முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தங்க மீன்கள் - பாசவலைக்குள்..


வாத்தியாரின் பிள்ளை மக்கு என்பதாய், படிப்பில் நாட்டமில்லாது வளர்ந்த தகப்பனுக்கும், அவனைப் போலவே படிப்பில் விருப்பமில்லா மகளுக்குமிடையே நிகழும் பாசக் கதையிது. நம் கல்வி முறை, பிள்ளைகளின் குழந்தைப் பிராயத்தை எப்படி நாசமாக்குகின்றன என்பதை பேசும் கதை(?!) என்பதாக, அல்லது சராசரி I.Q-விற்கும் குறைவான அறிவு கொண்ட தகப்பன், மகளுக்குமிடையேயான கதை என்பதாக எடுத்துக் கொள்ளவும் சாத்தியம் கொண்ட கதை. தகப்பன் மகள் இருவருமே பிரதான கதாப்பாத்திரங்கள். அவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதைக்குத் தகுந்த துணைப்பாத்திரங்கள். தாத்தா, அப்பத்தா, அம்மா, அத்தை, தந்தையின் நண்பன், தோழி, வாத்திச்சி, பள்ளி மேலாளர் என நேர்த்தியான பாத்திரப்படைப்புகள். அன்பை, பாசத்தை நெகழ்வாய் பேசும் ஒரு திரைப்படத்தை இயக்குனர் ராம் கொடுத்திருக்கிறார்.

கையாலாகாதவனாக மதிப்பிடப்படும் ஒரு தகப்பனின் பாசப்போராட்டத்தை, அவனது இயலாமையை, அப்படியான தகப்பன்களின் சார்பாக ஒரு கதையை இயக்குனர் ராம் எடுத்துக்கொண்டிருக்கிறார். பெரும்பான்மையோர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கை சம்பவங்களின் சாரத்தை நினைவூட்டலாம். பலருக்கு அப்படி இல்லாமலும் போகலாம். அவர்கள் இந்தப்படத்தை முற்றிலுமாக மறுதலிக்கவும் கூடும். தேர்ந்த படைப்பாளிக்கே உரிய பல காட்சிகளை இப்படத்தில் ராம் உருவாக்கியிருக்கிறார். அதே நேரம், பொருத்தமில்லா காட்சிகள் சில இருப்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எது எப்படி ஆகினும், ஒரு நெகழ்ச்சியான கதையாக இது இருப்பதை மறுக்க முடியாது.

நேற்று இரவுக் காட்சி, இந்தப் படத்தைப் பார்த்தேன். நெகிழ்ச்சியும், வருத்தமும், விவாதமும் உருவான ஒரு குழப்பமான மனநிலையிலேயே வெளியே வந்தேன். படத்தின் மேன்மையும் குறையும் ஒரு சேர வந்து போயின. ஆயினும் இது மற்றுமொரு படமாக, ஒதுக்கி தள்ளி விட்டு போய் விடக்கூடிய படமில்லை என்பதை அறிந்தே இருந்தேன்.

பொறுப்பும், நேர்மையும், தகுதியும் கொண்ட ஒரு கலைஞனின் படைப்பு இது என்பதை தெரிந்தே வைத்திருக்கிறேன். இயக்குனர் ராமின் இரண்டு படைப்புகளிலும் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. அவை கதையின் போக்கிலும் படைப்பாக்கத்திலுமிருந்த குறைகளின் அடிப்படையில் உருவானதே தவிர, ராம் என்னும் அற்புதமான படைப்பாளியின் மீதானதில்லை அது.

குழப்பத்தோடு உறங்கபோனவனின் கனவு முழுவதும் ‘செல்லமாவும் கல்யாணியும்’நிரம்பி வழிந்தார்கள். முதலில் இப்படம் குறித்து எதுவும் எழுத வேண்டாமென்று நினைத்திருந்தேன். காலையில் எழுந்த போது, அம்முடிவு மாறி இருந்தது. காரணம், ஒரு சிறந்த படமென்பது திரையரங்குக்கு வெளியேயும் நம்மை ஆக்கிரமித்திருக்க வேண்டும், சிந்தனைத் தொடர்ச்சி ஒன்றை அது உருவாக்க வேண்டும் என்பார்கள். அது ‘தங்கமீன்களால்’ சாத்தியமாயிற்று.

ஒரு ஓவியன், தான் தீட்டி முடிந்த ஓவியத்தை சற்றுத் தள்ளி வைத்து பார்த்து, மதிப்பிட்டு, திருத்தம் செய்வதைப்போல.. இயக்குனர் ராம் அவர்கள் தன் படைப்பைப் பார்க்க வேண்டும். சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறேன். இப்படி நான் சொல்வதை சரியானவிதத்தில் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி அவர் செய்தால்.. தகுதியான படைப்புகளை, அதன் வணிக வெற்றியோடு ராம் அவர்கள் கொடுக்க முடியும் என்று நினைக்கிறேன். இயக்குனர் ராம் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

மக்களின் நலன் காக்க தாதாவாகும் (தாத்தா இல்லை) நாயகனின் கதையையும், பொறுக்கிகளிடமிருந்து தேசத்தைக் காக்க பொறுக்கியாய் மாறும் காவல் அதிகாரியின் கதையையும், காதலை வளர்க்கும் நாயக, நாயகியரின் கதையையும் பொறுப்புடன் பார்த்து மகிழும் நாம்.. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான அன்பைப் பேசும் கதையையும் ஒருமுறை பார்த்து வைக்கலாம், தப்பொன்றுமில்லை.

(ஒரு வித எள்ளல் தன்மையிலேயே மேலே இருக்கும் கடைசிப்பத்தியை நான் எழுதினாலும், உண்மையில்.. தவற விடக்கூடாத படமிது. இப்படியான படங்களை ஆதரித்தால்தான் சிறந்த படங்கள் வரும் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் இப்படியான படங்களை பார்க்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மாற்றுக் கருத்தையும், விவாதத்தையும் பிறகு வைத்துக்கொள்ளலாம். முதலில் ஒரு முறை படத்தைப் பார்த்துவிடுங்கள்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' - Film to Digital

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி

இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது.  முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம்.  கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பால