முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்படம் எனும் கலை: வரலாறும் வளர்ச்சியும் (பாகம் 01)



மனித வரலாற்றில், தொடர்ச்சியாகக் காணக்கிடைக்கும் ஒரு செயல், பதிந்து வைத்தல். மனிதன் தான் கண்டவற்றை, கடந்து வந்தவற்றை, உணர்ந்தவற்றை ஏதோ ஒரு ஊடகத்தைப் பயன்படுத்தி பதிந்து வைத்திருக்கிறான் காலம் தோறும். ஆரம்பம் முதலே, குகை ஓவியமாக, சிற்பமாக, பாடலாக தன் வாழ்வை பதிந்து வைக்கும் பழக்கம் மனிதனுக்கு இருந்து வந்திருக்கிறது. தன் வாழ்வில், தான் கடக்கும் சிறந்த கணங்களை, அனுபவத்தை, உணர்வைப் பதிந்து வைத்து, ரசிக்கும் பழக்கம் மனிதனுக்கு எப்படி உண்டாகிருக்கும் என்று யோசித்தோமானால்..

மனிதனுக்கு எல்லாமே கடந்த காலம்தான். கடந்துபோன காலங்களை அவனால் கைவிடவே முடிவதில்லை. வாழ்க்கை என்பது நிகழ்காலத்தின் அடிப்படையில் நிகழ்வது. இந்த கணம் மட்டுமே அதற்கு சாத்தியம். கடந்த கணங்களைப்பற்றி அது கவலை கொள்வதேயில்லை. முந்தைய கணத்தின் ஆதிக்கம் அல்லது விளைவு, நிகழ் கணத்தினை பாதிக்கும் என்றானாலும், அது இயற்கைக்குத்தான் பொருந்துகிறது. வாழ்விற்கல்ல. இயற்கை, அதன் முந்திய நிகழ்வின் அடிப்படையில் தன்னை தகவமைக்கிறது, வடிவமைக்கிறது. அது, தட்ப வெப்ப மாற்றமாகட்டும், மழையாகட்டும், சிறுதுளி பெருவெள்ளமாகுவதாகட்டும், மரம், கொடி, புல் வளர்வதாகட்டும், செடி பூப்பதாகட்டும், காய் கனிவதாகட்டும், வண்டுகள் தேன் சேகரிப்பதாகட்டும், புழு பட்டாம்பூச்சியாக உருமாறுவதாகட்டும், கருத்தரித்தலாகட்டும்.. எல்லாம், எல்லாம் முந்தைய நிகழ்வின் தொடர்ச்சிதான். இயற்கை அதை அனுமதிக்கிறது. முந்தைய நிகழ்வின் தொடர்ச்சியாக நிகழ்காலம் இருப்பதை

மனிதனும் அப்படியே இயங்க விரும்புகிறான். முந்திய கணத்தின் தாக்கம் அவனுக்கு இருந்துக்கொண்டே இருக்கிறது. கடந்த காலத்தின் அனுபவத்தை அவனால் கைவிட முடிவதில்லை. அது கொடுத்த சுகம், உணர்வு, சோகம், பாடம், அறிவு என்று ஏதோ ஒன்று நிகழ்காலத்தை கடக்க அவனுக்கு அவசியமாக இருக்கிறது. காலம் காலமாக மனிதன் அப்படித்தான் வாழ்ந்து வந்திருக்கிறான். கடந்த காலத்தின் மிச்சம் அல்லது தொடர்ச்சி எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது அவனிடம்

பொதுவாக நாம் அனுபவங்களை இரண்டு விதமாக சேகரிக்கிறோம். ஒன்று தகவல்களாக மற்றொன்று உணர்வாக. தகவல்களை சேகரித்து, அதற்கு அறிவு என்று பெயரிட்டு பாதுகாப்பதை மூளை என்னும் உறுப்பு எடுத்துக்கொள்கிறது. உணர்வுகளைச் சேகரித்து அதையே தன் அடையாளமாக நிலை நிறுத்திக்கொள்கிறது உருவமற்ற அரூப மனம். அறிவுக்கு, தகவல்கள் வேண்டும். தகவல்களின் தொகுப்பே அதன் வளர்ச்சியைக் குறிக்கிறது. மனதிற்கு நினைவுகள் வேண்டும். அதுவே அதனை சாஸ்வதமாக்குகிறது

எது எப்படியோ.. இன்றும் அத்தகைய பழக்கம் நம்மிடையே இருப்பதை நாம் மறுப்பதிற்கில்லை. அதன் நவீன வடிவங்களில் ஒன்று.. புகைப்படங்கள் எடுத்தல். ஆமாம், இன்று நாம் எடுத்து தள்ளும் புகைப்படங்களுக்கு பின் இருக்கும் உந்து சக்தி நம் முன்னோர்களிலிருந்து வந்தது. ஆதி காலத்து பழக்கம் அது என்றும், மனித மனதின் இருப்புக்கு அவசியாமானது அது என்றும் புரிந்துக்கொண்டால், ‘செல்ஃபியாகஎடுத்து தள்ளும் இன்றைய தலைமுறையைக் குறை சொல்லமாட்டோம் அல்லவா(?!).

சரி, விஷயத்திற்கு வருவோம்.. இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக வீணடிக்கப்படும் சக்தி அல்லது செயல் எது என்று எடுத்துக்கொண்டால், அது புகைப்படங்களாகத்தான் இருக்கும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், எல்லோர் கையிலும் கேமரா இருக்கிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் செல்ஃபோன் வடிவில் அது உங்கள் பாக்கெட்டில் இருக்கிறது. அப்புறம் என்ன? படங்களை எடுத்து தள்ள வேண்டியதுதானே..!? 

ஆயினும், புகைப்படம் என்னும் கலைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. நீண்ட நெடிய வளர்ச்சிப் பாதை ஒன்று இருக்கிறது. காலகட்டங்கள் பலவற்றை கடந்து வந்திருக்கிறது அது. தன் வழி எங்கும் பல நிகழ்வுகளை அது பதிவு செய்து வந்திருக்கிறது. மனித மனங்களிலிருந்து என்றென்று அகல முடியாத, அகற்ற முடியாத பல காட்சிகளையும், வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற நிகழ்ச்சிகள், மாமனிதர்கள் என்று எண்ணிலடங்கா பதிவுகள் அதன் வரலாற்றுச்சுவட்டில் உண்டு. மேலும் அக்கலை தன் போக்கில் வளர்ச்சியும் அடைந்து வந்திருக்கிறது. ‘கேமரா அப்ஸ்குரா’ (camera obscura )-இல் துவங்கிய அதன் பயணம் இன்றுமெகா ஃபிக்சல்’ (megapixel) எண்ணிக்கையில் வந்து நிற்கிறது

1830-இல் கண்டுபிடிக்கப்பட்ட கலை இது. இன்று, அதன் கருவிகள் மட்டுமே பல பில்லியன் டாலர் வருவாயைத் தரக்கூடிய பெருந்தொழிலாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதற்குக் காரணமாக இருந்த ஆதிகாலத்து கருவியானகேமரா அப்ஸ்குரா’ (Camera Obscura) 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆயினும் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரேபிய ஆய்வாளர்ஹாசன் இபின் ஹாசன்’ (Hassan ibn Hassan) அவர்கள், தன் குறிப்பொன்றில் இன்றைய அனலாக் கேமரா (analogue photography) செயல்படும் தொழில்நுட்பத்தை ஒத்த ஒரு நுட்பத்தைப்பற்றி விவரித்திருக்கிறார்



கேமரா அப்ஸ்குரா என்பது, அடிப்படையில் ஒரு கருப்புப் பெட்டி, அதில் ஒரு பக்கம் துளையொன்று இடப்பட்டிருக்கும். அதன் வழி ஊடுருவி வரும் ஒளியானது, பெட்டியின் அடுத்த பக்கத்தில் பிம்பத்தை உருவாக்கும். இந்த அடிப்படைத் தொழில்நுட்பம் இன்றைய கேமராக்களுக்கும் பொருந்தும். துளைக்கு பதில் லென்ஸ் வைத்திருக்கிறோம். லென்ஸின் வழி ஊடுருவி வந்த ஒளியை பதிவு செய்ய, முன்பெல்லாம் படச்சுருள், இப்போது சென்சார் அவ்வளவுதான். அடிப்படை என்னவோ அதேதான்

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தஜியோவானி’ (Giovanni Battista della Portacentury) என்னும் அறிஞர், கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி, எப்படி ஓவியம் வரைவதை இலகுவாக்கலாம் என்று எழுதினார்.   


வெளியே நிற்கும் நபரை, ஒரு துளையின் மூலம் பிரதிபலித்து, அதை ஓவியம் வரையும் கேன்வாஸ் மீது விழச்செய்து படம் வரைய உதவுவது. இது ஓவியம் வரைவதை இலகுவாக்கியது. இங்கே, கேமரா அப்ஸ்குரா ஒரு அறையைப்போன்று பெரியது. ஆனால், இதை யாரும் அங்கீகரிக்கவில்லை. ஜியோவானி மந்திரவித்தைகள் செய்வதாக குற்றம் சாட்டி, தண்டித்தார்கள். மறுமலர்ச்சி (Renaissance) காலகட்டத்தில் பல ஓவியர்கள் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார்கள், என்றாலும் யாரும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை. தாங்களும் குற்றம் சாட்டப்படுவோம் என்பது ஒருபுறமெனில், இது ஒரு ஏமாற்று வேலை என்று பலரும் நம்பியதும் ஒரு காரணம்.

ஆரம்பத்தில் புகைப்படத்துறையை ஒரு கலையாக யாரும் கருதவில்லை. சொல்லப்போனால், அது நுண்கலைகளை அழிக்க வந்ததாக கருதினார்கள். புகழ்பெற்ற ஓவியர்களானலியானர்டோ’ ‘ மைக்கேலேஞ்ஜலோ’ (Leonardo, Michelangelo) போன்றவர்கள் புகைப்படக்கலையின் நுணுக்கத்தை தன் ஓவியங்களில் பயன்படுத்தினார்கள் என்று நம்பப்படுகிறது.

கேமரா அப்ஸ்குராவின் எளிய வடிவம் ‘Pinhole Camera’ என்றழைக்கப்பட்டது. ஒளிப்புகா கருப்பு பெட்டி, அதில் ஒரு பக்கம் துளை ஒன்றிருக்கும், மறுபக்கம் பிம்பத்தைப் பதிவு செய்யும் வேதிப்பொருட்கள் பூசப்பட்ட காகிதம் அல்லது தகடு இருக்கும். இதுவே கேமராவின் ஆரம்ப வடிவம்



உலகின் முதல் புகைப்படம்:

இத்தனை ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு, இன்று நாம் பார்ப்பதற்குக் கிடைக்கும் உலகின் முதல் புகைபடம் என்ற பெருமையை இப்படம் பெறுகிறது. ‘View from the Window at Le Gras’ என்ற பெயருடைய இப்படம் 1826 அல்லது 1827 ஆம் ஆண்டுவாக்கில் பிரஞ்சு கண்டுபிடிப்பாளர்ஜோசப் நியெப்ஸ்’ (Joseph Niepce) அவர்களால் எடுக்கப்பட்டது. அவருடைய எஸ்டேட்டின் வெளிபுறப்பகுதியையும் கட்டிடத்தின் சுவரையும் சன்னல் வழியாக படம் பிடித்திருக்கிறார்



அப்போதைய தொழில்நுட்பத்தில், இக்காட்சியைப் பதிவு செய்ய எட்டு மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது (பல நாட்கள் ஆகின என்று சொல்லும் ஒரு ஆய்வாளரும் உண்டு). ஒரு காட்சியின் ஒளியை ‘Camera Obscura’-வைப் பயன்படுத்தி ஒன்றுகுவிப்பது எப்படி என்று தெரிந்துவைத்திருந்த மனிதர்களுக்கு அதைப் பதிவுசெய்வது எப்படியென்று தெரியவில்லை. அங்கேதான் ஜோசப் நியெப்ஸ் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார். "Bitumen of Judea" என்றழைக்கப்பட்ட, பெட்ரோலில் இருந்து எடுக்கப்பட்ட ஒருவகை தாரை ஒரு தகட்டில்(6.4 in × 8.0 in) பூசி, அதன் மீது கேமரா அப்ஸ்குராவைப் பயன்படுத்தி ஒளியை விழச்செய்தார். அத்தாரின் மீது ஒளி விழுந்த பகுதி கெட்டியாகியது. பிறகு வெள்ளை பெட்ரோலில் கழுவிப்பார்த்தபோது, மற்ற பகுதி கரைந்துப்போய், இத்தகைய காட்சி வடிவம் தங்கியிருந்தது. இந்த தகட்டை இன்றைய நெகட்டீவைப்போல (negative) பயன்படுத்தி, இதிலிருந்து மை பூசி பிரதி எடுத்திருக்கிறார்கள். அதற்கு  ‘Heliography’ என்ற தொழில்நுட்பம் பயன்பட்டிருக்கிறது. அதிக எடை கொண்ட தகடு மற்றும் எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாக இருந்ததுதான் இதிலிருந்து சிக்கல்



(அந்த தகடு)

1839 இல் சர் ஜான் ஹெர்ச்செல் (Sir John Herschel) என்ற கண்டுபிடிப்பாளர் இத்தகட்டுக்குப் பதில் கண்ணாடியால் ஆன நெகட்டீவை கண்டுபிடித்தார். அதே ஆண்டு, கிரேக்க வார்த்தைகளான ‘Fos’ (ஒளி) மற்றும் ‘Grafo’ (வரைதல்) ஒன்றிணைத்து போட்டோகிராஃபி (Photography) என்ற பதத்தை உருவாக்கினார். ஒளியால் வரைதல்! ஒளியோவியம்! நல்லாயிருக்கில்ல..!

தொழில்நுட்பம் கொஞ்சம் வளர்ந்திருந்தபோதும், புகைப்படம் எடுத்தல் வளரவில்லை. அதற்கு பல  ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் வசதி வாய்த்தவர்கள் தங்களை எடுத்துக்கொண்ட புகைப்படங்களாகத்தான்(Portraits) இருந்தது. பல கண்டுபிடிப்புகள், மேம்படுத்தல்களுக்குப் பிறகு, 1888-இல் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான கொடாக் (Eastman's Kodak) நிறுவனம் உதயமாயிற்று. அது அறிமுகப்படுத்திய ஒரு கேமராதான் இன்று நாம் எல்லோரும், கேமராவும் கையுமாக அலைவதற்குக் காரணமாக இருந்தது
————————

பின் குறிப்பு

வரும் கட்டுரைகளில், கேமரா என்னும் கருவி வடிவமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக அதன் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்ததையும், புகைப்படம் என்னும் கலை அதன் எல்லைகளை விரித்துக்கொண்டு வந்ததையும் பற்றி விரிவாக பார்ப்போம். கூடவே அதன் வரலாற்றுச் சுவடையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

[அதற்கு முன்பாக உங்கள் வாழ்வில் மறக்க முடியா புகைப்படத்தை, அதன் காரணங்களோடு எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் வாழ்வு சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வரலாற்று நிகழ்வாகவோ கூட இருக்கலாம்.]


www.imageworkshops.in
www.vijayarmstrong.com




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

துப்பு கெட்டவர்கள் நாங்கள்..!

(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்று இணையத்தின் சாத்தியத்தில் பொதுவெளியில் வைக்க முடிந்ததனால், இங்கே பதிவேற்றுகிறேன். உங்கள் நேரத்தைச் செலவழித்து படிக்க வேண்டிய அவசியமற்றது. ஓய்வாக இருப்பின், ஒரு சினிமாக்காரனின் சுய புலம்பலைப் படிக்க ஆர்வம் இருப்பின் தொடருங்கள்..) கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டு முறை என் கிராமத்திற்கு சென்று வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இரண்டு பயணத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் என்றாலும் இவ்விரண்டு பயணமும் ஒரே வித அனுபவத்தையே கொடுத்தன. இதை அனுபவம் என்று சொல்லுவதை விட, ஒருவித மன அயர்ச்சி என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். இரண்டு பயணங்களிலுமே என் பால்யகால நண்பர்களில் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பதினேழு பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அவர்களில் சிலரைச் சந்தித்தேன். பிளஸ் டூ படித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு பெங்களூர் போனவன். அங்கே ஏழுவருடம், பின் சென்னையில் பத்துவருடம் என என் கிராமத்தையும் நண்பர்களையும் பிரிந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இடையில் அவ

‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்

‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன

உலகம் உங்கள் கையில்..!

காலம் மாறிக்கொண்டேயிருக்கிறது. தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லா துறைகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஊடகத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டு வருகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வானொலிகள் செய்த சேவையை, இன்று சமூக வலைத்தளங்களே செய்து விடுகின்றன. அது பொழுதுபோக்கு அம்சமாகட்டும், தகவல்களாகட்டும், செய்தியாகட்டும், இசையாகட்டும் எல்லாம் நொடியில் நம்மை வந்தடைந்துவிடுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என இன்று சகஜமாக புழக்கத்தில் இருக்கும் அத்தனையும் வளர்ச்சியின் வெளிப்பாடுதான். இவையனைத்தும் இணையம் என்னும் மந்திரத்தால் விளைந்தது. 90-களில் இணையம் பொதுப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அது வருங்காலத்திற்கான வரப்பிரசாதம் என்றார்கள். உலகத்தை வலைகளால் இணைக்குமென்றார்கள். இனி தகவல்கள் என்பது தனிவுடமை அல்ல, அது பொதுவுடமை என்றார்கள். உலகத்தில் இருக்கும் அத்தனை மூலையும் இணையும் என்றார்கள். வருங்காலமும் அப்படியே ஆயிற்று. இன்று இணையம், தவிர்க்க முடியா சக்தி. இணையம் கடைக்கோடி மானிடனையும் தொட்டுவிட்டது. இதயம் தீண்டாதவன் கூட இருக்கலாம்,