படைப்பாளிகளைப்போலவே, சினிமா ஆர்வலர்களும், விமர்சகர்களும் இரண்டு வகையாக பிரிந்திருக்கிறார்கள். வெகுசன சினிமாவையும் கொண்டாடுவது, நாயகத்துதி, கேளிக்கை சமாச்சாரங்களை உயர்த்தி பேசுவது, விரும்புவது ஒருபுறமும், உலகசினிமா, கலைப்படைப்பு போன்றவற்றையும் ஆதரித்து பேசுவது என்று ஒரு சாராரும், அதெல்லாம் இல்லை, திரைப்படம் என்றால் அது கலைப்படங்கள்தாம், அதுவே உயர்ந்தக்கலை என்று பேசுபவர்களும், செயல்படுபவர்களும் இங்கே உண்டு. இருக்கலாம் தவறில்லை. பிரியாணியும் பிடிக்கும், கம்மங்கூழும் பிடிக்கும். அதிலென்ன தவறு.
கலைப்படைப்பு என்பது, வாழ்வியலை முன்னிறுத்த வேண்டும், அது தெளிந்த நீராக, கலப்படம் அற்ற உணவாக, நோயை தீர்க்கும் மருந்தாக, இருட்டில் ஏற்றப்படும் சிறு தீபமாக இருந்தல் வேண்டும் என்பது பொதுவான விருப்பம். அது முறையானது கூடத்தான். அதன் அடிப்படையில்தாம் ஒரு கலைப்படைப்பை ஏற்கிறோம் அல்லது நிராகரிக்கிறோம்.
எனில் எது நல்லப்படம்?
வாழ்வியலைப்பேசுவது, அரசியல்பேசுவது, எதார்த்தமாக இருப்பது, வன்முறையற்று, ஆபாசமற்ற, கெடுதலைப் போதிக்காமல் நன்மையை, தீமையை பிரித்துக்காட்டுவது என்று சொல்லிக்கொண்டே போகலாம். சரி இதெல்லாம் இருந்துவிட்டால், அது நல்லப்படமாகிவிடுமா?
பாலுமகேந்திரா ஒருமுறை சொன்னார், நல்லப்படம் என்பது ‘தாயின் உணவைப்போல இருக்கவேண்டும்’.
பிள்ளையின் தேவையறிந்து, அன்போடு, பக்குவத்தோடு, சுவையோடு, தரத்தோடு இருத்தல் வேண்டும். ஆதார நோக்கம் பிள்ளையின் பசியாற்றுதல், உடலுக்கு தேவையான சக்தியைக்கொடுத்தல் என்பதுதான். கூடவே அது தரமானதாக, சுவையானதாக, கெடுதல் அற்றதாக இருக்கிறதா என்பதைப் பார்த்துதான் ஒரு தாய், தன் சேய்க்கு உணவு ஊட்டுகிறாள். திரைப்படமும் அப்படித்தான் இருக்கவேண்டும்.
ஊட்டமும், சக்தியும் மட்டும் போதுமா? கூடவே சுவையும் தேவைதானே? உப்போ, இனிப்போ, காரமோ தேவையானவற்றை சேர்க்கத்தானே வேண்டும்.
அதுப்போலத்தான் சினிமாவும். அவர் திரைப்படங்கள் அப்படித்தான் இருந்தன.
சரி, ஒரு பார்வையாளனுக்கு எவ்வித பொறுப்புமில்லையா? ஒரு திரைப்படத்தை புரிந்துக்கொள்வதற்கு அவன் எவ்வித முனைப்பும், சிரத்தையும் எடுக்க வேண்டியது இல்லையா?
ஏன் இல்லை. கண்டிப்பாக இருக்கிறது. சொல்லப்போனால், அப்படி அவனுடைய கவனத்தை, மெனக்கெடலைக்கோரும் சினிமாவைத்தான் அவன் விரும்புகிறான். இது எல்லாத்திரைப்படங்களுக்கும் பொருந்தும். வெகுசன சினிமாவில் கூட அவன் எதிர்ப்பார்ப்பது அதைத்தான். அவன் ஊகிக்கக்கூடிய காட்சிகளை அவன் விரும்புவதே இல்லை. அவனுடைய கற்பனைக்கு, அறிவிற்கு சவால் விடும் திரைப்படங்களைத்தான் அவன் விரும்புகிறான். யோசித்தால் இது உண்மை என்பதும் புரியும். எனில், அவனால் ஏன் ஒரு கலைப்படைப்பை புரிந்துக்கொள்ள முடிவதில்லை. ஏன் அதற்கு அவன் எவ்வித முனைப்பும், சிரத்தையும் காட்டுவதில்லை?
அதற்கும் காரணம் இருக்கிறது.
(தொடரும்)
#koozhangalmovie #koozhangalthemovie #tamilcinema #tamil #cinema #movies #vijayarmstrong #கூழாங்கல் #கூழாங்கல்திரைப்படம்
கருத்துகள்
கருத்துரையிடுக