வெகுசன பொழுதுப்போக்குத் திரைப்படங்களில் இருக்கும் கதைவோட்டம், பார்வையாளனை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவே ‘திட்டமிட்டு’ அமைப்படும் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், சண்டைக்காட்சிகள், நடிகர் நடிகை தேர்வுகள், காட்சியமைப்புகள்,படத்தொகுப்பு, இசை போன்றவை ஒரு கலைப்படத்தில் இருப்பதில்லை. அது நேரடியாக சொல்லவந்த கதையை மட்டும் சொல்கின்றன. வேறெதைப்பற்றியும் சிந்திப்பதில்லை அல்லது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இவை இருண்டுப்படங்களை, இலகுவாக இப்படி புரிந்துக்கொள்ளல்லாம்.
வெகுசன சினிமா:
கதைமட்டும் போதாது, அதை சுற்றி அமைக்கப்படும் ஜனரஞ்சகமான ‘மேக் அப் / பேக்கேஜ்’ அவசியம் .
பிரதான நோக்கம்: பார்வையாளனை மகிழ்விப்பது.
கலைப்படங்கள்:
கதையும், அது பேசும் வாழ்வியலும், அரசியலும் மட்டுமே முக்கியம். மேல் பூச்சு அல்ல.
பிரதான நோக்கம்: வாழ்வை பிரதிபலிப்பது. குறிப்பாக வாழ்வின் துயரை பேசும் பொருளாக்குவது.
எனில், இவை இரண்டும் ஒன்றிணைய முடியாதா?
ஏன் ஒரு வெகுசன சினிமாவில் வாழ்கையைப் பேசமுடியாதா? கூடாதா? ; ஒரு கலைப்படம், சுவாரசியமானதாக இருக்க கூடாதா?
இந்தக்கேள்விகளுக்கு நம்முடைய திரைப்படங்கள் ஏதும் பதில் சொல்லியிருக்கின்றனவா? இருக்கின்றன.
(சும்மா புரிதலுக்காக என் நினைவிலிருந்து எழுதுகிறேன்) வீடு, மூன்றாம்பிறை, சந்தியாராகம், உதிரிப்பூக்கள், முல்லும் மலரும், மௌனராகம், பதினாறு வயதினிலே, மண்வாசனை, தண்ணீர் தண்ணீர், பாசமலர், பொற்காலம், அஞ்சாதே, காதல், வழக்கு எண் 18/9, தேவர்மகன், மகாநதி என்று பலப்படங்கள் இந்த லிஸ்டில் வரும். அண்மைக்காலங்கள் வந்த ‘மேற்கு தொடர்ச்சி மலை, டூலெட், ஜோக்கர், காக்கா முட்டை, கடைசி விவசாயி, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, தங்கமீன்கள், விசாரனை, மெட்ராஸ், பரியேறும் பெருமாள், அறம் போன்றப்படங்களைச் சொல்லலாம்.
இப்படங்களில், அழுத்தமாக ஒரு வாழ்வை, சூழலை எதார்த்தம் மீறாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கும், கூடவே பார்வையாளனை மகிழ்விக்க, கதையை மேலும் சுவாரசியமாக்கத் தேவையான நடிகர்த்தேர்வு, பாடல், இசை, சண்டைக்காட்சிகள் போன்றவைகளும் இணைக்கப்பட்டிருக்கும். அப்போதுதான் அது, பெரும்வாரியான பார்வையாளனை சென்று சேர்கிறது.
ஒரு திரைப்படத்தின் ஆதாரமான நோக்கம் என்ன? பெருவாரியான பார்வையாளனை சென்று அடைவது தானே?
அப்படியெல்லாம் இல்லை. பார்த்தா பார்க்கிறார்கள், இல்லனா விடு… என்ற நோக்கத்தில் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா? எனக்கு தெரிந்து பார்வையாளனை, வாசகனை மறுதலித்துவிட்டு எந்த படைப்பும், கலையும் இருக்க முடியாது.
கலையின் ஆதார நோக்கமே, அது பரவலாக சென்று சேர வேண்டும் என்பதுதான், எனில் அதற்கான முயற்சிகள் செய்வது எவ்வகையில், அப்படைப்பின் தரத்தை கீழ் இறக்கிவிடுபவையாக அவை இருக்க முடியும்?
அத்தகைய முயற்சிகளை சமரசங்கள் என்று ஏன் அழைக்கிறோம்? கூடுதல் பலம் என்றுதானே புரிந்துக்கொள்ள வேண்டும்?
ஆனால், சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் அப்படி நினைப்பதில்லை… அவர்களுடைய பார்வை வேறாக இருக்கிறது.
தொடர்ந்து பேசுவோம்…
(தொடரும்)
கருத்துகள்
கருத்துரையிடுக