முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘வழக்கு எண் 18/9’


மனிதப் பிறவியில் மிகக் கொடூரமானது ஏழ்மையாக இருப்பதுதான். ஏழைகளின் வாழ்க்கையில் இருக்கும் குரூரத்தன்மைக்கு எவ்வித விளக்கமும் தந்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதல்ல, நீதி என்று ஒன்று இருப்பதும் அதில் ஏழைகளுக்கு சம்பந்தம் உண்டா என்பதும் கேள்விக்குறியானதே!

ஏழையாகப் பிறந்துவிட்ட ஒருவனின் அவல நிலையையும் இச்சமூகம் அவனுக்கு வழங்கும் வாழ்க்கையையும் திரையில் கொண்டு வந்திருக்கிறார் பாலாஜி சக்திவேல்.

ஒரு ஏழை இளைஞனின் காதலும் அதற்கான சிக்கலுமல்ல இப்படம். இதை ஒரு காதல் படமாக என்னால் பார்க்க முடியவில்லை. சமூகத்தில் வறுமையின் பிடியில் உழன்று கிடக்கும் பல கோடி அப்பாவி மானுடர்களின் அவல நிலையைப் பதிவு செய்யும் ஒரு முயற்சியாகத்தான் இப்படத்தைப் பார்க்க முடிகிறது.

ஒரு படைப்பு எப்படியானதாக இருக்க வேண்டுமோ அப்படியானதாக இப்படம் இருக்கிறது. ஒரு கலை வடிவத்தின் ஆதார நோக்கம் எதுவாக இருக்க வேண்டுமோ அதுவே இப்படத்தின் அடிநாதமாக இருக்கிறது.

முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு தேர்ந்த கலைஞன் ஒரு அற்புதப் படைப்பைக் கொடுத்திருக்கிறார். கதை, கதாபாத்திர தேர்வு, நடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பயன்பாடு என அனைத்தையும் மிக நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்.

‘கேனான் 5D’ போன்ற சிறிய கேமராவின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, கதை நிகழும் களத்தில் பார்வையாளனைக் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறார்கள். கேனான் 5D கேமராவை மிகச் சிறப்பாக பயன்படுத்திய திரைப்படமாக , என் வரையில் இதுவே முதல் படம் என்பேன்.

ஒரு நல்ல திரைப்படம், ஒன்றுபட்ட மனநிலையில், ஒத்த சிந்தனையின் குவி மையத்தில் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களையும் கொண்டு போய் நிறுத்தும். அந்நேரங்களில் ஒவ்வொரு பார்வையாளனின் சிந்தனையும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். அத்தகைய ஒரு நிலையை இப்படத்தில் பார்க்க முடிந்தது. காவல்துறை அதிகாரி அவ்விளைஞனுக்கு செய்யும் அநீதியின் போது, திரையரங்கில் ‘போலிஸ்கார தே..பையா’ என்றொரு குரலெழுந்தது. அடுத்த கணம் ஒட்டுமொத்த திரையரங்கமும் கைத்தட்டியது. தொடர்ந்து பல முனைகளிலிருந்தும் அதே சொல்லைப் பயன்படுத்தி வசவுகள் வந்துகொண்டே இருந்தது. அதுவொன்றே சாட்சி, இத்திரைப்படம் சமூகத்தை எந்தளவிற்குப் பிரதிபலித்திருக்கிறது என்பதற்கு.

மிகுந்த மனநிறைவோடும், பெருமிதத்தோடும் திரு. பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருத்துகள்

  1. சிறப்பான படம்!

    படத்தை திரையரங்கில் சென்று பார்க்கும்படி பலருக்கும் பரிந்துரை செய்தேன்.

    பதிலளிநீக்கு
  2. பதிவுலகமே மொததமாக திரண்டு இப்படத்தை பாராட்டி இருக்கிறது.
    இரண்டு பதிவுகள் மட்டும் மட்டமாக எழுதியிருந்தன.
    மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் பதிவு
    அது.

    பதிலளிநீக்கு
  3. சமூக பார்வையில் ஒரு சிறந்த படம்..வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. ஒளிப்பதிவு மேலும் பல விவரங்கள் அளித்திருப்பீர்கள் என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  5. சுரேஷ் கண்ணன் சார்..அதைப்பற்றி விஜய் மில்டன் அவர்களிடம் ஒரு பேட்டி எடுக்கலாம் என்று இருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  6. திரையுலகில் சமகால கலைஞர்களையும், அவர்களது படைப்புகளையும் சிலாகித்து பாராட்டுவதும் , அதை பதிவாக்குவதும் மிக அபூர்வமான விஷயம். அதை நீங்கள் நேர்மையாக தமிழில் நல்ல படங்கள் வரும்போதெல்லாம் செய்து வருகிறிர்கள் . வழக்கு எண் 18 / 9 திரைப்படம் பாலாஜி சக்திவேல் அவர்களின் மிக முக்கியமான படைப்பு . உங்கள் விமர்சனத்தில் சிறப்பாக அப்படத்தை அடையாள படுத்தியிருக்கிறிர்கள்.

    பதிலளிநீக்கு
  7. என் பார்வையில், இது ஒரு சிறப்பான திரைப்படம். ஒரு மாவோயிஸ்ட் அல்லது சமூக போராளி உருவாவதின் சூழல் மற்றும் தேவை - அரசு இயந்திரத்தின் மூலமே தயாரிக்கப்படுகின்றது என்ற உண்மை இந்த படத்தில் விளக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் கேனான் காமிரா போன்ற சிறிய காமிரா பயன்படுத்திய காரணத்தால் அதை தேவைக்கு அதிகமான வீச்சில் (unwanted flow of camera movement) பயன்படுத்தி இருப்பது போன்ற உணர்வை தந்தது. குறிப்பாக பாடி கேம் ஷாட்டுகளில், கதாப்பாத்திரங்களின் அசைவுகள் முழு இயற்கையாக இல்லை மற்றும் தேவையில்லாத இடங்களிலும் பயன்படுத்தியதை போன்ற உணர்வைத்தந்தது (சைக்கிளில் காமிரா பொருத்தப்பட்ட பல ஷாட்டுகள்). அவை வித்தியாசமான கோணம் என்றதைத்தாண்டி, காட்சியின் அழுத்தத்திற்கு உதவவில்லை (வித்தியாசமான கோணத்தில் இந்த ஷாட் எடுக்கப்பட்டுள்ளது என்பது திரைப்படம் பார்க்கும்போது உணர்ந்தேன், அது கவனச்சிதறல் செய்கின்றது).

    ஒரு செய்தி: நாளை (22 June 2012) திரு. பாலாஜி சக்திவேல் அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,