முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுபான கடையின் ஊடாக ஒரு பாதை


‘மதுபான கடை’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் வேத் சங்கர் அவர்களை வேறொரு பட வேலையாக சந்தித்தபோது, அவர், தான் அப்போது செய்துகொண்டிருந்த படம் இது என சொல்லியதன் மூலம், ‘மதுபான கடை’ படத்தை அறிந்துக்கொண்டேன். அப்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது என நினைக்கிறேன். மதுபான கடை என்னும் தலைப்பு குடியை ஆராதிக்கும் படம் என்பதாய் எனக்குப்பட்டது. குடியின் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை (இதுவரை.. நாளை என்னாகுமோ..? யாருக்குத் தெரியும்.. ). அதனால் அதை தொடாமலேயே இருக்கிறேன். பரிசோதனையாகக் கூட முயற்சித்துப் பார்க்காமலிருக்கிறேன், பல நண்பர்களின் பரிகாசகங்களுக்கிடையேயும். அதனால் குடியைப் பற்றிய படம் என்பதனால், அதன் மேல் எவ்வித நாட்டமும் ஏற்படவில்லை. அப்படம் வெளியாகியபோதும் முதல் நாளே பார்க்க வேண்டும் என்ற எவ்வித உந்துதலுமற்று இருந்தேன்.

படம் வெளியாகி, நல்ல படம், பார்க்கவேண்டிய படம் என்ற செய்தி நண்பர்களின் மூலமாய் வந்தடைந்த போது, கால தாமதமாகி விட்டிருந்தது. அருகில் எந்த தியேட்டரிலும் அப்படம் ஓடவில்லை. அதற்குள்ளாகத் தூக்கி விட்டிருந்தார்க்ள். அட.. எங்கேதான் பார்ப்பது என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் திருட்டு டிவிடி வாங்குவதில்லை. மேலும் திரைப்படங்கள் சார்ந்த கருத்தரங்குகளுக்குப் போகும்போதெல்லாம் இப்படத்தை பற்றி உயர்வான பல செய்திகள் சொல்லப்பட்டன. தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று என்பதாய் ஆராதிக்கப்பட்டதும் என் ஆர்வத்தை அதிகரித்தது. இந்நிலையில்தான் ‘டிஸ்கவரி புத்தக நிலையத்தில்’ மதுபான கடை திரைப்படத்தின் 'Original DVD'-ஐப் பார்த்தேன். மகிழ்ந்து போனேன். இப்படியான சிறிய படங்களைத் திரையரங்கிலிருந்து நயவஞ்சகமாகவோ அல்லது அறியாமையாலோ விரட்டி அடிக்கும் வியாபார சூழலிருந்து தப்பித்துக் கொள்ள, ஒரு பாதையை நாமாகவே அமைத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிறிய படங்களின் முதலீடுகளை இப்படி டிவிடிக்கள் மூலம் மீட்டெடுக்கும் முயற்சி வரவேற்கப் படவேண்டியது என நினைக்கிறேன். இதன் மூலம் தயாரிப்பாளர் காப்பாற்றப்படுவதுடன், திருட்டு டிவிடி வாங்கும் பழக்கதிலிருக்கும் மக்களுக்கும் அத்தகைய வாய்ப்பை வழங்காமலிருக்க முடியும்.

நகர்ப்புரங்களில் குறைந்தது நூற்றிருபது ரூபாய் இல்லாமல் தனி மனிதனொருவன் ஒரு திரைப்படத்தை பார்த்துவிட முடியாது. அதுவும் அவன் நடந்து சென்று பார்த்தால்தான். இருசக்கர வாகனத்திலோ நான்கு சக்கர வாகனத்திலோ சென்றால் அது இன்னும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தோடு என்றால் கண்டிப்பாக ஆயிரம் ரூபாய் வேண்டும். இத்தகைய சூழல்தான் ரசிகனை திருட்டு டிவிடி வாங்க தூண்டுகிறது என்பது நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். திரைத்துறையில் இருப்போருக்கும் அது தெரியும். ஆனால் அதற்கான மாற்று வழியை யாரும் முயற்சிப்பதில்லை. தொடர்ந்து திருட்டு டிவிடியால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டும் அதைச் சரி செய்ய தேவையான எந்த முயற்சியும் எடுக்கப்பட்டதேயில்லை. திருட்டு டிவிடி கிடைப்பதை தடுத்துவிட்டால் இதை சமாளித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பம் அதற்கு எப்போதும் சவாலாகவே இருக்கும். இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியால் எதையும் திருடி விடலாம், உலக முழுவதும் பரப்பியும் விடலாம். அப்படியிருக்க இந்த திருட்டு டிவிடியை தடுக்க என்னதான் வழி..?

‘திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்..திருட்டை ஒழிக்க முடியாது’ என்பதுபோல, திருட்டு டிவிடியால் பயனடைவோர் திருந்தினால் தான் உண்டு. விற்பவர் வாங்குபவர் இருவரையும்தான் சொல்லுகிறேன். அவர்கள் திருந்த ஒரே வழி, குறைந்த செலவில் திரைப்படம் பார்க்க வழி செய்து தருவது. அதை இரண்டு விதமாக செய்யலாம். திரையரங்கில் குறைந்த விலையில் டிக்கட்டுகளை விற்பது. அப்படி விற்பதன் மூலம் அதிக கூட்டத்தை திரையரங்கை நோக்கி வரவழைப்பது. அப்படி வரவழைத்தால் அதிக நாட்கள் திரைப்படம் ஓடும். அதனால் கொஞ்சம் லேட்டாக பிக்கப் ஆகும் படங்களும் தப்பித்துக் கொள்ளும். அதிக நாட்கள் திரையரங்கிலிருக்கும் படங்களின் மீது மக்களின் கவனம் ஏற்பட்டு மேலும் பலரை திரையரங்கை நோக்கி இழுக்கும். இதன் மூலம் வருமானத்தை பார்க்க முடியும்.

ஆனால் நம்முடைய டிஸ்டிரிபூட்டர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் என்ன சொல்லுகிறார்கள்..“அதிக நாட்கள் எப்படி ஓட்ட முடியும்? அதற்குள்ளாகத்தான் திருட்டு டிவிடி வந்துவிடுகிறதே.. என்ன செய்வது? அதனால்தான் அதிக தியேட்டரில் வெளியிட்டு அதிக டிக்கட் வைத்து குறைந்த நாட்களிலேயே பணத்தை எடுத்து விட முயற்சிக்கிறோம்” என்கிறார்கள். மேலும் தொலைக்காட்சி வந்ததனால் எவனுக்கும் படம் பார்க்கும் ஆர்வம் இல்லை என்கிறார்கள். இந்த கூற்றிலிருக்கும் அபத்தத்தை, கயமையை அல்லது அறியாமையை நாம் கவனிக்க வேண்டும். நீங்கள் அதிக விலை வைப்பதனால்தான் அவன் திருட்டு டிவிடி வாங்க முயல்கிறான் என்பதைம், திரைப்படத்தின் மீதிருக்கும் ஆர்வம் குறையாமல் தான் தமிழன்  இன்னும் இருக்கிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தொலைக்காட்சிகள் வந்ததனால் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் தமிழனுக்கு குறைந்து விட்டது என்ற வாதம் துல்லியமானது என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் எங்கே போங்கள், திரைப்படத்தைப்பற்றி ஆர்வமாய் விசாரிக்கிற, விவாதிக்கிற பல நபர்களை நான் சந்திக்கிறேன். இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும்.

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி தமிழனின் வாழ்வியலோடு அது கலந்து பல காலம் ஆகிவிட்டதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு தமிழனின் செயலுக்குள்ளும் திரைப்படங்களின் தாக்கமிருக்கிறது (விதிவிலக்குகள் உண்டெனினும்). அவனின் தனிப்பட்ட ரசனைக்கும், வாழ்வியலுக்கும், காதலுக்கும், துயரத்திற்கும், அரசியல்சார் பார்வைகளுக்கும் திரைப்படங்கள் மூலக் காரணியாகிருப்பதை நாம் அறிவோம். அதை அவ்வளவு சுலபமாய் தாண்டி வந்துவிட முடியாது. ‘திரைப்படமும் தமிழனின் வாழ்வியலும்’ என்னும் தலைப்பில் இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதனால் மேலும் அவற்றை இங்கே விவரித்து உங்களை வெறுப்பேற்றாமல்.. சுருக்கமாக நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். இதன் மூலம் சொல்ல வந்தது என்னான்னா.. “தமிழனுக்கு திரைப்படம் பார்க்கும் ஆர்வம் ஒரு கடுகளவு கூட குறையவில்லை” என்பதுதான்.

அப்படி திரைப்படம் பார்க்க ஆர்வமாயிருக்கும் தமிழனுக்கு குறைந்த விலையில் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது அல்லது அத்திரைப்படத்தையே குறைந்த விலையில் தயாரிப்பது. குறைந்த விலையில் தயாரித்தால் குறைந்த விலையில் படம் காட்டலாமில்ல?. ஆனா அதைச் செய்ய முடியாது. ஏன் முடியாது? அட குறைந்த விலையில் படம் தயாரித்தால் பிரபல நடிகனுக்கு எப்படி பணம் தருவது? பிரபல நடிகனுக்கு பணம் தரவில்லை என்றால் எப்படி படம் எடுக்க முடியும்? ஏன் பிரபல நடிகன்தான் வேண்டுமா? புது நடிகன் போதாதா? எங்கே, புது நடிகனை வைத்து எடுத்தால் நீதான் திரையரங்குக்கே வர மாட்டேங்கிறேயே?.. அட நான் எங்கேயா வர மாட்டேன்னு சொன்னன்.. நீ தான் படத்தை போட்ட மறுநாளே தூக்கிடறேயே?.. நீ வர்ல அதான் நான் தூக்கிட்டேன். நான் வர்லாமுன்னு பார்த்தா நீ அதிக விலை வச்சிருக்க.. அதிக விலை வச்சா தான்யா நான் போட்ட காச எடுக்க முடியும். அப்பதான்யா அந்த பிரபல நடிகனுக்கு கொடுத்த காச பார்க்க முடியும்.. அது சரி இந்த படத்திலதான் பிரபல நடிகன் நடிக்கலையே, புது நடிகன் தானே அப்போ ஏன்யா அதிக விலை டிக்கட் வைக்கற? ஆங்.. ம்ம்ம்ம்ம். இதற்கு பிறகுதாங்க பதிலே வரதில்ல.

அம்மா/செல்வி/முதல்வர் செயலலிதா அவர்கள் தொண்ணூறுகளில் முதல் முறையாக ஆட்சி அமைத்தபோது, திரையரங்குகள் ஒவ்வொரு திரைப்படத்திற்கு ஏற்றவிதத்தில் விலைகளை, அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அது என்ன சட்டமென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் கமலஹாசன், அச்சட்டத்தைப் பாராட்டி வரவேற்று, இது நல்லதுதான் இதன் மூலம் பெரியபடங்கள் வரும்போது அதிகவிலையும், சிறிய படங்களுக்கு குறைந்த விலையும் திரையரங்கள் நிர்ணயித்துக் கொள்ள முடிவதன் மூலம், தங்களின் வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தார். மேலும் இதனால் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான அதி அற்புத படங்களை (?!) எடுக்க முடியும் என்றார். நான் கூட அதைக் கேட்டு விட்டு..ஆஹா.. இனி தமிழ் சினிமா அவ்வளவுதாண்டா.. ஒரு கை பார்த்திடலாம் அந்த ஹாலிவுட்டுகாரர்களை.. என்று நினைத்துக் கொண்டேன். அதனால்தான் அது இன்னும் ஞாபகமிருக்கிறது. அப்போது நான் எட்டாவதோ ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தேன்..அப்போதைய மூளைக்கு அப்படித்தாங்க தோன்றியது..!

பெரிய படம் வந்தா விலை ஏத்தறீங்க சரி.. சின்னப் படம் வந்தா விலையை குறைக்கதானே வேண்டும்.? அதை விட்டுட்டு அந்தப்படத்தையே தூக்கிடுறீங்களே?! என்னங்கப்பா..இது? இதை ஏன் இந்த கமலஹாசன் கேட்க மாட்டேங்கறாரு? ஒன்றை ஆதரிச்சா அதைச் சார்ந்த செயல்களுக்கு தார்மீக பொறுப்பு நமக்கிருக்கிறது என்பதும் சாத்தியமிருப்பின், தேவைப்படின் அதன் செயல்பாடுகளில் நாம் தலையிடவும் வேண்டும் என்று நினைக்கிறேன். அதன் படி கமல் மாதிரியான பெரியவர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

சரி, நாம நம்ம கதைக்கு வருவோம். இவர்கள் குறைந்த விலையில் படத்தை காட்டவும் மாட்டாங்க. குறைந்த செலவில் படத்தை தயாரிக்கவும் மாட்டாங்க. அதற்குள்ளாக அவங்களுக்கு ஆயிரம் வியாபாரமிருக்கிறது. அந்தக் கதை நமக்கு எதற்கு?!.. ஆனா இவங்க ஒன்னே ஒன்னை மட்டும் புரிஞ்சுகிட்டாங்கன்னா நல்லது. குறைந்த விலையில் படத்தைக் காட்டினா மக்கள் ஏன் திருட்டு டிவிடியில் படம் பார்க்க போறாங்க? என்ற கேள்விக்கு பின்னாலிருக்கும் எதார்த்தத்தை புரிஞ்சிக்கிடனும்.. இல்ல.. இல்ல.. அதைப் பத்தி யோசிச்சா கூட போதும்.

இச்சூழலில் தான் ‘மதுபான கடை’ திரைப்படத்தின் டிவிடி முயற்சியை நாம் வரவேற்க வேண்டும். ஆதரிக்க வேண்டும். இதற்கு முன்னால் சில படங்களின் டிவிடிக்குள் வந்திருக்கலாம். ‘பாலை’ திரைப்படத்தின் முதலீட்டைக்கூட டிவிடிக்களின் மூலமாக மீட்டெடுக்க முயன்று வருவதை அதன் இயக்குனர் செந்தமிழன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி எல்லா கடைகளிலும் கிடைக்கும் விதமாக செய்தார்களா என்று தெரியவில்லை. மதுபான கடை திரைப்படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல பெயரைப் பயன்படுத்தி அதன் படைப்பாளிகள் இந்த டிவிடி சந்தைப்படுத்தலை வெற்றிகரமானதாக்கி விட வேண்டும். அதன் மூலம் புதியதோர் பாதையை நாம் ஏற்படுத்தி விட முடியும் என்று நினைக்கிறேன்.

படம் திரையரங்கிலிருந்து தூக்கப்பட்ட சில வாரங்களுக்குள்ளாக அதன் 'Original DVD' கிடைக்குமெனில் பெரும்பான்மையான தமிழர்கள் காத்திருந்து வாங்குவார்கள் என நம்புகிறேன். இப்படி ‘மொழி’ திரைப்படத்தை திரையரங்கிலேயே இரண்டு முறை பார்த்த போதும் அதன் 'Original DVD' கடைகளில் கிடைத்த போது நானும் என் நண்பர்களும் வாங்கியதை அடிப்படையாகக் கொண்டு இதைச் சொல்லுகிறேன். நல்ல படங்கள் நம் வீடுகளில் இருப்பதை நாம் விரும்பத்தான் செய்கிறோம்.

இன்னும் ஒருபடி மேலாக, ஒரு திரைப்படம் வெளியாகும் போதே, அதே திரையரங்கில் அப்படத்தின் 'Original DVD' கிடைக்கச் செய்தால் என்ன? திரையரங்கில் பார்க்க விரும்புகிறவன் பார்க்கட்டும். வீட்டிற்கு சென்று பார்க்க விரும்புகிறவன் டிவிடியில் பார்க்கட்டும். டிவிடியிலிருந்து வரும் வருமானத்தையும் (டிக்கட் விலையில் இருந்து வருவது போல) திரையரங்கு உரிமையாளருக்கே கொடுத்துவிடலாமே!? இதன் மூலம் திருட்டு டிவிடியை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் குறைக்கலாம் என்று நினைக்கிறேன்.  அட இதில் பெரிய ரிஸ்க் இருக்குப்பா..டிவிடியைக் கொடுத்தா உடனே திருட்டு டிவிடி போட்டு வித்துடுவானுங்கோ என்று சொல்லுவதில் நியாயம் இருக்கிறதுதான்.. ஆனால்.. இப்ப மட்டுமென்ன வாழுதாம்?  குறைந்த பட்சம் பணம் தயாரிப்பாளரைச் சென்று அடையும் வழி இருப்பதாக என அனுபவமற்ற அறிவுக்குத் தோன்றுகிறது. சரியா..தப்பா என்று நண்பர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்க.

சரி.. ‘மதுபான கடை’ திரைப்படத்தின் 'Original DVD'-ஐ  ரூபாய்-75 கொடுத்து வாங்கிப் பார்த்ததில், அப்படத்தைப்பற்றி கருத்து சொல்லும் உரிமை நமக்கு வந்துவிடுகிறது இல்லையா? அதனால்.. அப்படத்தை பற்றி என் கருத்து..

சிறப்பானப் படம். படத்தின் முடிவில் உண்டாகும் துயரத்தை விவரிக்க முடியவில்லை. படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம்.. அந்த BAR அமைக்க தன் நிலத்தை விற்றுவிட்டு..அங்கேயே குப்பை பொறுக்கும். அக்கதாப்பாத்திரத்தின் சொல்லொண்ணா துயரத்தை போன்றே உணர்கிறேன். சமூகத்தின் ஒரு முகத்தை அதே காலகட்டத்தில் பதிவுசெய்திருக்கும் இப்படம் மிக முக்கியமான பதிவு என நினைக்கிறேன். எத்தனை பாத்திரங்கள். எத்தனை அவலங்கள். எத்தனை நிஜங்கள்.. அத்தனையும் நாம் வாழும் சமூகத்தின் பிரதிபலிப்புகள். தனி ஒரு கதையற்று, பாத்திரங்கள் மற்றும் களத்தை அடிப்படையாக வைத்து கதை சொல்லும் இந்த பாணி தமிழுக்கு புதுசு. களங்களே கதையாகும் என்பது ஒரு புதிய பாதைதான். மிகுந்த துயரத்தையும் வலியையும் ஏற்படுத்திய படமாக இது இருக்கிறது. இயக்குனர் கமலக்கண்ணனை மனதாரப் பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.


பின்குறிப்பு: 1
‘‘கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள்.
பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும்.
முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள்.
கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது.
நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம்,
நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம்,
கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம்,
பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம்.
மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம்.
நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது?
ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா?
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றா?’’
# நாஞ்சில் நாடன் #

இதை அவர் எங்கே பதிவு செய்தார் என்று தெரியவில்லை. நான் இதை நண்பர் ‘Saro Lama’ முகநூல் பதிவிலிருந்து எடுத்தேன். இருவருக்கும் நன்றி.

பின்குறிப்பு: 2
மதுபான கடை 'Original DVD' கே.கே.நகர் ‘Discovery Book Palace'-இல் கிடைக்கிறது. நண்பர்கள் தவறாமல் வாங்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரு நல்ல படத்தை, நல்ல முயற்சியை நாம் இப்படியேனும் ஆதரிக்க வேண்டும்.





கருத்துகள்

  1. ஆதங்கமான பதிவு....வரவேற்கிறோம்...அப்புறம் மதுபானகடையில் நடித்த நண்பர் மரம் யோகநாதன் அவர்களின் புத்தக வெளியீட்டின் போது ஒரிஜினல் டிவிடி யை விற்பனைக்கு வைத்து இருந்தனர்,நிறைய பேர் ஆவலுடன் வாங்கினர்..

    பதிலளிநீக்கு
  2. ரெண்டு நாள் முன்னாடி காமிக்ஸ் வாங்கும் பொது இப்பட டிவிடியும் வாங்கிட்டேன்.இன்னும் படம் பார்க்ல. விஜய் நாளைக்கு sacrifise படம் பார்க்க வருவிங்கள

    பதிலளிநீக்கு
  3. புதியபாதை. புதிய இயக்குநர்களும், தயாரிப்பாலர்களும் கவனத்தில் கொள்ளலாம்,

    பதிலளிநீக்கு
  4. Good post... They ll think those who read this.... Pinkurippu 1 seruppadi for (z)hero worship......

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,