உலகில் மொத்தம் 195 நாடுகள் இருக்கிறது. அதில் 190 நாடுகளில், 17 மொழிகளில் ‘ஜெகமே தந்திரம்’ வெளியாகியிருக்கிறது. அதாவது உலக மக்கள் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்கிறது. அல்லது கொண்டு போய் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு தமிழ் படம் இத்தனை தூரம் பயணிப்பது மகிழ்ச்சிதான்.
… என்றாலும், வேறொரு சந்தேகம் வருகிறதே… அப்படி உலகம் முழுவதும் கொண்டுபோவதற்கு அப்படத்தில் என்ன இருக்கிறது?
- தனுஷ் எனும் பெரிய நடிகர், அவர் இன்று ஹாலிவுட் வரை சென்றிருப்பதனால் உண்டான மார்கெட்.
- கார்த்திக் சுப்புராஜ் எனும் கமெர்சியல் பட இயக்குநர்.
- உலகம் முழுவதும் ரசிக்க ஏதுவான ஒரு கேக்ஸ்டர் கதை.
- திரையரங்கு முடக்கம், OTT இன் வளர்ச்சி
அவ்வளவுதானா? இப்படம் இத்தனை நாடுகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதற்கு இவை மட்டுமே போதுமான காரணங்களாக இருக்க முடியுமா?
இல்லை என்றுதான், எனக்கு தோன்றுகிறது. இக்கதையும், அதில் சொல்லப்பட்ட அரசியலும் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது, அப்படத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒருவகையில் அது ‘விடுதலைப்புலிகளை’ குறிவைக்கிறது. அவர்கள் மீது சேறு வாரி இறைத்திருக்கிறது. உலகம் முழுவதும், புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக, அவர்கள் மீதான தடையை நீக்ககோரியும், ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் போராடிகொண்டிருக்கும் இச்சூழலில், இப்படம் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் பின்னடைவை, அவப்பெயரை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.
நாட்டின் விடுதலைக்கான போராளிகள் என்பதை மறைத்து, தீவிரவாதிகள், போர்வெறியர்கள் என்று பேசி வருவதைப்போல, கேங்ஸ்டர்களாகவும், ஆயுதகடத்தல்காரர்களாகவும், குடியேறிய நாடுகளில் சட்டத்திற்குபுறம்பாகவும் நடந்துக்கொண்டார்கள் என இப்படம் ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது இல்லையா?
அகதிகள் மீதான கரிசனம் என்ற போர்வையில், இது ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் மீதான தாக்குதலாகவும் எடுத்துக்கொள்ள இடமிருக்கா இல்லையா?
இப்படிப்பார்த்தால்… இப்படம் ஏன் 190 நாடுகளில், 17 மொழிகளில் வெளியிடப்பட்டது என்பதற்கு காரணம் புரியத்துவங்குகிறது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களுக்காக மட்டுமில்லாமல், அந்தந்த நாட்டு மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதைவிட சிறந்த, பிறமொழிப்படங்கள் எல்லாம், இரண்டு மூன்று மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டு, அதே நெட்பிளிக்ஸில் இருக்கிறது என்கிறபோது, இப்படம் மட்டும் ஏன் இத்தனை மொழிகளில் வெளியிடப்படுகிறது?
திட்டமிட்ட பரப்புரையா இது? அதில் கார்த்திக்கும், தனுஷும் தெரிந்தே உடன்பட்டார்களா? அல்லது தெரியாமலா?
ஏன் கேட்கிறேன் என்றால்… ஈழத்துக்கு ஆதரவாகவோ, புலிகளுக்கு ஆதரவாகவோ படமெடுத்தால், அது வெளிவருமா? அனுமதிப்பார்களா? மாட்டார்கள் தானே… எனில் எதிராக மட்டும் தொடர்ந்து படைப்புகள் வெளியாவது எப்படி என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?.
கார்த்திக்கையும்… ஜெகமே தந்திரத்தையும் நாம் மறுவாசிப்பு செய்ய வேண்டும் போல…!
கருத்துகள்
கருத்துரையிடுக