ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளராக தேர்வாகி, எங்களுடைய செய்திகள் பிரசுரம் ஆகவேண்டும் என்று முயன்றுக்கொண்டிருந்த நேரத்தில் தான், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள், வீரப்பனால் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது.
ராஜ்குமார் அவர்களின் வீடு பெங்களூரில் இருந்ததனால், விகடனில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது… ராஜ்குமார் கடத்தப்பட்ட பிறகான சூழலை, அவர் வீடு இருந்த பகுதி மற்றும் ரசிகர் மன்றங்களிலிருந்த பகுதிகளிலிருந்து சேகரிக்க ஆலோசனை சொல்லப்பட்டது. அதேநேரம் பெங்களூர் நகரத்தெருக்கள் அல்லோகலப்பட துவங்கியது. ஆர்பாட்டங்களும், கடையடைப்புகலும் நிகழ்ந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெங்களூர் மட்டுமல்ல, நாங்களும் பரபரப்பானோம்.
அப்போது நான், பகுதி நேர ‘வெப் டிஸைனராகவும்’ பணி செய்துக்கொண்டிருந்தேன். Arena Multimedia-வில் ‘Diploma in Multimedia’ படித்திருந்தேன். அதன் அடிப்படையில் இந்த ஐடி வேலை. இதைக்குறித்து பிறகு எழுதுகிறேன். காரணம், ஒரு ஒளிப்பதிவாளனாக பிற்காலத்தில் பெரும் உதவி செய்த படிப்பு இது.
கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது, அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டு, கேமராவை தூக்கிக்கொண்டு தெருவில் இறங்கினேன்.
நான் வசித்தது ‘அலசூர் - Ulsoor’ பகுதியில், அது தமிழர்கள் நிறைந்த பகுதி, அங்கே பெரும் கலவரங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அதே சமயம் பெங்களூரின் பிறப்பகுதியில் கலவரங்கள் மூண்டன. தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள் தாக்கப்பட்டன.
தமிழ் பத்திரிக்கையான ஆனந்த விகடனின் அடையாள அட்டையைக் காட்டுவதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. அதற்கு என்னவிதமான எதிர்வினை வரும் என்றும் பயமாக இருந்தது. உடன் பணிபுரிந்த கன்னட நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு கலவரங்கள் நிகழ்ந்த பகுதிகளுக்குச் சென்றேன். காவல்துறை அதிகாரிகளிடம் விகடன் அடையாள அட்டைக்கு மதிப்பு இருந்தது, அனுமதி வழங்கினார்கள். தெருவெங்கும் டயர்கள் கொளுத்தப்பட்டன. தமிழ் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டபோதெல்லாம் ஆவேசமான கோஷங்கள் எழுப்பட்டன. அதில் முழுவதும் தமிழர் வெறுப்பு நிரம்பி இருந்தது. திடீரென்று வீரப்பன் தமிழர்களின் அடையாளமாக மாறிப்போனோர். ஒட்டுமொத்த தமிழர்களின் சார்ப்பாகத்தான் அவர் ராஜ்குமாரை கடத்தினார் என்று அவர்கள் நம்பியது போல இருந்தது. தமிழ்த்தலைவர்கள் மற்றும் வீரப்பன் பற்றிய வசைகள் எழுப்பினார்கள்.
கன்னடர்களின் மொழிப்பற்று, இனப்பற்று பற்றி முன்பே அறிந்திருந்தபோதும், இச்சம்பவத்தில்தான் நான் முழுமையாக அதனைக்கண்டேன். ஒருபுறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் ஆச்சரியமாகவும் இருந்தது. அதுநாள் வரை, தன் மொழி குறித்து, தன் இனம் குறித்து பெருமிதம் கொள்வதும், இந்திய நாட்டில் தனித்த அடையாளம் குறித்து பேசுவதும்… தவறு, குற்றம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படித்தான் இந்திய பொதுபுத்திக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா நம் நாடு, நாமெல்லாம் இந்தியர்கள், இந்தியர்கள் எல்லோரும் சகோதர சகோதிரிகள், வேற்றுமையில் ஒன்றுமை என்று சொல்லிக்கொடுத்து பழகப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்திய பல்வேறு இனக்குழுக்களின் கூட்டு ஒன்றியம் என்பது அப்போது என் கவனத்திற்கு வந்திருக்கவில்லை. இப்போது ‘திராவிட மாடல்’ அரசு சொல்லும் ‘இந்திய ஒன்றியம்’ பற்றிய எவ்வித புரிதலும் அப்போது எனக்கு இல்லை. மொழி, இனம், வரலாறு, அரசியல் பற்றிய துவக்கப்பாடம் கூட துவங்கியிருக்கவில்லை நான். அதனால், கன்னடர்களின் இந்த மொழிப்பற்றி, இனப்பற்று… இனவெறியாக, மொழி வெறியாக தோன்றியது.
தங்கள் நேசிக்கும் ஒருவருக்கு ஆபத்து என்றவுடன், பொங்கி எழும் கன்னடகர்களின் அன்பை, அரசியலைப் புரிந்துக்கொள்ள 2009ஆம் ஆண்டு வரை காலம் தேவைப்பட்டது எனக்கு. 2009-இல் நம் ஈழத்து சொந்தங்களின் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்குப் பிறகுதான், அரசியல் குறித்த பார்வை எனக்கு உண்டாயிற்று…
கலையும், அரசியலும் வெவ்வேறானவைகள் அல்ல, அரசியல் பேசா கலையும், அரசியல் புரிதல் அற்ற படைப்பாளியும் முழுமை அடைவதில்லை என்பதையும் அதற்கு பிறகான காலங்கள் புரியவைத்தன. உலகமுழுவதும் நிகழ்ந்த போர்களைப்பற்றியும், இனப்படுகொலைப்பற்றியும் வாசிக்கத்துவங்கினேன். அதன் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களை பார்க்கவும் வாய்ப்புகள் அமைந்தது. அதுவரை சாகசத் திரைப்படங்களாக தெரிந்த பல்வேறு போர்த்திரைப்படங்களுக்கு பின்னே இருந்த அரசியலையும் வலியையும் உணர முடிந்தது. நான் பார்த்த போர்ப்படங்களையும், அப்படங்கள் பேசிய அரசியலையும் கட்டுரைகளாக என்னுடைய வலைப்பூவில் எழுதினேன். பிறகு அது ‘போர்த்திரை’ என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக