முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Rule of Thirds: 'முப்பாக அமைப்பு விதி' - ஒரு அறிமுகம்



சில புகைப்படங்கள் பார்த்தவுடன் சட்டென்று நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றன. அது நம்மை வசீகரிப்பதாக நம் மனது சொல்கிறது.

அதற்கு காரணமென்ன? அப்புகைப்படத்திலிருக்கும் காட்சியா? அப்புகைப்படத்தின் வண்ணச்சேர்க்கையா? ஒளிச்சிதறல்களா? அது சொல்லும் செய்தியா? எது.. எது நம்மை அப்புகைப்படத்தை நோக்கி இழுக்கிறது?

இதற்கான சரியான பதில், மேலே சொன்ன எல்லாமே என்றுதான் இருக்கும். ஆமாம், ஒரு புகைப்படம் என்பது ஆதாரமாகக் கருப்பொருளைக் கொண்டிருக்க வேண்டும். அதன் பொருட்டே வண்ணமும், ஒளியும், இருளும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இவை எல்லாம் சேர்ந்தே அப்புகைப்படமெடுத்த கலைஞனின் எண்ணத்தை பார்வையாளனுக்கு கடத்துகின்றன.

சரி. மேலே குறிப்பிட்டவை அனைத்தும் படைப்பாற்றல் மற்றும் உள்ளடக்கத்தைச் சார்ந்தவை என்றாகிறது. எனில், இதன் பின்னேயிருக்கும் தொழில்நுட்பத்தைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாமா? எத்தொழிலாகட்டும் அல்லது எக்கலையாகட்டும் அவற்றிற்கென சில ஆதார விதிகளும், நுட்பங்களும் உண்டு என்பதை நாம் அறிவோம்.

ஒளிப்பதிவுத்துறையில், புகைப்படத்துறையில் மிக முக்கியமானதும் ஆதாரமானதுமான பல்வேறு கூறுகளின் ஒத்திசைவை / கூட்டமைவை (Composition) அமைப்பதைப் பற்றிய விதிகள் சில உண்டு. ‘Rule of Thirds’, ‘Balancing Elements’, ‘Leading Lines’, ‘Symmetry and Patterns’, ‘Viewpoint’, ‘Background’, ‘Depth’, ‘Framing’, ‘Cropping’ என அவை அனேகமிருந்தாலும், அவற்றில் முக்கியமான ஒன்று இந்த முப்பாக அமைப்பு விதி – ரூல் ஆஃப் தேர்ட்ஸ் (Rule of Thirds) ஆகும்.


‘Rule of Thirds’ என்றால் என்ன?
ஒரு பிம்பத்தை மூன்று பாகங்களாக குறுக்கும் நெடுக்குமாக பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது குறுக்காக மூன்று பாகம் வருவது போல் சமதூரத்தில் இரண்டு கோடுகள், அதே போன்று நெடுக்காக இரண்டு கோடுகள். இதன் மூலம், ஒரு பிம்பமானது ஒன்பது பாகங்களாக பிரிக்கப்படுகிறது.



இப்படி ஒரு அமைப்பை ஒரு புகைப்படமெடுக்கும்போது உங்களின் மனதில் கற்பனையாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் புகைப்படத்தின் ஆதாரக் கூறுகளை (elements) எங்கே அமைக்க வேண்டும் என்று இவ்விதி சொல்கிறது. அதாவது ஒரு புகைப்படத்தின் மைய கருத்தை அல்லது பார்வையாளன் கவனிக்க வேண்டிய முக்கியமான மூலத்தை (subject), இந்த ஒன்பது கட்டங்களில் எங்கே அமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இவ்விதி உதவுகிறது.

பொதுவாக, நாம் புகைப்படமெடுக்கும்போது அதில் subject -ஐ மையத்தில் வைக்க முயல்வோம். ஆனால், மேலே காட்டப்பட்டிருக்கும் நான்கு கோடுகளும் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் அல்லது அவற்றின் உட்பகுதியில் Subject வைக்கப்படுமானால் அது, பார்வையாளர்களை இன்னும் எளிதாகச் சென்றடையும் என்கிறது Rule of thirds!


உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தைப்பாருங்கள். இதில் subject அந்த பெண்தான் என்பது நமக்குத்தெரியும். எனில், அப்பெண் புகைப்படத்தின் மையத்தில் வைக்கப்படாமல் கோடுகள் சந்திக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்தக் கோடுகள் சந்திக்கும் புள்ளிகளில் அல்லது அதற்கு உட்பட்ட பகுதிகளில் நமது subject -ஐ வைத்துப்படமாக்கும்போது, அவை பார்வையாளனை வெகுவாக கவர்கின்றன என்கின்றன ஆய்வு முடிவுகள். இதன் மூலம் அப்புகைப்படங்கள் நேர்த்தியாகவும் ஈர்ப்புடனும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இவ்விதி மனிதர்களை படம் பிடிக்கும்போது மட்டுமல்ல, ஏனைய படங்களுக்கும் பொருந்தும்.

கீழே உள்ள புகைப்படத்தைப்பாருங்கள். இதில் எது முக்கியமான பகுதி?


கண்டிப்பாக அது வலதுபுரத்திலிருக்கும் பாறைதான் இல்லையா? அதுதானே நம் கண்ணை முதலில் கவர்கிறது.? எனில் அப்பாறை, மையத்தில் இல்லாமல் ஏன் ஒரு ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.? காரணம் இப்புகைப்படம் ‘Rule of Thirds’ -ஐ பின்பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.


அதாவது மையப்பாத்திரம் (Subject) புகைப்படத்தின் மொத்த பரப்பளவை குறுக்கும் நெடுக்கமாக மூன்று பாகங்களாக பிரித்து, அதில் நெடுக்கு வாட்டத்திலிருக்கும் மூன்றில் ஒரு பாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அக்கோடுகள் சந்தித்துக்கொள்ளும் இடத்தில். மேலும் கீழே இருக்கும் நிழல் பகுதி புகைப்படத்தில் கிடைவாக்கில் மூன்றாம் பாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேப்போல ‘Horizon' கோடும் மேலேயிருக்கும் மூன்றாம் பாகத்தில் அமைக்கப்பட்டிருப்பதை கவனியுங்கள். (‘Horizon' கோடு என்பது வானமும் பூமியும் சந்திக்கும் கோட்டை குறிப்பதாகும்)

எனில், நாம் எடுக்கும் அத்தனைப் புகைப்படங்களும் இவ்விதிகளுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டுமா? இல்லை, அப்படி இல்லை!

இவ்விதிகள் ஒரு வகையான வழிகாட்டி, அவ்வளவுதான். இவை மனிதனின் இயல்பான உள்வாங்கும் திறனை அடிப்படையாகக்கொண்டு, ஆய்வுகளின் முடிவாக உருவாக்கப்பட்டவை. இவை புகைப்படங்களுக்கு எளிதில் புதிய பரிமாணங்களைத் தருகின்றன.

‘நிலத்தோற்றங்களைப்’ (landscapes) புகைப்படமெடுக்கும்போது ‘Horizon' கோட்டை, மேல் அல்லது கீழ் மூன்றாம் பாகத்திலும், மனிதர்கள், மிருகம், கட்டிடங்கள், பாறைகள் போன்ற ‘Subjects’ -ஐ படம்பிடிக்கும்போது அவற்றை வலது அல்லது இடது மூன்றாம் பாகத்திலும் வையுங்கள் என்று இவ்விதி சொல்கிறது. அப்படி எடுக்கும்போது நிலத்தோற்றங்களுக்கு ஒரு ஆற்றல்மிகுந்த தன்மையும் (dynamic), ‘Subjects’-க்கு ‘திசை உணர்வையும்’ (sense of direction) கொடுக்கிறது என்றும் சொல்கிறார்கள்.



மேலே இருக்கும் படங்களில், மிதிவண்டியில் செல்பவர் போகும் திசை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. அதேப்போல பறவை எந்நேரத்திலும் வலதுபுறமாக பறந்து விடலாம் என்ற எண்ணத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. இவ்வகை தகவல் அல்லது எண்ணவோட்டம் அப்புகைப்படத்திற்கு ஒருவகையான உயிர்ப்பை ஏற்படுத்துகிறது.


 

மேலே இருக்கும் இரண்டு படங்களில், முதல் புகைப்படத்தில் ‘Horizon’ புகைப்படத்தில் நடுவில் இருக்கிறது. இரண்டாவது படத்தில், அதே புகைப்படம் CROP செய்யப்படுவதன் மூலமாக, Horizon கோடு மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இது நம்மை இன்னும் வசீகரிக்கிறது அல்லவா? மேலும் இதில் முக்கிய பகுதியான வலதுபுறத்துப் பாறையின் மீதிருக்கும் கட்டிடம் நம் கவனத்தை ஈர்ப்பதையும் கவனியுங்கள்.

இதோ மற்றொரு உதாரணம்.


சரி, இந்த 'Rule of thirds'-ஐ  எப்படி நம் படங்களில் பயன்படுத்துவது? அதுவொன்றும் கடினமானதில்லை. ஒவ்வொரு புகைப்படத்தை எடுக்கும்போது இரண்டு கேள்விகளுக்கு பதில் தேடுங்கள்,
  1. இப்படத்தில் எதுவெல்லாம் சுவாரசியமானவை.? - What are the points of interest in this shot?
  2. அவற்றை நான் எங்கே வைக்கப்போகிறேன்? - Where am I intentionally placing them?
அவ்வளவுதான். பிரச்சனை முடிந்தது. தொடர்ந்து இதைப் பயிற்சி செய்வதன் மூலம் தேர்ச்சி அடைந்துவிடலாம். பின்பு அது உங்களின் இயல்பில் ஒன்றாகி விடும். உலகின் சிறந்த புகைப்படக்காரர்கள் இவ்விதியை தவறாமல் பின்பற்றுகிறார்கள். நீங்களும் அவர்களில் ஒருவராகிட, இந்த அறிமுகம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

இதேதான் ஒளிப்பதிவிலும் பின்பற்றப்படுகிறது. ஒளிப்பதிவுத்துறைக்கென்று பல விதிகள் இருந்தாலும், இந்த 'Rule of thirds' –ம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இதன் அடுத்தக்கட்டமாக இவ்விதியின் மேம்பட்ட வடிவமாக அல்லது மற்றொரு விதியாக ‘Golden Ratio’ என்றொரு விதி இருக்கிறது. அதைப்புரிந்துக்கொள்ள ‘Fibonacci numbers’, ‘Fibonacci sequence’, ‘Golden spiral’, ‘Divine Proportion’ என்பதை எல்லாம் நாம் விளங்கிக்கொள்ள வேண்டியதிருக்கும்.

பூக்களின் அடுக்குகள், இலைகளின் துளிர்ப்பு, நீரலைகளின் பரவல் என இயற்கையெங்கும், ‘Fibonacci விதி ஒளிந்துகொண்டுள்ளது. உலகின் சிறந்த கலைஞர்கள் எல்லாம் இதைப் பின்பற்றி தங்களின் படைப்புகளை படைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். அது, எகிப்தின் பிரமீடாகட்டும், நவீன உலகின் அடையாளமான அமெரிக்க கட்டிடங்களாகட்டும், லியார்னோடோ டாவின்ஸியின் மோனலிசா ஓவியமாகட்டும், எல்லாவற்றிலும் இந்த ‘Fibonacci’ அடிப்படை இருக்கிறது என்கிறார்கள். இந்த விதி ஒளிப்பதிவிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இவற்றைப்பற்றி மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.

இப்போதைக்கு, 'Rule of thirds' -ஐப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட மேலும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு.

















'Rule of Thirds' விதியை விளக்கும் கானொளி:

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,