முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை - கோயம்புத்தூர் : நன்றி



இரண்டு நாட்கள் நடந்த ஒளிப்பதிவுப் பயிற்சிப்பட்டறை இனிதே நிறைவுற்றது. கல்லூரி விடுமுறை, கோடை விடுமுறை, தேர்தல் நேரம், முகூர்த்த நாள் போன்ற பல காரணங்களால், ஆர்வம் தெரிவித்த பலரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் இது மிக சுவாரசியமான ஒரு பயிற்சிப்பட்டறையாகத்தான் இருந்தது. வழக்கம் போல, பல்துறையிலிருந்தும் பலர் வந்திருந்தார்கள். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், புகைப்படக்காரர்கள், ஐடி துறை, உதவி ஒளிப்பதிவாளர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். எல்லோருக்கும் ஒளிப்பதிவு குறித்து மிகுந்த ஆர்வம் இருக்கிறது. 

முதல் நாள், தொழில்நுட்பத்தையும், விதிகளையும் தியரி வகுப்பைப்போல சொல்லிக்கொடுத்தோம். இரண்டாம் நாள், ஒளியமைப்பு பற்றிய தியரியை அறிமுகப்படுத்திவிட்டு பின்பு பிராக்டிகல் வகுப்பாக நடத்தினோம். 

கடந்த முறை சென்னையில் நடத்திய பயிற்சிப்பட்டறையில், புகைப்படத்துறையில் ஆரம்பித்து, ஒளிப்பதிவு துறைக்கு வந்தோம். ஒரு புகைப்படக்கேமரா எப்படி இயங்குகிறது என்பதில் இருந்து இன்றைய நவீன திரைப்பட டிஜிட்டல் கேமரா எப்படி இயங்குகிறது என்பது வரை சொல்லிக்கொடுத்தோம். ஆனால், அதில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலானோர், புகைப்படத்துறையை தவிர்த்திருக்கலாம், இன்னும் கொஞ்சம் ஒளிப்பதிவு குறித்து பேசியிருக்கலாம் என்று கருத்து சொல்லி இருந்தார்கள். அதனால், இம்முறை புகைப்படத்துறையை தவிர்த்து, முழுக்க முழுக்க ஒளிப்பதிவுத்துறையை மட்டும் எடுத்துக்கொண்டோம். ஆயினும், எதைச் சொல்லித்தருவது, எதை விடுவது என்ற கேள்வி இருக்கத்தான் செய்தது. வருபவர்கள் பெரும்பாலும் இத்துறை சார்ந்து ஆர்வம் மட்டுமே கொண்டவர்கள், நேரடி அனுபவம் அற்றவர்கள் என்பதனால், இத்துறை சார்ந்த ஒரு முழுமையான அறிமுகத்தை அவர்களுக்குத் தருவதே ஆதார நோக்கம். எதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது, எதையெல்லாம் கவனிக்க வேண்டியதிருக்கிறது, எதுவெல்லாம் இணைந்து ஒரு படைப்பை கொடுக்கின்றன, தொழில்நுட்பமும், கலையும் இணையும் அந்த அற்புதம் எப்படி நிகழ்கிறது, அதற்கான அடிப்படை தகுதி என்ன என்பதை புரிய வைக்க முயன்றோம். 

ஆயினும், இந்த இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறைக்கு போதவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எங்களுக்கும், நாங்கள் சொல்ல வந்ததை, விரும்பியதை எல்லாவற்றையும் சொல்லி விட முடியவில்லை. கலந்து கொண்டவர்களுக்கும் இந்த இரண்டு நாட்கள் போதவில்லை என்றுதான் தெரிகிறது. எல்லோருமே, அடுத்த முறை நாட்களை அதிகப்படுத்துங்கள். 4 அல்லது 5 நாட்களாக நடத்துங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். சென்னையில் நடந்த பயிற்சிப்பட்டறையின் போதும் கருத்து இவ்வாறே இருந்தது.

இம்முறை, 5C’s of Cinematography பற்றி ஒரு சிறு அறிமுகத்தை மட்டுமே கொடுக்க முடிந்தது. அதை குறித்தான பல விடியோக்கள் எங்களிடம் இருந்த போதும், அதை காட்ட நேரம் போதவில்லை. ஆனால், அத்துணை பேரும் 5C’s of Cinematography-இல் ஆர்வமாக இருக்கிறார்கள். அதைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.. அதனால், அடுத்தமுறை, ஒரு குறிப்பிட்ட டாப்பிக்கை மட்டும் எடுத்துக்கொண்டு பயிற்சிப்பட்டறை நடத்தலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. குறிப்பாக.. Lighting, 5C’s of Cinematography, Lens போன்றவற்றில் எதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, 4 முதல் 5 நாட்கள் பயிற்சிப்பட்டறை வைக்கலாம். விரைவில் அதைப்பற்றிய தகவலைத் தருகிறோம்.

நாட்களை அதிகப்படுத்துவது, வேறொரு சிக்கலை ஏற்படுத்தும். பலரால் அதிக நாட்களை ஒதுக்க முடியாது. இரண்டு நாட்கள் என்பதே அவர்களின் வேலையை பாதிக்க கூடியதாக இருக்கிறது. அதனாலேயே பலர் கலந்துக்கொள்ளவில்லை. அப்படி நேரம் இருப்பவர்கள் மட்டும் வர நேர்ந்தால், கலந்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். நபர்களின் எண்ணிக்கை குறைந்தால், கட்டணம் அதிகரிக்கும். ஒவ்வொரு பயிற்சிப்பட்டறைக்கும் பல செலவுகள் செய்ய வேண்டியதிருக்கிறது. இடம், உணவு, விளம்பரம், போக்குவரத்து, புரஜெக்டர், ஒலி அமைப்பு, லைட்ஸ், கேமராவுக்கான வாடகை, உதவியாளர்களுக்கான சம்பளம் என செலவுகள் ஒருபுறம் என்றால், அதை ஏற்பாடு செய்ய குறைந்தது ஒருமாதம் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அப்போது ஆகும் செலவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டியதிருக்கிறது. அதனால், அடுத்த தடவை.. அதிக நாட்கள், அதிக வகுப்புகள், அதிக அனுபவம், கூடவே அதிக கட்டணமும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்பலாம்.

கலந்து கொண்டவர்களுக்கும், கோவை நண்பர்கள் ‘தமிழ் செழியன்’, பாபு மற்றும் ஆனந்த் அவர்களுக்கும், AZURE STUDIO நண்பர்கள்.. கௌதம், வர்கீஸ், தினேஷ் அவர்களுக்கும், நண்பர், திரைப்பட ஆர்வலர் திரு. பாஸ்கரன் / உலக சினிமா ரசிகன் அவர்களுக்கும், கேமரா வழங்கிய திரு.ஶ்ரீதர் அவர்களுக்கும் இந்நேரத்தில் எங்கள் நன்றியை சொல்லிக்கொள்கிறோம்.

நன்றி நண்பர்களே! இணைந்திருப்போம்!!


- விஜய் ஆம்ஸ்ட்ராங்
- ஞானம் சுப்ரமணியம்


















































































































































































கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 02 - பலதானியம் விதைத்தல்

  இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...

வயலும் வாழ்வும்: இயற்கை விவசாயம்: 01

ரொம்ப நாளா ( ரொம்ப வருடமா ) இந்த எண்ணம் இருந்துக்கொண்டே இருக்கிறது ‘ நாம விவசாயம் செஞ்சிப்பார்த்துடனும் ’. விவசாயம் கடினம் , அதை எல்லாம் நாம தொடர முடியாது என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் . கிராமத்தில் கூட இவ்வார்த்தைகள் அடிக்கடி காதில் விழுந்திருக்கிறது … “ நான் பட்ட கஷ்டத்த , எம் புள்ள படவேண்டாம்யா … அவன் ஏதோ ஒரு மாச சம்பளத்திற்கு போயி நல்லா இருக்கட்டும் ”  அப்படி … உண்மையில் இந்த விவசாயம் கடினம் தானா ? அது கடினமுன்னா ... நாம் சாப்பிடறது எப்படி ? கடினமான வேலையை யாரும் செய்ய முன்வரலன்னா , இந்த உலகம் இயங்குமா ? அப்படித்தானே , பலகோடி விவசாயிங்க தொடர்ந்து விவசாயம் செய்யறாங்க . பலகோடி உழைப்பாளி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் . கடினம் என்பதனாலேயே அதை செய்யாம இருக்க முடியுமா ?  எதைக்குறித்தும் நமக்கு ஒரு அபிப்பிராயம் , கருத்து உண்டாக வேண்டுமானால் , அதை செய்து பார்த்துவிடுவதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும் . அப்படித்தான் இந்த விவசாயம் குறித்த தேடலுக்கு ஒரே வழி … ‘ விவசாயம் செய்து பார்த்துவிட...

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ...