முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எரியும் தியாகம்


ஜூன் 11,1963 ஆம் ஆண்டு வியட்நாமின் தலைநகரான சாய்கான் நகரில் ‘Thich Quang Duc’ என்னும் இந்த புத்தத் துறவி தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டார். அப்போது தெற்கு, வடக்காக பிரிந்திருந்த வியட்நாமில், தெற்கு வியட்நாமை ஆண்ட ‘Diem’ (Ngo Dinh Diem) அரசாங்கம், புத்தமதத்தின் மீதும் புத்தத் துறவிகள் மீதும் நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிராக இதை அவர் செய்தார். இப்படத்தை எடுத்த ‘மால்கம் பௌரவுன்’ (malcolm Browne) இப்படத்திற்காக புலிட்சார் விருது பெற்றார்.

Ngo Dinh Diem அரசாங்கம்: 

1954 ஆம் ஆண்டு வியட்நாமை விட்டு பிரான்ஸ் வெளியேறிய பிறகு தெற்கு வியட்நாமின் முதல் சனாதிபதியாகப் பதவியேற்றவர் இந்த ‘Ngo Dinh Diem’. பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததனால், வட அமெரிக்காவின் உதவியைப் பெற்று தன்னை வியட்நாம் குடியரசின் முதல் சனாதிபதியாக நிலை நிறுத்திக்கொண்டவர். ஊழலும், சீர்கெட்ட ஆட்சி முறையையும் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய இவர், வியட்நாமின் பூர்வீக மதங்களையும், பரவலாக பரவி இருந்த புத்தமத்தையும் அழிக்க நினைத்தார். பல விதங்களில் மதத் துவேசத்தை வெளிப்படுத்தினார். புத்தத் துறவிகளின் மீது எண்ணிலடங்கா அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டன. இது மதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது. இப்போராட்டத்தின் போதுதான் அந்த புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார். பிறகு வட அமெரிக்கா தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. நவம்பர் 2, 1963-இல் ஒரு படைத்துறை தளபதியால் ‘Diem’ கொல்லப்பட்டார்.

புத்தத்துறவி ‘Thich Quang Duc’:

ஏழு வயதிலேயே ஆன்மீக வாழ்க்கைக்கு வந்த இவர், தன் இருபதாவது வயதில் ஒரு முழுமையான புத்தத் துறவியானார். மதபோதனைகளும் பாடங்களையும் நடத்திக்கொண்டிருந்தவர், புத்த மாடாலயங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்.

‘Diem’ ஆட்சிக்காலத்தில் புத்தபிட்சுக்களின் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்தும், புத்தமதத்தை காக்கும் பொருட்டும் தன்னை எரியூட்டிக்கொண்டார். தன்னை எரியூட்டிக்கொண்டதின் மூலம் உலகத்தாரின் கவனத்தைப் பெறமுயன்றார்.


ஜூன் 11, 1963-இல் சாய்கானின் முக்கிய வீதி ஒன்றுக்கு, இரண்டு சக துறவிகளோடு ஒரு காரில் வந்து இறங்கினார். நடுவீதிக்கு சென்று அமைதியாக தியான நிலையில் அமர்ந்துக் கொண்ட இவர் மீது அவரின் சக துறவி ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். பிறகு தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டார். நான்கு அடி உயரம் தீ கொழுந்துவிட்டு எரிந்த போதும் சத்தம் போடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது வீதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் இதை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

காவல்துறையினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் சுற்றி நின்ற புத்த பிட்சுகளை மீறி அவர்களால் செல்ல முடியவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி தரையில் பயபக்தியோடு மண்டியிட்டு, எரிந்துக்கொண்டிருந்த துறவியை தொழத் துவங்கினார். பெரும்பாலானோர் அதிர்ச்சியில் அமைதியாக இருக்க, சிலர் அலறவும், சிலர் பிராத்தனை செய்யவும் துவங்கினர்.


அங்கே குழுமி இருந்த புத்தத்துறவிகளும் அந்த வழியாகக் கடந்து சென்ற பொதுமக்களும் எரிந்து கொண்டிருந்த துறவியின் முன் மண்டியிட்டு வணக்கத் துவங்கினார்கள். ஒலிபெருக்கியில் துறவிகள் தொடர்ந்து முழக்கமிடத்துவங்கினர். “ஒரு புத்தத்துறவி தன்னை எரித்துக்கொண்டார், ஒரு புத்தத்துறவி தியாகி ஆகிறார்” என்று.

தியான நிலையிலேயே பத்து நிமிடங்கள் எரிந்த அவரின் உடல், முழுமையாக எரிந்தப் பின்பு மெதுவாக முன்பக்கமாக சாய்ந்தது. அங்கே இருந்த புத்தத்துறவிகள் ஒரு மஞ்சள் துணியில் அவரின் சாம்பலையும் மற்ற பாகங்களையும் எடுத்து சவப்பெட்டியில் அடைத்தனர். பின்பு அருகில் இருந்த புத்த மாடாயலத்திற்கு எடுத்துச் சென்றனர். பல்லாயிரக்கணக்கான மக்களும் துறவிகளும் அங்கே கூடத்துவங்கினர். அன்று மாலை சூரியன் மறைந்த நேரத்தில் வானில் அழுதபடி இருந்த புத்தரில் உருவத்தை பார்த்ததாக ஆயிரக்கணக்கான மக்கள் சொன்னார்கள். துறவியின் உடல் ஜூன் 19 ஆம் தேதி மீண்டும் எரியூட்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

எரியாத இதயம்


ஆனால் அவரின் இதயம் மட்டும் தீயினால் எரியாமல் அப்படியே இருந்தது. அந்த இதயம் ஒரு குடுவில் வைக்கப்பட்டு ‘தியாகத்தின் குறியீடாக’ இன்றும் போற்றப்படுகிறது.

புகைப்படக்காரர் ‘மால்கம் பௌரவுன்’ எடுத்த இப்படம் உலகம் முழுவதும் பரவியது. மறுநாள் செய்தித்தாள்களில் பார்த்த மக்கள் மிரண்டு போனார்கள். அப்போதைய வட அமெரிக்க அதிபர் ஜான் எப்.கென்னடி இப்படத்தைப் பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாராம் “வரலாற்றில், இதற்கு முன்னால் எந்தவொரு செய்திப் புகைப்படமும் உலகத்தாரிடையே இந்த அளவிற்கு உணர்ச்சியை உருவாக்கியதில்லை”.

அங்கே வியட்நாமில் அரசாங்கம் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை. அடக்குமுறைகள் அதிகரித்தன. போராட்டமும் அதிகரித்தது. பல புத்தத்துறவிகள் தங்களை எரித்துக்கொள்ளத் துவங்கினர். வட அமெரிக்க அரசாங்கம், ‘Diem’-மிற்கு கொடுத்து வந்த தன் ஆதரவை நிறுத்திக்கொண்டது. அதன் பின் நவம்பர் 2, 1963-இல் ஒரு படைத்துறை தளபதியால் ‘Diem’ கொல்லப்பட்டார்.  

பிற்காலத்தில் வியட்நாம் போரை எதிர்த்து வட அமெரிக்காவில் இதே முறையில் வியட்நாமிகள் கிட்டத்தட்ட நூறுபேர் தங்களை எரித்துக் கொண்டுள்ளனர். இப்படி தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதின் மூலம் எதிர்ப்பைக் காட்டும் இந்த முறை, உலகமுழுவதும் பின்பற்றப்படுகிறது.

1968-இல் சோவித் யூனியனில், மத்திய கிழக்கு நாடுகளில், 2010-இல் துனுசிய எழுச்சியின் போது, 2011-இல் அல்ஜீரியா, எகிப்து, சவுதி அரேபியா மற்றும் சிரியா போராட்டங்களிலும் இப்படியான எரியூட்டிக் கொள்ளும் போராட்டம் நிகழ்ந்திருக்கிறது.

ராஜிவ் கோஸ்வாமி
1990-இல் வி.பி.சிங் காலத்தில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைக்கு கொண்டுவர முயன்ற போது, அதை எதிர்த்து ‘ராஜிவ் கோஸ்வாமி’ என்ற கல்லூரி மாணவன் டெல்லியில் தன்னை எரித்துக் கொள்ள முயன்றான். அப்போது காப்பாற்றப்பட்ட அவன் 2004-ஆம் ஆண்டு தன் முப்பத்தி மூணாவது வயதில் அதன் பாதிப்பில் இறந்து போனான்.

தமிழகத்தில் ‘முத்துக்குமார்’ மற்றும் ‘செங்கொடி’-இன் வடிவில் இந்த போராட்ட வடிவம் இன்று தொடரப்படுகிறது. இப்படியான மரணங்களை வரவேற்போர் யாருமில்லை, நியாயப்படுத்தி விட முடியாது. அதேநேரம் அலட்சியப்படுத்தி விடவும் கூடாது.


முற்றும் துறந்த ஞானி புத்தபிட்சு முதல் பால பருவத்திலிருக்கும் செங்கொடி வரை நிகழ்ந்த இந்த மரணங்கள் வெளிப்படுத்தும் செய்திகள் இரண்டு. ஒன்று அரசாங்கத்திற்கு எதிராக விடப்பட்ட அறைகூவல். மற்றொன்று தன் சக மனிதனை நோக்கி வைக்கப்படும் மன்றாடல்.

இத்தகையத் தியாகங்கள் ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் அதே நேரம், சுரணையற்றத் தன் சக மனிதனையும் கண்டிக்கிறது.    

இவர்களின் செயலை முட்டாள்தனம் என்று வரையறுக்கும் அதே நேரம், அதன் பின்னே இருக்கும் தியாகத்தையும், உன்னத லட்சியத்தையும் வீரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


இத்தகைய மரணங்கள் நிகழாவண்ணம் தடுக்க ஒரே வழி, அத்தகைய சூழ்நிலைகளுக்கு அவர்களைக் கொண்டு செல்லாமலிருப்பதுதான். அந்தப் பொறுப்பு ஆளுபவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ சக மனிதர்களாகிய நமக்கு இருக்கிறது.

மீண்டும் இப்படியான ஒரு மரணம் நிகழ்ந்தால் அதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் நீங்களும் நானும் தான்.

தோழர்கள் முத்துகுமார் மற்றும் செங்கொடிக்கு வீரவணக்கம்.

கருத்துகள்

  1. Bharathi Dhas
    உங்கள் எழுத்து நூறு சதவீதம் உண்மை...!

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. பதிவை படித்த பிறகு வாயிலிருந்து வார்த்தை வரவில்லை எனக்கு. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அபூர்வ தகவல்கள்... நெஞ்சை கலங்கவைகிறது...

    பதிலளிநீக்கு
  4. மிகவும் அபூர்வ தகவல்கள்... நெஞ்சை கலங்கவைகிறது...

    பதிலளிநீக்கு
  5. megavum unarchi porvamana thagaval. kankalil neer thuli.

    பதிலளிநீக்கு
  6. பிறருக்காக இறந்தவர்களுக்கு பெருமை சேர்க்கவில்லை எனினும், அதனைப் பற்றிய தவறான கற்பிதங்களை உருவாக்காமல் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி, , , , ,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,