முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"

ஐரோப்பாக் கண்டத்தின் வட மேற்கில் 'அயர்லாந்துத் தீவு' அமைந்திருக்கிறது. இது அந்த கண்டத்தின் மூன்றாவது பெரிய தீவு. எழுநூறு ஆண்டுகளாக பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. அதன் சுதந்திரப்போராட்டம் 1798-லிருந்தே துவங்கி விட்டாலும். அதன் கடைசிக்கட்ட போராட்டம் என்பது 1916, ஈஸ்டர் நாளில் துவங்கப்பட்ட "Easter Rising" போராட்டத்திலிருந்து துவங்குகிறது. அது 'Irish Republican Brotherhood' என்ற இயக்கத்தினால் ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

இந்தப்போராட்டத்தில் 'மைக்கேல் காலின்ஸ்' மிக முக்கிய பங்காற்றினார். அதன் தோல்விக்குப் பிறகு 1917-இல் 'Sinn Féin' என்ற கட்சி தோற்றுவிக்கப்பட்டது. 'எமோன் தேவ் வலிரா' அதன் தலைவர். காலின்ஸ் 'கெரில்லா போர்' முறையைக் கொண்டு தன் போராட்டத்தை நடத்தத் துவங்கினார். இவரின் 'கெரில்லா போர்' முறைகள் பிற்காலத்தில் பல நாட்டு போராட்டங்களில் பின்பற்றப்பட்டன. சீனாவில் 'மாவோ', இஸ்ரேலில் 'இட்சாக் ஷமிர்' (Yitzhak Shamir) போன்றவர்களால் பின்பற்றப்பட்டது. மைக்கேல் காலின்ஸ் ஒரு சிறு குழுவைக்கொண்டே தன் போராட்டத்தை நடத்தினார். விருப்பப்பட்டு வந்த இளம் ஏழைத் தொழிலாளிகளைக் கொண்டது அவரின் இராணுவம்.

இந்தப்போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று 'இரத்த ஞாயிறு'(Bloody Sunday) என்று அழைக்கப்பட்ட அந்த நாள். பிரிட்டீஷ் உளவாளிகளாலேயே தங்களின் போராட்டம் சிதைக்கப்படுகிறது என கோபம் கொண்ட காலின்ஸ் அவர்களின் மீது போர்ப் பிரகடனம் செய்தார்.  12 பேர் கொண்ட தன் இளம் படையைக் கொண்டு (IRA) அவர்களைக் கொன்றார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை, பதினாங்கு பிரிட்டீஷ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு பழிவாங்க பிரிட்டீஷ் இராணுவம் 'Croke Park'  நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போது துப்பாக்கிச்சூடு நடத்தியது, இதில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என 14 பேர் கொல்லப்பட்டார்கள். சிறையில் இருந்த மூன்று போராட்டக்கைதிகளும் கொல்லப்பட்டார்கள். முப்பத்தியொரு நபர்களைப் பலி கொண்ட அந்த ஞாயிறை, சரித்திரம் 'இரத்த ஞாயிறு' என பதிவுச்செய்து வைத்திருக்கிறது. இது நடந்தது அயர்லாந்தின் தலைநகர் 'டப்லினில்' (Dublin)1920 நவம்பர் மாதம் 21 நாள்.

Dublin-1920
போராட்டம், பேச்சுவார்த்தை உடன்படிக்கை என நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் நடந்தது. 'மைக்கேல் காலின்ஸ்' என்ற சிறந்த தலைவனை அந்த தேசமே கொன்றது. 'Irish Free State' என அழைக்கப்பட்ட பகுதி 1922-இலிருந்து பிரிட்டீஸ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட அயர்லாந்து பாராளும் மன்றம் என்ற இரட்டை ஆட்சி முறையில் இருந்தது. 1937க்குப் பிறகு அயர்லாந்து என்ற சுதந்திர நாடாக உருவாகியது.



பிரித்தானிய ஆட்சிக்கு உட்பட்ட வட அயர்லாந்தில் 'Protestant' கிருத்துவர்கள் அதிகம். கத்தோலியர்கள் சிறுபான்மையினர்கள். இரு பிரிவனர்களிடையே அரசியல் உரிமை சார்ந்து முரண்பாடுகள் இருக்கிறது. 1960-70-களில் 'Northern Ireland Civil Rights Association' என்ற இயக்கம் சிறுபான்மையினர்களான 'கத்தோலிக்க கிருத்துவர்களின்' உரிமைக்காகப் போராடி வந்தது. இந்த இயக்கம் 1972 சனவரி 30இல் ஒரு 'பொது எதிர்ப்பு ஊர்வலத்தை' ஏற்பாடு செய்தது. இதில் பல்லாயிரக்கனக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த ஊர்வலத்தைத் தடுக்க இராணுவம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இதில் கலவரம் வெடிக்கும், அதை தடுக்க இந்த ஏற்பாடு என சொல்லப்பட்டது.


நேரம் ஆக ஆக மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கூட்டம் மெதுவாக குறிப்பிட்டப் பாதையில் முன்னேறியது. இராணுவம் தனக்குத்தேவையான சிறு சலசலப்புக்காகக் காத்திருந்தது. எதிர்பார்த்தபடி இளவட்டங்களின் கூச்சல், ஆர்பாட்டம் அதிரிகரித்தது. இதுதான் காரணம் என்று இராணுவம் செயலில் இறங்கியது. ஆர்பாட்டக்காரர்கள், ஆயுதங்கள் வைத்திருந்தார்கள், அது தங்களை நோக்கிப் பிரயோகிக்கப்பட்டது என்று காரணம் காட்டி 'இருபத்தியாறு ஊர்வலக்காரர்களை' இராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த 'படுகொலைகள்' நடந்ததும் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான். சரித்திரம் இந்த நாளையும் 'இரத்த ஞாயிறு' என்றுதான் குறித்து வைத்திருக்கிறது.


1972-ல் நடந்த இரண்டாவது 'இரத்த ஞாயிறு' நாளில் நடந்த சம்பவங்களை 'இரத்த ஞாயிறு' (Bloody Sunday) என்ற இந்தப் படம் நம் கண்முன்னே கொண்டுவருகிறது. இந்தப் படம் சம்பவம் நடந்த இடத்திலேயே படமாக்கப்பட்டது. ஏறக்குறைய எல்லா சம்பவங்களும் உண்மையில் நடந்ததைப்போலவே மறுஉருவாக்கம் செய்யப்பட்டு படமாக்கப்பட்டது. ஒரு பரபரப்பான கலவரத்துக்குள் மாட்டிக்கொண்ட உணர்வை இந்தப்படம் நமக்குத் தருகிறது.

'மைக்கேல் காலின்ஸின்' வாழ்க்கையை 'மைக்கேல் காலின்ஸ்' என்னும் படம் விவரிக்கிறது. வழி நடத்தும் தலைவன், அவன் முடிவுகளில் இருக்கும் உறுதி, தெளிவு, பிடிவாதம் என ஒரு தேர்ந்தத் தலைவனின் எல்லா குணாம்சங்களையும் இந்தப்படத்தின் மூலம் நாம் காணமுடிகிறது. 1920இல் நடந்த 'இரத்த ஞாயிறு' சம்பவங்கள் இந்த படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


ஆயுதப்போராட்டமோ அல்லது அரசியல் போராட்டமோ இரண்டையும், ஆளும் வர்க்கம் தடுக்கும் நசுக்கும் என்பதை இந்த இரண்டு 'அயர்லாந்து அரசியல்' படங்கள் நமக்குச் சொல்கின்றன.

'மைக்கேல் காலின்ஸ்' திரைப்படத்தில் 'மைக்கேல் காலின்ஸ்'-இன் மறைவுக்குப் பின்னர் அவரைப்பற்றி அவரின் நண்பர் 'ஜோ' குறிப்பிடும்போது இப்படிக் குறிப்பிடுகிறார், "சில மனிதர்கள் காலவோட்டத்தில் தேவைப்படுகிறார்கள், அவர்கள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியப்படுவதில்லை"


இப்படி காலவோட்டச் சக்கரத்தில் 'தனக்கானயிடத்தில்' சரியாகப் பொருந்தி, வாழ்க்கையை நகர்த்தி வைத்துவிட்டுப்போன பல மனிதர்கள், தலைவர்கள் உண்டு. அவர்கள் இல்லாமல் அந்தச் சக்கரம் நகர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

சில சமயம் வாழ்க்கை அப்படிப்பட்ட மனிதர்களைத் தேடிப்பிடிக்கிறது. சூழல் அதைத் தீர்மானிக்கிறது. சில சமயங்களில் மனிதர்கள், மாமனிதர்கள் அப்படிப்பட்ட சூழலை உருவாக்குகிறார்கள். அவர்கள் வாழ்க்கையைத் தேடிப்பிடிக்கிறார்கள். அது அவர்களுக்கானது மட்டுமல்ல. தன்னோடும் தனக்குப் பின்னால் வருபவர்களுக்குமானது அது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,