முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழில் ஒரு காமிக்ஸ் தளம்:


http://www.mbcomicstudio.com

இரண்டு நாட்களுக்கு முன்பாக, நானும் நண்பர் ஆதிமூலகிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கும்போது, காமிக்ஸ் பற்றி பேச்சு வந்தது. அண்மையில் வெளியான முத்து காமிக்ஸின் ‘என் பெயர் டைகர் (Mr.Bluberry)’ பற்றி சிலாகித்துக்கொண்டிருந்தோம் எனலாம். அதன் களம், கதை, ஓவியம் பற்றிய பிரமிப்பு எங்களைத் பலமாகவே தொற்றிக்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழில் ஏன் யாரும் காமிக்ஸ் தயாரிக்க, வரைய முயற்சிப்பதில்லை, அப்படியான தகுதியோ, முயற்சியோ இங்கே இல்லவே இல்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டோம். தமிழில் ஆங்காங்கே, ஓரிரு முயற்சிகள் நடந்துவந்திருக்கின்றனதான் எனினும், எங்கள் ஆதங்கத்தில் தவறொன்றுமில்லை என்பதையும் ஒப்புக்கொள்வீர்கள்தானே?

தமிழில் கால காலத்திற்கும் நிலைத்து நிற்கும், தகுதியான பல அற்புதமான கதைகள் இருக்கின்றவே, அவற்றை எல்லாம் காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றினால் எப்படி இருக்கும்.? குறிப்பாக ‘பொன்னியன் செல்வன்’ நாவலை, காமிக்ஸ் தொடராக மாற்றினால், அது தமிழ் சமுகத்திற்கு எத்தனைப் பெரிய கொடையாக இருக்கும். இதைச் செய்ய இங்கே ஆட்கள் இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் ஆட்களைப் பயன்படுத்தியாவது அதைச் செய்துவிட்டால், எப்படி இருக்கும்? அதற்கு எவ்வளவு செலவாகும்.? அதற்கான பணத்திற்கு எங்கே போவது..!? என்றும் பேசிக்கொண்டோம்.

ஆனால், பாருங்கள். இப்போதும் தமிழில் காமிக்ஸ் முயற்சி ஒன்று நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. இயக்குநர் திருமதி.நந்தினி அவர்கள் அப்படியான முயற்சி ஒன்றை ஏற்கனவே துவங்கியிருக்கிறார் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தபோதும் அதை மறந்துவிட்டேன். அவர்களுடைய ‘ சிவப்புக்கல் மூக்குத்தி’ காமிக்ஸை நான் படித்திருக்கிறேன். அற்புதமான முயற்சி அது. காமிக்ஸ் வாசிக்கும் ஆர்வமுடைய அத்தனை நண்பர்களுக்கும் அப்புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

இப்போது நந்தினி அவர்கள், அடுத்த காமிக்ஸ் கதையையும் துவங்கிவிட்டார். ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ என்னும் அக்காமிக்ஸை அவரே எழுதி, படங்களை வரைந்து உருவாக்கி வருகிறார். அக்காமிக்ஸுக்கு என்றே தனியாக ஒரு வலைத்தளம் வடிவமைத்து, வாரம் ஒரு பக்கம் என்று அக்காமிக்ஸ் கதையை பதிவேற்றியும் வருகிறார். ஆஹா.. எத்தனை பெரிய முயற்சி அது..!

தமிழில் இப்படியான ஒரு முயற்சி நடப்பது, மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஒருசேரத் தருகிறது. இப்படியான முயற்சிகள் தான், வருங்காலத்திற்கான பாதையை அமைக்கும். எங்கேனும் ஒரு துவக்கம் இருக்கத்தானே வேண்டும். கடந்த காலங்களில், பத்திரிக்கை நடத்திய சிலர் தமிழில் காமிக்ஸ் முயன்றிருக்கலாம், எனக்கு அதைபற்றி சரியாக தெரியவில்லை (நண்பர் கிங் விஷ்வாவைக் கேட்டால் தெரியும்). எனக்கு தெரிந்ததெல்லாம் (நம்மில் பலருக்கு) ராணி காமிக்ஸ், முத்து, லயன் போன்ற அயல்நாட்டு கதைகளை, தமிழில் வழங்கிய புத்தகங்கள்தான். உண்மையில், அதைக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுவும் இல்லை என்றால், காமிக்ஸ் என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்திருப்போம் நாம்.

இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில், எதையும் சாத்தியமாக்கிவிட முடியும். டிஜிட்டல் வளர்ச்சியினால் திரைத்துறை மட்டுமல்ல, எல்லாத்துறையிலும் நுட்பங்கள் இலகுவாகி இருக்கின்றன. ஒரு படைப்பை உருவாக்கத் தேவையான தொழில்நுட்பம் இலகுவாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. அதைப்பயன்படுத்தி அற்புதமான படைப்புகளை படைத்திட முயற்சிக்க வேண்டும். பொருளாதாரத் தடையை, நவீன தொழில்நுட்பங்கள் குறைத்திருக்கின்றன. ஆயினும் அது விலையற்றதில்லை. அதற்கென்று ஒரு விலையும், தகுதியும், முயற்சியும் கண்டிப்பாக அவசியமாகிறது. தகுதியான கலைஞர்கள், தங்களுக்கான மனத்தடையை உடைத்து வெளியே வந்து முயன்றால், பல அற்புத சாதனைகளை படைத்திட முடியும். இது திரைப்படத்திற்கு மட்டுமல்ல, எத்துறைக்கும் பொருந்தும். அவ்வகையில் திருமதி.நந்தினியின் இம்முயற்சி பெரும் சாதனை என்றுதான் சொல்லுவேன். ஒரு இயக்குநராக பயின்று, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு, திரைப்படமொன்றை இயக்கி (திரு திரு..! துறு துறு..!), தன் அடுத்த படம் தடைபட்டபோதும், கலங்கி நிற்காமல் அக்கதையை ஒரு காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வந்தது எத்தனை பெரிய துணிவு, ஆற்றல்.? நம்மில் எத்தனை பேருக்கு அது இருக்கிறது.? திருமதி.நந்தினி அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். என் சக படைப்பாளி, ஆயினும், அவரைப் பார்த்து பிரமிப்பும், நம்பிக்கையும் கொள்கிறேன்.

இத்தகைய தகுதியான கலைஞர்களை தமிழ் சமூகம் அங்கீகரிக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும், உதவ வேண்டும். அவர்களின் படைப்புகளுக்கு உரிய மதிப்பையும், வரவேற்பையும் தரவேண்டும்.

புத்தகத்தின் டிஜிட்டல் எடிசன் (Digital Edition) வாங்குவதற்கு கீழே உள்ள லிங்குகளை பயன்படுத்துங்கள்:



கருத்துகள்

  1. சிவப்பு கல் மூக்குத்தி காமிக்ஸ் வெளியாகிவிட்டதா? எங்கே கிடைக்கும்??

    பதிலளிநீக்கு
  2. 'சிவப்புக்கல் மூக்குத்தி' காமிக்ஸ், வாங்குவதற்கான லிங்கை மேலே கொடுத்திருக்கிறேன் பிரஷாந்த. பிரிண்டட் புத்தகமாக இன்னும் வெளியாகவில்லை. இப்போதைக்கு டிஜிட்டல் எடிசன் தான்.

    பதிலளிநீக்கு
  3. sir next workshop yeppo start pannuviga sir naa last time varalamnu irundha varamudila shoot irundhadhu

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,