முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இது பகலும் அல்ல இரவும் அல்ல....

நாம் வாழும் உலகம் அழகானது என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.  இயற்கை, தன்னை உருவாக்கிக்கொண்ட போது தன்னை ஒரு அழகு தேவதையாகத்தான் படைத்துக்கொண்டிருக்கும் என நினைக்கிறேன். நாம்தான் அதைப்பற்றிய எந்த அபிப்பிராயமும் இல்லாமல் அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். 


’எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்..’ என்பது போல, எத்தனைக்கோடி அழகு வைத்தாய் என்று சொல்லலாம். நம்மைச் சுற்றி இருக்கும் அழகை நாம் பார்க்கத் துவங்கினால் அதன் எல்லை விரிந்துகொண்டே போகிறது. அப்படி நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தின் அழகைப் பார்க்கும் முயற்சியின் வெளிப்பாடாகவே இந்த பதிவுகள். முந்தைய பதிவான 'மாலை வெயில் சிதறிக்கிடந்தது' அப்படி ஒரு முயற்சியே..  



எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது என்பார்களே.. அதுதான்..


ஒரு புகைப்படக்காரனாக, ஒளிப்பதிவாளனாக நான் பார்ப்பவை அனைத்தும் ஒளிச்சார்ந்தே இருக்கிறது. எதுவும் பிம்பம் சார்ந்தே மனதில் பதிகிறது. அப்படி நம் பகல் வெளிகளிலும் இரவுகளிலும் பரவிக்கிடக்கும் ஒளிகளை பதிவுசெய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதன் பயிற்சியாகவே இந்த முயற்சிகள். நம்முடைய திரைப்படங்களில் பகல், இரவு என்றுதான் பதிவுசெய்யப்படுகிறது. எழுதப்படும் போதே அப்படித்தான் குறிக்கிறார்கள். ஆனால் நம்முடைய பகல் என்பது எத்தனை மாறுபட்ட ஒளிகளைக் கொண்டிருக்கிறது. சூரியன் உதிப்பதற்கு முன் துவங்கி மறையும் வரை எத்தனை விதமான பகல்கள் நம்மிடையே இருக்கிறது... 
சில படங்களில் சூரிய உதயத்தையும், மறைவையும் பதிவு செய்திருக்கிறார்கள். அதுவும் வானத்தைதான். அந்த நேர பூமியை அல்ல. பிரபல ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் 'மூன்றாம் பிறை' படத்தில் 'பொன்மேனி உருகுதே' பாடல் முழுக்க முழுக்க அந்திப்பொழுதில் எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு அவர் பல நாட்கள் எடுத்துக்கொண்டார் என அறியமுடிகிறது. 


மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராம் அவர்கள் ஒருமுறை சொன்னார். "ஒவ்வொரு நொடியும் ஒளி மாறிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இப்போது பார்ப்பது போன நொடியில் பார்த்த அதே ஒளியை அல்ல" என்று. உண்மைதான். அந்த வார்த்தை முழுக்க உண்மைதான். 


நான் ஒளிப்பதிவாளனாக பணிபுரிந்த 'புகைப்படம்' மற்றும் 'மாத்தியோசி' படங்களில் அப்படி ஒளிகளைப் பதிவு செய்ய முயற்சி செய்துள்ளேன். 'புகைப்படத்தில்' கொடைக்கானலின் மாலை நேரங்களை எந்தவித செயற்கை ஒளிகளையும் பயன்படுத்தாமல் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். 
'ஒரு குடையில் பயணம்' மற்றும் 'வான் நிலவுதான்' பாடலிலும் அத்தகைய காட்சிகள் வருவதை நீங்கள் பார்க்கலாம். 


'மாத்தியோசியில்' சென்னையின் இரவை எந்தவித செயற்கையான ஒளியமைப்புகளும் இல்லாமல் பதிவு செய்ய முயன்றிருக்கிறேன். அதை நீங்கள் 'தொம்தொம் தொம்தொம்' என்று தொடங்கும் படலிலும் அதைத் தொடர்ந்து வரும் துரத்தல் காட்சியிலும் பார்க்கலாம். அந்தக் காட்சிகள் தி-நகரில் மேம்பாலத்தில் எடுத்தது. எந்த விளக்கையும் பயன்படுத்தவில்லை. அப்படியே அங்கே அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்கின் ஒளியில் எடுக்கப்பட்டது. 'Negative Developing' போது '2 stop - Push Processing' செய்யப்பட்டது.  


மாலைநேரங்களில் பகல் முடிந்து இரவு வருவதற்கு முன்பாக ஒரு ஒளி இருக்குமே அந்த ஒளியை 'Twilight' என்கிறோம். தமிழில் அந்திப்பொழுது என அழைக்கலாம். அது மிக மென்மையான ஒளி. நீலம் அதிகமாக இருக்கும். நாம் பெரும்பாலும் அந்த ஒளியை பார்க்கிறோம். அதை ஒளிப்பதிவில், புகைப்படத்தில் கொண்டுவர பெரும்பாலும் எல்லா ஒளிப்பதிவாளர்களும் முயற்சிப்போம். ஆனால் அந்த ஒளி ஐந்து நிமிடம் கூட இருக்காது, அதற்குள் இருட்டிவிடும். அதனால் அதைப் பதிவுசெய்யவேண்டும் என்றால் தயாராக இருந்து அந்த ஐந்து நிமிடத்திற்குள் படம் எடுத்துவிட வேண்டும்.  


எனக்கு 'Twilight'-இல் படமெடுப்பது ரொம்ப பிடிக்கும். அப்படி சமீபத்தில் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். அப்போது Twilight-இல் நான் எடுத்த சில படங்கள் இங்கே.  

























  

1
2
3
4
1+2+3+4=சொதப்பலான ஒரு பெனோரமிக் முயற்சி (டிரைப்பேட் இல்லை)
'Photoshop'-ஐப் பயன்படுத்தி சீரமைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் நீல நிறம் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. வண்ணமயமாக இருப்பதற்காக..


இது பகலும் அல்ல இரவும் அல்ல.!






கருத்துகள்

  1. Padangal Arumai,oli oviyangal theetti irukinga,oli oviyarnu sonna thappe illai!(thangar bachan sandaiku varuvaro?)

    template change seythathal thirattiyil ungal peyar varamal pathivu mattum therikirathu ena ninaikiren,peyarudan theriyumpadi seythu vidungal,appothudan easya kandukolla mudiyum.

    பதிலளிநீக்கு
  2. அட்டகாசம்.
    படங்கள் யாவுமே அருமை. அப்புறம், அந்த மாத்தியோசி படத்துல உங்க கைவன்னம்தானா? சூப்பர்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி King Viswa..
    நீங்க 'மாத்தியோசி' பார்த்திங்களா?

    பதிலளிநீக்கு
  4. Great Blog! :)

    Visit my blog and follow me >> http://artmusicblog.blogspot.com

    பதிலளிநீக்கு
  5. நீல வானம் - நல்லா மாத்தி ’யோசிச்சி’ருக்கீங்க!
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...