முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படமும்…! (2)



திரைப்படக்கல்லூரி என்று ஒன்று உண்டு. அங்கே ஒளிப்பதிவுத்துறைக்கென்று படிப்பும் இருக்கிறது என்றெல்லாம் அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கிராமத்துக்காரன் அல்லவா!  இயற்பியல், கணினி என சிலவற்றை படிக்க விரும்பி, பின்பு தந்தையின் விருப்பத்தின் பேரில், பெங்களூரில் சட்டப் படிப்பில் சேர்த்துவிடப்பட்டேன். முதலில் அது வருத்தமாக இருந்தபோதும், பெங்களூர்என்பதனால் சமாதானம் ஆகிக்கொண்டேன்.  


பிறந்ததிலிருந்து கிராமத்திலேயே வளர்ந்த ஒருவனுக்கு பெங்களூர் போன்ற பெரும் நகரம் கொடுத்த பரவசத்தை எப்படிச்சொல்ல!?, குளிரும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இடைப்பட்ட தட்பவெப்ப நிலையில் இருக்கும் அந்த ஊர், மரங்களால் சூழப்பட்ட அதன் சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், பெரிய பெரிய திரையரங்குகள், பரந்துவிரிந்த பார்க்குகள் என்று நகரம் முழுவதும் சுவாரசியத்தை உள்ளடக்கி வைத்திருந்த அந்த ஊர், என்னுடைய கல்லூரி காலத்தை அர்த்தமுள்ளதாக்கியது


அங்கே வாரத்திற்கு நான்கு திரைப்படங்களைப் பார்த்துவிடுவேன். அப்போது பார்ந்த ஆங்கிலப்படங்கள்தான் என்னுடைய ஒளிப்பதிவாளனாக வேண்டும் என்ற ஆசைத்தீயில் மேலும் நெய்யை ஊற்றின


அதேநேரம்வாசித்தல்எனும் பழக்கமும் அதிகரித்திருந்தது. பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும்படிப்புஇருக்கிறது என்னும் உண்மையை கதைப்புத்தகங்கள் எனக்கு உணர்த்தியிருந்தன. ராணி காமிக்ஸ், லயன், முத்து காமிக்ஸ், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, ஓஷோ, சுரா, கிரா, திஜா..என்றும் தேடித்தேடி வாசிக்கும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. திரைப்படத்திற்கும் இலக்கியத்திற்கு தொடர்பு உண்டு என்பதை நம்பத்துவங்கிருந்தேன். சொல்லப்போனால், அதுதான் தூரம் குறைந்தகுறுக்கு வழிஎன்ற எண்ணமும் இருந்தது


ஒளிப்பதிவாளனாக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தேடத்துவங்கினேன். சட்டப்படிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாம் விரும்பும் ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்ளுவது எப்படி..? அதற்கான தகுதிகள் என்னென்ன? அதை வளர்ந்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?


ஒளிப்பதிவாளனாவதற்கு அடிப்படை, ஒரு புகைப்படக்காரனாக இருப்பது என்பதும், ஒளிப்பதிவுத்துறைக்கு அடிப்படை புகைப்படத்துறை என்பதையும் அறிந்துக்கொண்டேன். மேலும், திரைப்படங்களைப் பார்ப்பதும், சிறந்த ஒளிப்பதிவாளர்களை அடையாளம் காணுவதும், அவர்களின் நுட்பங்களை கவனிப்பதும் அவசியம் என்பதையும் புரிந்துக்கொண்டேன். பின்பு, புகைப்படக் கேமராக்களை பழுது பார்க்கும் கடை ஒன்றில் பகுதி நேர ஊழியனாக சேர்ந்து, பல புகைப்படக் கேமராக்களை பற்றி அறிந்துக்கொண்டதும், புகைப்படம் எடுப்பதில் தேர்ச்சி பெற்றதும், அதன் வழி பெற்ற அனுபவத்தில்ஆனந்த விகடன்இதழில்மாணவ பத்திரிக்கையாளனாகஇணைந்ததும், கல்லூரி படிப்பு முடிந்து சென்னைக்கு ரயில் ஏறியதும் நான் கடந்து வந்த பாதை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,