பெரும் புகழ் அடைந்தது. உலகப் புகழ் பெற்ற அப்புகைப்படம் Kodachrome படச்சுருளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டதுதான்.    

x-ray படச்சுருளில் துவங்கி CT, MRI ஸ்கேன் வரை கொடாக்கின் கைகள் நீண்டு இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிறிய 'microfilm' மற்றும் தீப்பெட்டி அளவே உள்ள சிறிய கேமராவை கண்டுபிடித்து படைகளுக்கு உதவியது
.

1960-இல் கொடாக் பெரும் நிறுவனமாக வளர்ந்து இருந்தது. 4 பில்லியன் டாலர் (இன்றைய மதிப்பில் 50 பில்லியன்) வருமானம் ஈட்டக் கூடிய நிறுவனமாக இருந்தது. ஒரு லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தார்கள். வட அமெரிக்காவின் விண்வெளி பரிசோதனைகளுக்கு இந்நிறுவனமே கேமராக்களை தயாரித்து கொடுத்தது. 'நீல் ஆம்ஸ்ட்ராங்' நிலவில் கால் வைத்த போது நிலவைப் படம் படிக்கப் பயன்பட்டது கொடாக் தயாரித்த கேமராதான்.

பூமியின் முதல் படம், விண்வெளியில் இருந்து - Lunar Orbiter program in 1966

நாம் நினைக்கக் கூடும் Samsung, Canon, Nikon, அல்லது Sony நிறுவனங்களில் ஒன்றுதான் டிஜிட்டல் கேமராவைக் கண்டுபிடித்து இருக்கும் என்று.. உண்மையில் டிஜிட்டல் கேமராவைக் கண்டுபிடித்தது கொடாக் நிறுவனம்தான்.

1975-இல் 'Steven Sasson' என்னும் கொடாக் நிறுவனத்தின் அறிவியலாளர் CCD(0.1 megapixels) தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார். 1991-இல் உலகின் முதல் digital SLR camera(1.3-megapixel CCD sensor)-ஐ கொடாக் அறிமுகப்படுத்தியது.

புதிய டிஜிட்டல் புகைப்படத்துறை பிறந்தது. கொடாக் துவங்கி வைத்த அத்துறை, அதன் பிறகு ஜப்பானின் கைகளில் விழுந்தது.  Canon, Sony, Fuji போன்ற பெரும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளால் கொடாக்கையும் உலகத்தையும் ஆக்கிரமித்தன. இந்நிறுவனங்களின் போட்டிகளிடையே கொடாக் தன் ஆளுமையைக் கொஞ்சம் கொஞ்சமாக அத்துறையில் இழந்தது. ஒருவகையில் தான் துவக்கி வைத்த தொழில்நுட்பத்தினாலேயே கொடாக் தன் முடிவை நோக்கி நகர வேண்டியதாயிற்று எனலாம்.  

முதல் டிஜிட்டல் கேமரா 

OLED display,  Bayer color filter array (RGGB Bayer filter) என பல தொழில்நுட்பங்களை கொடாக்தான் கண்டுபிடித்தது. RGGB Bayer filter-ஐப் பயன்படுத்திதான் இன்று இருக்கும் எல்லா டிஜிட்டல் கேமரா சென்சர்களும் படம் பிடிக்கின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொடாக் கண்டு பிடித்திருந்தாலும்,  70, 80, 90 -களில் அதன் கவனம் படச்சுருள் சார்ந்த துறையிலேயே இருந்தது. அதன் வியாபாரங்கள் யாவும் அதை சார்ந்தே அமைந்திருந்தது. டிஜிட்டல் துறை தன் வேர்களை ஆழமாகப் பரப்பிக்கொண்டிருந்ததை, ஏனோ கொடாக் கவனிக்க தவறியது. பிற்காலத்தில் விழிப்படைந்து சுதாரிக்க முயன்றபோது காலம் கடந்து விட்டிருந்தது. Sony, Canon போன்ற நிறுவனங்கள் வெகு தூரம் தங்கள் கரங்களைப் பரப்பிவிட்டிருந்தன.

கொடாக்கின் 'EasyShare' வகைக் கேமராக்கள் பெரும் வெற்றி பெற்றவை, ஆனால் அவை மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. காலம் கடந்து பல முயற்சிகளை செய்து பார்க்கிறது. Apple, BlackBerry போன்ற நிறுவனங்களுடன் இணைந்து சில தொழில்நுட்பங்களை முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவை கொடாக்கின் சரிவை தடுத்து நிறுத்த கூடியதாக இருக்க போவதில்லை என்றுதான் படுகிறது.


புகைப்படத்துறைதான் இப்படி என்றால், மறுபுறம் திரைத்துறையும் கொடாக்கின் கையை விட்டுப்போகத் துவங்கி விட்டது. இங்கேயும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் விரிவடையத் துவங்கி பல காலம் ஆகிவிட்டது. 90%  படங்கள் கொடாக் படச்சுருளை பயன்படுத்திதான் எடுக்கப்பட்டு வந்தன. டிஜிட்டலின் வளர்ச்சி கொடாக்கிற்குத்தான் கேடாக முடிந்திருக்கிறது. திரைத்துறையில் அதன் ஒரே போட்டியாளர் 'Fuji' இழக்கப்போவது பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்நிலையில்தான் கடந்த ஜனவரி மாதம் மஞ்சள் நோட்டிஸ் கணக்காக அறிக்கை கொடுத்து, அதிர்ச்சி கொடுத்திருக்கிறது கொடாக். இப்போதைக்கு பதினெட்டு மாதங்களுக்கு கடனாக 'சிட்டி குரூப்' பணம் கொடுத்திருப்பதால் கொடாக்கின் தலை தப்பி இருக்கிறது.

பிப்ரவரியில் கொடாக் அறிவித்திருக்கிறது, இந்த ஆண்டின் துவக்க பகுதிக்குள்ளாக தன் டிஜிட்டல் கேமரா, சிறிய வடிவ விடியோ கேமரா மற்றும் டிஜிட்டல் பிரேம் தயாரிப்புகளைத் நிறுத்தப்போவதாக. லட்சக்கணக்காக இருந்த அதன் தொழிலாளர் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது சில ஆயிரங்களாக சுருங்கி இருக்கிறது. பெரும் மதிப்புகளைக் கொண்டிருந்த அதன் பங்குகள் ஒரு டாலருக்கும் குறைவாய் சரிந்து இருக்கிறது.


இவ்வுலகில் பல கண்டுபிடிப்புகள் தோன்றி இருக்கின்றன. நல்லதும் கெட்டதுமாக பல மாற்றங்களை அவை ஏற்படுத்தி இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விட கொடாக்கின் சாதனைகள் ஈடு இணையற்றது. இப்பூவுலகம் இருக்கும் வரை 'Kodak'-ஐ யாரும் மறந்து விட முடியாது. உலகம் தன்னை நினைவில் கொள்ளவும் கொடாக்கின் உதவியைத்தான்  நாடவேண்டியதாக இருக்கும்..!

பல சாதனைகளைப் புரிந்த கொடாக்கின் இன்றைய நிலை.. ஒரு புகைப்படக்காரனாக என்னை மிகவும் பாதிக்கிறது. மனதோடு நெருங்கிய நண்பனின் துயர முடிவைப்போல் மனமெங்கும், சொல்லொண்ணா துயரம் பரவுகிறது. கடந்து வந்த பாதைகளில் உடனிருந்த பலவற்றை நாம் இழந்திருக்கிறோம், அவற்றில் ஒன்றாக கொடாக்கும் மாறிப்போவதை கண்டு கையாலாகாதவனாக நிற்பதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை எனக்கு.

கருத்துகள்

  1. எத்தனை புது தகவல்கள்..கோடாக் என்றால் கேமாரா கம்பனி என்று மட்டும்தான் எனக்கு தெரியும்..அதை பற்றி பல விடயங்கள் தங்கள் பதிவில்.மனமார்ந்த நன்றிகள்.

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    பதிலளிநீக்கு
  2. இறுதி வரிகள் மனதைப் பிசைந்தன. ஒரு நெருங்கிய நண்பனை இழந்தது போன்ற ஃபீலிங்கை ஒரு நிறுவனத்தின் சரிவிலும் உணர்ந்த உங்கள் உணர்வுகளை சரியாக கடத்தியிருக்கிறீர்கள். அந்த உணர்வு படிப்பவர்களுக்கும் வருவதற்கான முன்தயாரிப்பாக கொடாக்கின் வரலாறு சுருக்கமாக, தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. FYI kodak india will continue it's operation

    பதிலளிநீக்கு
  4. பிலிம்ரோல் பயன்படுத்திய காலங்களில் தரம் என்றாலே கொடாக்தான்...தரத்தை கவனித்தவர்கள் வியாபாரத்தை தவறவிட்டுவிட்டார்கள்.ஆனாலும்,நீங்கள் சொன்னது போல் கொடாக் என்றென்றும் மறக்க முடியாத ஒரு நிறுவனம்தான்...மிக நெகிழ்ச்சியான பதிவு.

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அதிகமான தகவல்கள் தந்திருக்கிறீர்கள் நினைத்து பாராத முடிவு ஏற்படுகிறது

    பதிலளிநீக்கு
  6. Dear sir, ungaludiya intha katturai migavum arumai. naan oru photo
    album desighner. ungalai pondra arumaiyana thelivana olipathivu patriya tagavalgal yarum tamilil thanthathu illai.UNGALUKKU NENJAM NEKILNDHA NANDRI.
    CHANDRASEKAR, PALANI

    பதிலளிநீக்கு
  7. உள்ளடக்கத்தில் உங்கள் தேடலும் அறிவும் தெரிகிறது, நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  8. nalla oru pathivu..... migavum payanulathga irundhathu nadri....

    பதிலளிநீக்கு


  9. --
    நல்ல ஒரு பதிவு நிறைய தகவல்கள் கோடக் நிறுவனம் பற்றி மிகவும் பயனுல்தாக இருந்தது நன்றி

    பதிலளிநீக்கு
  10. அரசு ஊழியர்களுக்கு பதவி முடிந்தபின், பென்ஷன் வழங்குவதை போல் இந்நிறுவனத்திற்க்கும், மெமரிகார்ட் வருவாயில் சதவீதம் வழங்கலாமே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

Photography Assignments | Light and Shade | Photo Reviews

என்னுடைய Vijay Armstrong Facebook Page - இல் புகைப்படம் , ஒளிப்பதிவுத்துறையில் ஆர்வம் கொண்ட நண்பர்களை , Photography Assignments- ஆக , Light and Shade புகைப்படங்களை எடுத்து அனுப்புங்கள் , அதனைப் பற்றிய என்னுடைய கருத்தை (Review) பகிர்ந்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . ஆம் நண்பர்களே … இக்கலையை கற்றுக்கொள்ள இது ஒருவகை வழி . தொடர்ந்து இதனை செய்திடுவோம் . On my Vijay Armstrong Facebook Page, I asked my friends who are interested in photography and Cinematography to send me photography assignments, on ‘Light and Shade’ and I will share my opinion about it. Yes guys This is one of the way to learn this art. We will continue to do this. #vijayarmstrong #imageworkshops #cinema #PhotographyAssignments #LightandShade #Photo Reviews ✅Don't Forget to LIKE 👍 SUBSCRIBE 🔔️️️ SHARE ↗️ Related Topics: Making | Ad FIlm | Shooting Spot || Behind The Scene - VVS Oil https://youtu.be/6GJ3n6v_Dic Lumix S1H | Depth Of Field Test https://youtu.be/Nq2QZenHSnQ A Rainy Evening

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன