ஒளிப்பதிவு குறித்து, இங்கே பலருக்கும் குழப்பம் இருக்கிறது. எது சிறந்த ஒளிப்பதிவு? அதனை எப்படி பார்ப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடுவது?
பொதுவாக நாம் ஒளிப்பதிவை இப்படிதான் மதிப்பிடுகிறோம் …
‘பளிச்சின்னு, கலர்ஃபுல்லா இருந்தது’
யோசித்துப்பாருங்கள்… எத்தனை தடவை இந்த வாக்கியத்தை கேட்டிருப்போம், படித்திருப்போம், சொல்லியிருப்போம்…!?
உண்மையில், ஒளிப்பதிவு என்பது, பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருப்பது தான் சிறந்ததா? வண்ணமும், அழகும்தான் அளவுகோலா?
இல்லை…
ஒளிப்பதிவு என்று இல்லை… எல்லா கலைக்கும் அழகுணர்ச்சி என்பது அவசியம். அழகியல் என்பது, கலையின் பாகம்தான். ஆனால் ‘அழகு’ மட்டுமே கலையாகாது.
எனில், எது சிறந்த ஒளிப்பதிவு? யார் சிறந்த ஒளிப்பதிவாளர்?
ஒளிப்பதிவு என்பது….
- ஒரு காட்சியை பார்வையாளனுக்கு சரியாக கடத்த வேண்டும்.
- முறையான கேமரா கோணம், கேமரா நகர்வு, ஒளியமைப்பு இருத்தல் வேண்டும்.
- தேவையான தகவல்களை(மட்டும்) பார்வையாளனுக்கு கடத்துதல்… தேவையில்லாத கவனச்சிதறலை தவிர்த்தல் வேண்டும். Composition, Framing போன்றவற்றில் மேதமை வேண்டும்.
- காட்சியின் நம்பத்தன்மையை அதிகரிக்கும்வகையில் ஒளியமைப்பு இருத்தல் வேண்டும். கதை நடக்கும் சூழலில், அந்நேரத்தில் ஒளி எப்படி இருக்குமோ அப்படி இருத்தல் அவசியம். கூடவே அவ்வொளிக்கான மூலத்தை (Source of Light) நிறுவுதல் அவசியம். அப்போதுதான் அக்காட்சி பார்வையாளனுக்குள் நம்பகத்தன்மையை கொடுக்கும்.
- ஒளியை முறையாக பயன்படுத்துவது. 2D ஃப்ரேமில், 3D தன்மையை கொண்டுவர… பல்வேறு நுட்பங்கள் இருக்கிறது. Half Light, Back Light, High Light, Shadow, Contrast என பலவற்றை முறையாக அணுகி ஒளி அமைக்க வேண்டும்.
- வண்ணங்களை நுட்பமாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- கூடவே… அழகுணர்ச்சியும் வேண்டும்.
அதாவது… ஒளிப்பதிவு என்பது ‘தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கலை படைத்தல்’ ஆகும்.
கலை என்பது என்ன? மனித மனங்களோடு உறவாடுவது… உரையாடுவது.
ஒளிப்பதிவும் அப்படித்தான். மனித மனங்களோடு உறவாட வேண்டும். காட்சியின் உணர்வை, உயிர்ப்போடும், நம்பகதன்மையோடும் பார்வையாளனுக்கு கடத்த வேண்டும். அழகும், பளிச்சென்ற வண்ணமும்… ஐஸ்கிரிமுக்கு மேலே தூவப்படும் ‘டாப்பின்ஸ்’ போலத்தான். கூடுதல் சுவை.
அழகு மட்டும் மிகுந்தால்… ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்’ கதைதான்.
பளிச்சென்று கலர்ஃபுல்லாக இருக்கலாம். பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனா சிறந்த ஒளிப்பதிவாக முடியாது.
எனில், ஒரு சிறந்த ஒளிப்பதிவாளர் யார்?
தன் படைப்பில், ‘தான்’ துருத்திக்கொண்டு தெரியாதவரே… சிறந்தவர்.
அப்படி என்றால்?
ஒரு ஒளிப்பதிவாளர், தான் கற்று வைத்த வித்தைகளை, தன்னுடைய எல்லா படைப்புகளிலும் வெளிப்படுத்திக்கொண்டிருக்க கூடாது. ஒரே வகையான ஒளிப்பதிவை எல்லா கதைகளுக்கு பொறுத்தக்கூடாது.
ஒரு படத்தை பார்த்தால் போதும், இது இன்னாருடைய ஒளிப்பதிவு என்று சொல்லிவிடக்கூடாது. அப்படி இருந்தால், அநேகமாக அது தவறான ஒளிப்பதிவாகக்கூட இருக்கலாம்.
கதையும், கதை நகரும்விதமும் தான் ஒளிப்பதிவு பாணியை நிர்ணயிக்க வேண்டுமே தவிர… ஒளிப்பதிவாளரின் ‘ஸ்டைல்’ அல்ல.
ஒருதிரைப்படத்தை பார்க்கும் போது, முந்திரிக்கொட்டையாக துருத்திக்கொண்டிராத ஒளிப்பதிவாளரே… கவனிக்கப்பட வேண்டியவர்.
கதையை, அதன் உணர்வை, நீங்கள் எவ்வித பிராயத்தனமும் படாமல், உங்களுக்குள் அனுப்பி வைப்பவரே சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதை உணர்க.
கருத்துகள்
கருத்துரையிடுக